வாரியார் சுவாமிகள் (குருபூஜைத் திருநாள் - ஐப்பசி ஆயில்யம்)

வேலூர் மாவட்டத்திலுள்ள பரம புண்ணியத் தலம் காங்கேயநல்லூர், சென்னையிலிருந்து சுமார் 2 1/2 மணி நேர பயணத் தொலைவில் அமைந்துள்ளது. காங்கேயக் கடவுளான நம் கந்தப் பெருமானுக்கு பெருவிருப்புடைய தலமாக விளங்குவதால் காங்கேயநல்லூர். திருமுருக வாரியார் சுவாமிகளின் அவதாரத் தலம். நம் சுவாமிகள் நவம்பர் 7 1993 அன்று சிவமாம் பேறு பெற்றுக் குகசாயுச்சியப் பெருநிலையை எய்திய பின்னர் சிவத்தொண்டால் பழுத்திருந்த அப்பெருமகனாரின் திருமேனியை இத்தலத்தில் சமாதி கொள்ளச் செய்து அவ்விடத்திலேயே அழகிய பிருந்தாவன வளாகமொன்றையும் உருவாக்கினர்.

ஏகாந்தமான சூழலில் அமையப் பெற்றுள்ள இச்சமாதிக் கோயிலில் சுவாமிகள் தனக்கே உரித்தான அதீத கருணை ததும்பும் திருப்பார்வையோடும், தெய்வீகப் புன்னகையுடனும் அதி ஆச்சர்யமான திருக்கோலத்தில் பிருந்தாவனக் கருவறையில் எழுந்தருளி இருக்கின்றார். சுவாமிகளின் சமாதிக் கோயிலுக்கு நேரெதிரில் கந்தக் கடவுளின் புராதனத் திருக்கோயில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் ஒவ்வொரு அணுவிலும் சுவாமிகளின் திருப்பணி பொதிந்துள்ளது. 
அடியவர் வழிபாடு நம் இந்து தர்மத்தில் மிகமுக்கிய இடத்தினை வகிக்கின்றது. அடியவர் வழிபாடு அடியவர்களை அடைவதோடு மட்டுமல்லாது அப்பெருமக்களின் உள்ளத்தில் எழுந்தருளியுள்ள சிவபரம்பொருளையும் சென்று சேர்கின்றது என்று திருமந்திரம் அறுதியிடுகின்றது. 

நேரம் அமைத்துக் கொண்டு காங்கேயநல்லூர் சென்று ஆறுமுகக் கடவுளையும், அப்பெருமானின் திருவடிகளில் நிலை கொண்டுள்ள நம் சுவாமிகளையும் தரிசித்துப் பணிவோம். சுவாமிகளின் தரிசனம் பரம புண்ணியமானது; வல்வினைகளை சுட்டெரிக்க வல்லது; சீரிய பக்தியையும் நல்லொழுக்கத்தையும் ஆன்ம பக்குவத்தையும் ஏனைய நலன்கள் அனைத்தையும் நல்க வல்லது. 
-
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!

வாரியார் சுவாமிகள் (காங்கேயநல்லூர் பிருந்தாவன வளாகம்):

வேலூர் மாவட்டத்தில், சென்னையிலிருந்து சுமார் 2 1/2 மணி நேர பயணத் தொலைவில் அமைந்துள்ளது  காங்கேயநல்லூர். மிகத் தொன்மையான முருகன் திருக்கோயிலொன்று விளங்கி வரும் இப்புண்ணிய பூமியே நம் வாரியார் சுவாமிகளின் அவதாரத் தலமாகவும் திகழ்கின்றது. 
சுவாமிகள் 1993ஆம் ஆண்டு ஆறுமுகக் கடவுளின் திருவடிகளை அடைந்த பின்னர் அப்பெருமகனாரின் திருமேனியைக் காங்கேயநல்லூர் முருகன் ஆலயத்திற்கு நேரிதிரில் சமாதி கொள்ளச் செய்கின்றனர். ('சரவண பவன் உணவகத்தினர்' கைங்கர்யத்தினால்) அவ்விடத்திலேயே அழகியதொரு  பிருந்தாவன வளாகமும் உருவாக்கப் பெறுகின்றது. இதன் கருவறையில் சுவாமிகள் அமர்ந்த திருக்கோலத்தில், அதீத கருணை ததும்பும் திருப்பார்வையோடும், தெய்வீகப் புன்னகையுடனும் அற்புதத் தன்மையில் எழுந்தருளி இருக்கின்றார். காண்பதற்கரிய திருக்காட்சி.
இவ்வளாகத்தின் பின்புறம், 'சரவண பவன் உணவகத்தினர்' தங்கும் விடுதியொன்றினையும் (குறைந்த கட்டண சேவையில்) அமைத்துள்ளனர். அனுதினமும் காலை 11.30 மணி அளவில் நடந்தேறும் தீபாராதனை அவசியம் தரிசிக்க வேண்டிய நிகழ்வு. இதன் முடிவில் 'சரவண பவன் உணவகம்' சார்பாக, அங்குள்ளோர் அனைவருக்கும் பிரசாத உணவு வழங்கப் பெற்று வருகின்றது.
சுவாமிகளுக்குப் பன்னிரு சைவத் திருமுறைகள் மற்றும் அருணகிரியாரின் திருப்பாடல்களில் அதீத ஈடுபாடு ஆதலின் இவ்வளாகத்தில் சுவாமிகளின் திருமுன்பு அமர்ந்து, தேவார; திருவாசக; திருப்புகழ் திருப்பாடல்களைப் பாராயணம் புரிந்து வணங்கி, குருவருளோடு வேலாயுதக் கடவுளின் திருவருளையும் ஒருசேரப் பெற்று மகிழ்வோம்!!!
-
(கந்தர் அலங்காரம் - திருப்பாடல் 102)
திருவடியும் தண்டையும் சிலம்பும் சிலம்பூடுருவப்
பொரு வடிவேலும் கடம்பும் தடம்புயம் ஆறிரண்டும்
மருவடிவான வதனங்கள்ஆறும் மலர்க் கண்களும் 
குருவடிவாய் வந்தென் உள்ளம் குளிரக் குதிகொண்டவே!!!


வாரியார் சுவாமிகள் (திருக்குறளில் ஸ்ரீவைகுந்தம் - ஒலிப்பதிவு)

(திருமுருக வாரியார் சுவாமிகளின் விரிவுரையிலிருந்து சில மணித்துளிகள்):
-
தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு!!!