திருப்புகழில் சுந்தரர் (ஓலை காட்டி ஆட்கொண்ட நிகழ்வு):

நம்பியாரூரரின் திருமண வைபவம் நடந்தேறி வரும் மண்டபத்திற்கு சிவபரம்பொருள் கிழ வேதியராய் எழுந்தருளி வந்து, அனைவரும் காணுமாறு உரத்த குரலில் 'இச்சுந்தரன் எனக்கு அடிமை' என்று அறிவிக்கின்றார். சுந்தரனார் அவ்வுரை கேட்டு வெகுண்டெழுந்து; விரைந்து சென்று இறைவரின் திருக்கரங்களிலிருந்த ஓலையினைப் பற்றிக் கிழிக்கின்றார். 

நால்வேதங்களும் முறையிட்டு இத்தன்மையினர் என்றறியவொண்ணா ஆதிப் பரம்பொருளான சிவபெருமான் வழியடிமைத் தொண்டரான சுந்தரனாரின் கரங்களைப் பற்றிக் கொண்டு 'இது முறையோ என்று முறையிடுகின்றார்'. இதனைப் பின்வரும் அற்புதத் திருப்பாடலில் தெய்வச் சேக்கிழார் பதிவு செய்கின்றார், 
-
(பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 192)
அருமறை முறையிட்(டு) இன்னும் அறிவதற்கரியான் பற்றி
ஒருமுறை முறையோ என்ன உழைநின்றார் விலக்கி இந்தப்
பெருமுறை உலகில் இல்லா நெறிகொண்டு பிணங்குகின்ற
திருமறை முனிவரே நீர் எங்குளீர் செப்பும்என்றார்

மேற்குறித்துள்ள அற்புத நிகழ்வினை நம் அருணகிரிப் பெருமான் 'இருளளகம் அவிழமதி' என்று துவங்கும் திருவண்ணாமலை திருப்புகழில் பதிவு செய்து போற்றுகின்றார்,
-
ஒருசிறுவன் மணமதுசெய் போதில்எய்த்து வந்து
     கிழவடிவு கொடுமுடுகி வாசலில் புகுந்து
          உலகறிய இவன்அடிமையாம் எனக் கொணர்ந்து ...சபையூடே
-
ஒருபழைய சருகுமடி ஆவணத்தை அன்று
     உரமொடவனது வலியவே கிழிக்க நின்று
          உதறி முறையிடு பழைய வேத வித்தர் தந்த ...சிறியோனே

'மாதர் கொங்கையில்' எனும் உத்திரமேரூர் திருப்புகழில், முக்கண் முதல்வர் சுந்தரனாரை ஆவணம் காட்டி ஆட்கொண்டருளிய நிகழ்வினைப் போற்றுகின்றார். 
-
சாதனம்கொடு தத்தா !மெத்தென
     வே நடந்துபொய் பித்தா உத்தரம்
          ஏதெனும்படி தற்காய் நிற்பவர் ...சபையூடே
-
தாழ்வில் சுந்தரனைத் தானொற்றி கொள்
     நீதி தந்திர நற்சார்புற்றருள்
          சால நின்று சமர்த்தா வெற்றிகொள் ...அரன்வாழ்வே
*
'தந்தமும் துன்பவெஞ் சிந்தை' என்று துவங்கும் மற்றுமொரு பொதுத் திருப்புகழில், 'சுந்தரனாரின் உலகியல் பந்தத்தை முடிவிக்கப் பரிவுடன் தோன்றி 'இவன் எனது அடிமை' என்றருளிச் செய்து, வன்தொண்டரை அருளியல் வாழ்விற்குப் புகுமாறு செய்தருளிய ஆதிப்பரம்பொருள்' என்று போற்றிப் பரவுகின்றார் நம் அருணகிரியார்,
-
சுந்தரன் பந்தமும் சிந்த வந்தன்புடன்
     தொண்டன் என்றன்று கொண்டிடும் ஆதி

திருப்புகழில் சுந்தரர் (சிவபெருமான் தூது):

சுந்தரர் மீது பரவையார் கொண்டிருந்த ஊடலைத் தீர்த்தருள, தனிப்பெரும் தெய்வமான சிவபெருமான் திருவாரூர் திருவீதிகளில்; நள்ளிரவு வேளையில்; திருப்பாதங்கள் தோய இருமுறை நடந்து, பரவையாரின் இல்லத்திற்குத் தூதாகச் சென்ற அற்புத நிகழ்வினைப் பெரிய புராணத்தில் தெய்வச் சேக்கிழார் பதிவு செய்து போற்றுகின்றார்.

நம் அருணகிரிப் பெருமானும் இவ்வரிய நிகழ்வினைப் பின்வரும் 5 திருப்புகழ் திருப்பாடல்களில் போற்றிப் பரவி மகிழ்கின்றார், 

(1)
'கருவின் உருவாகி' என்று துவங்கும் பழனித் திருப்புகழில்
பரவைமனை மீதில்அன்று ஒருபொழுது தூது சென்ற
     பரமன்அருளால் வளர்ந்த ...குமரேசா

(2)
'கொந்தள ஓலை குலுங்கிட' என்று துவங்கும் இலஞ்சித் திருப்புகழில்,
சுந்தரர் பாடல் உகந்திரு தாளைக்
     கொண்டு நல்தூது நடந்தவர் ஆகத்
          தொந்தமொடாடி இருந்தவள் ஞானச் ...... சிவகாமி

(3)
'கத்தூரி அகரு ம்ருகமத' என்று துவங்கும் பட்டாலியூர் திருப்புகழில், 

அச்சோ எனவச உவகையிலுட் சோர்தலுடைய !பரவையொ
     டக்காகி விரக பரிபவம் ...அறவே பார்
-
பத்தூரர் பரவ விரைவுசெல் மெய்த்தூதர் விரவ வருதரு
     பற்றாய பரம பவுருஷ ...... குருநாதா 

(4)
'பாசத்தால் விலை கட்டிய' என்று துவங்கும் பழமுதிர்சோலை திருப்புகழில்,

'தேடிப் பாடிய சொற் புலவர்க்(கு) இதமாகத் தூது செல் அத்தர்'

(5)
'பரவைக்கு எத்தனை' என்று துவங்கும் பொதுத் திருப்புகழில், 

பரவைக்கெத்தனை ...விசைதூது
   பகரற்குற்றவர் ...என மாணுன்
      மரபுக் குச்சித ...ப்ரபுவாக
         வர மெத்தத் தர ...வருவாயே

திருப்புகழில் சுந்தரர் (நெல்மலை பெற்ற நிகழ்வு):

'குண்டையூர் கிழார்' என்பார் சுந்தரரின் மீது அதீத அன்பும் பக்தியும் பூண்டொழுகி வரும் பண்பினர். வன்தொண்டருக்கு நாள்தோறும் திருவமுது அமைத்தல் பொருட்டு, செந்நெல்; பருப்பு வகைகள்; சர்க்கரை முதலியவைகளை பரவையாரின் திருமாளிகைக்கு அனுப்புவிக்கும் திருத்தொண்டினை இடையறாது புரிந்து வருகின்றார்.  

ஒரு சமயம் மழையின்மையால் போதுமான உணவுப் பொருட்களை அனுப்ப இயலாது போகின்றது. திருத்தொண்டு தடையுற்றதால் பெரிதும் வருந்தும் கிழாருக்கு, சுந்தரரின் பொருட்டு சிவபரம்பொருள் நெல்மலைகளை அளித்தருள் புரிகின்றார். பின்னர் சுந்தரரின் வேண்டுதலுக்கு இரங்கி, (சிவபூத கணங்களின் வாயிலாக) அந்நெல்மலைகளைக் குண்டையூரினின்றும் எடுத்துத் திருவாரூர் வீதிகளெங்கும் நிறைந்து விளங்குமாறு செய்தருள் புரிகின்றார். 

அருணகிரிப் பெருமான் 'நெற்றி வியர்த்துளி' என்று துவங்கும் பழனித் திருப்புகழில் இவ்வற்புத நிகழ்வினைப் போற்றிப் பரவுகின்றார், 
-
கற்ற தமிழ்ப் புலவனுக்குமே !மகிழ்
     வுற்றொரு பொற்கொடி களிக்கவே பொரு
          கற்பனை நெற்பல அளித்த காரணன் ...அருள்பாலா

திருப்புகழில் சுந்தரர் (முதலை வாய்ப் பிள்ளை நிகழ்வு):

சுந்தரர், சேரமான் நாயனாரின் கொடுங்களூர் பகுதிக்கு 2ஆம் முறையாய்ப் பயணம் மேற்கொள்கின்றார். திருப்புக்கொளியூர் எனும் அவிநாசித் தல எல்லையை நெருங்குகையில், அருகருகாய் அமைந்திருந்த இரு இல்லங்களில்; ஒன்றில் மங்கல ஒலியும் மற்றொன்றில் அழுகுரலும் ஒரே சமயத்தில் கேட்க நேரிட, அதுகுறித்து அங்குள்ளோரிடம் வினவுகின்றார். 

'அவ்வீடுகளில் வாழ்ந்திருந்த; 5 வயது நிரம்பிய இரு பாலகர்கள் முன்பொரு சமயம் மடுவினில் விளையாடியிருந்த சமயத்தில் ஒரு பிள்ளையை முதலையொன்று விழுங்கி விட, தப்பிப் பிழைத்த மற்றொரு பாலகனுக்கு அன்றைய தினம் உபநயன விழா நிகழ்ந்தேறி வருகின்றது. மாண்ட பிள்ளையைப் பெற்றவர் தங்களது புதல்வனும் பிழைத்திருந்தால் இது போன்றதொரு விழாவினைச் செய்திருக்கலாமே என்றெண்ணி அழுத வண்ணமிருக்கின்றனர்' என்றறிகின்றார்.

மாண்ட பிள்ளையின் பெற்றோர் சுந்தரனாரின் வருகையைக் கண்டு, தங்கள் கவலைகளை முற்றிலும் மறந்தவர்களாய், 'சுவாமி, உங்களைப் பலகாலும் தரிசித்து வணங்க பெருவிருப்பம் கொண்டிருந்தோம். எங்கள் அன்பு பொய்க்கவில்லை, நீங்கள் இவ்விடத்து எழுந்தருளும் பெறற்கரிய பேற்றினை இன்று பெற்றோம்' என்று  சுந்தரரின் திருவடிகளை வணங்கி மகிழ்கின்றனர். 

சுந்தரர், 'மைந்தனை இழந்த துன்பமும் மறந்து நாம் வரப்பெற்றமைக்கு இவ்விதம் மகிழ்கின்றனரே, சிவனடியார்கள் மீது இத்தூய உள்ளத்தினருக்கு எத்துனை ஈடுபாடு' என்று நெகிழ்ந்து, அனைவருடனும் முன்னர் மடுஇருந்த இடத்திற்குச் செல்கின்றார். வறண்ட நிலையில் காணப்பெறும் அவ்விடத்தில் 'எற்றான் மறக்கேன் எழுமைக்கும்' எனும் பனுவலால் அவிநாசியுறைப் பரம்பொருளிடம் பிள்ளைக்காக விண்ணப்பிக்கின்றார்.

'கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே' எனும் 4ஆம் திருப்பாடலைப் பாடிய கணத்திலேயே, அவிநாசி இறைவரின் ஏவலால், கூற்றுவன் வறண்டிருந்த அம்மடுவை நீரினால் நிறைத்து, முதலையை உயிர்ப்பித்துப் பின் அதன் வாயினின்று, உயிர்ப்பிக்கப் பெற்ற மாண்ட பாலகனை, கடந்த ஆண்டுகளின் வளர்ச்சியோடும் கூடிய நிலையில் உமிழுமாறு செய்கின்றான். பிள்ளையின் பெற்றோர் பிள்ளையை ஓடிச்சென்று வாரியணைத்து, நன்றிப் பெருக்குடன் சுந்தரரின் திருவடிகளில் வீழ்ந்து பணிகின்றனர். 

அருணகிரிப் பெருமான் மேற்குறித்துள்ள அற்புத வரலாற்று நிகழ்வினை இரு திருப்பாடல்களில் பதிவு செய்து போற்றுகின்றார்,

(1)
'மதப்பட்ட விசாலம்' என்று துவங்கும் அவிநாசித் திருப்புகழில், 

-
செறிப்பித்த கராஅதின் வாய்!மக
     வழைப்பித்த புராண க்ருபாகர
          திருப்புக்கொளியூர் உடையார் புகழ் ...தம்பிரானே
(சொற்பொருள்: கரா - முதலை)

(2)
'அழகு தவழ் குழல்' என்று துவங்கும் பழமுதிர்ச்சோலை திருப்புகழில், 

-
முடுகு முதலையை வரித்துக் கோட்டி
     அடியர் தொழ மகவழைத்துக் கூட்டி
          முறைசெய் தமிழினை விரித்துக் கேட்ட ...முதுநீதர்

திருப்புகழில் சுந்தரர் (பொன் பெற்ற நிகழ்வு):

பரவையார் 'அடியவர் பெருமக்களுக்கு வேண்டுவன அளித்து மகிழ்தலாகிய திருத்தொண்டினைப் புரிந்து வரும் பண்பினர்' என்பதையும், 'பரவையார் திருமாளிகையில் பெரும்பாலான சமயங்களில் அடியவர்களோடு சேர்ந்தே நம் சுந்தரனார் திருவமுது செய்துள்ளார்' எனும் குறிப்பையும் பெரிய புராணத்தின் பல்வேறு பகுதிகள் வாயிலாக நாம் அறியப் பெறலாம். ஆதலின் 'தம்பிரான் தோழர் பரவையாருடைய திருத்தொண்டிற்காகவே சிவபரம்பொருளிடம் பொன் வேண்டிப் பெற்றுள்ளார்' என்பது தெளிவு. 
இவ்விதமாய் வன்தொண்டர் 4 திருத்தலங்களில் சிவமூர்த்தியிடம் பொன் பெற்று மகிழ்ந்துள்ளார், அவை திருப்புகலூர்; திருமுதுகுன்றம்; திருப்பாச்சிலாச்சிரமம்; திருஓணகாந்தன்தளி. 
திருமுருகன்பூண்டியில் சுந்தரர் பொன் வேண்டி விண்ணப்பிக்கவில்லை, சேரமான் நாயனார் தமக்களித்திருந்த பொற்குவியலை வேடர்கள் பறித்துச் சென்று விட, அது குறித்து முறையிட்டுத் திருவருளால் மீண்டும் அவைகளைப் பெற்று மகிழ்கின்றார். விண்ணப்பம் இல்லாமையால் பொன் பெற்ற திருத்தலமாக இது குறிக்கப் பெறுவதில்லை. 
இறுதியாய்த் திருநாகைக்காரோணத்தில், முத்தாரம்; மாணிக்க வயிர மாலைகள்; கத்தூரிச் சாந்து; பட்டாடை;  பொற்கட்டிகள்; நறுமணப் பொருட்கள்; திருவாரூர் செல்வத்தில் மூன்றிலொரு பங்கு; குதிரை; பொன்னாலான உடைவாள்; பொற்றாமரைப் பூ, பட்டுக் கச்சம்; காய்கறிகளோடு கூடிய சுவையான நெய்யுணவு; முத்து மாலைகள் முதலிய எண்ணிறந்த செல்வங்களை விண்ணப்பித்துப் பாடுவதால், பொன் மட்டுமே பெற்ற திருத்தல வரிசையில் இத்தலமும் பொதுவில் குறிக்கப் பெறுவதில்லை.

அருணகிரிப் பெருமான் 'சுந்தரனார் பரவையாரின் பொருட்டு பொன் வேண்டிப் பெற்றுள்ள நிகழ்வுகளை' 'மதப்பட்ட விலாசம்' என்று துவங்கும் அவிநாசித் திருப்புகழில் நயம்பட பதிவு செய்து போற்றுகின்றார், 
-
இதப்பட்டிடவே கமலாலய
     ஒருத்திக்கிசைவான பொனாயிரம் 
          இயற்றப்பதி தோறும் உலாவிய ...தொண்டர்

திருப்புகழில் சுந்தரர் ( வழித்துணையாய் வந்த அவிநாசி இறைவர்):

பெரியபுராணத்தில் நம் சுந்தரனாருக்கு இறைவர் வழித்துணையாக வந்ததாக ஒரேயொரு நிகழ்வினை மட்டுமே தெய்வச் சேக்கிழார் பதிவு செய்கின்றார். 
-
முதலில் அந்நிகழ்வினைச் சற்று நினைவு கூர்வோம்,
-
சுந்தரர் முதுகுன்றத் தலத்திற்குப் பயணித்துச் செல்லும் வழியில் கூடலையாற்றூர் தலத்தின் எல்லையை நெருங்குகின்றார். எனினும் அவ்வூருக்குள் செல்லாமல் மேலும் முதுகுன்றம் நோக்கி முன்னேறிச் செல்ல முனைகின்றார். ஆற்றூருறைப் பரம்பொருள் வேதியரொருவரின் வடிவெடுத்து, சுந்தரர் காணுமாறு அவ்வழியே எழுந்தருளி வருகின்றார். சுந்தரர் மறையவரை வணங்கி முதுகுன்றம் செல்லும் மார்க்கத்தினை வினவ, இறைவரோ 'கூடலையாற்றூருக்குச் செல்லும் வழி இதுவே' என்று மற்றொரு மார்க்கத்தினைக் காண்பித்துப் பின் அவ்வழியில் தாமே வழித்துணையாய்ச் சிறிது தூரம் வரையிலும் வந்து பின்னர் மறைகின்றார். 

எனினும் அருணகிரிப் பெருமான்  'மதப்பட்ட விலாசம்' என்று துவங்கும் அவிநாசித் திருப்புகழில் பெரியபுராணத்தில் இடம்பெறாத, சுந்தரர் வரலாறு குறித்த மற்றுமொரு அற்புத நிகழ்வினை வெளிப்படுத்துகின்றார். இனி நிகழ்விற்குள் செல்வோம், 
-
சுந்தரர் அவிநாசித் தலம் நோக்கிப் பயணித்து வருகையில் ஓரிடத்தில் திசையறியாது திகைத்ததாகவும், அத்தருணத்தில் இறைவர் வழித்துணையாய்ச் சிறிது தூரம் வரையிலும் வந்து சகாயம் புரிந்து பின்னர் மறைந்ததாகவும் பதிவு செய்கின்றார். 
-
கீழ்க்குறித்துள்ள முதல் 4 வரிகளில், சுந்தரருக்கு இறைவர் திருக்குருகாவூர் தலத்தருகே பொதிசோறு அளித்தருளிய நிகழ்வினைப் பதிவு செய்துப் பின் இறுதி இரு வரிகளில், 'அவிநாசியிலே வரு திசைக்குற்ற சகாயனுமாகி மறைந்து போமுன்' என்று அவிநாசி மார்க்கத்தில் இறைவர் வழித்துணையாய் வந்தமையைப் பதிவு செய்கின்றார், 
-
இசைக்கொக்க இராசத பாவனை
     உளப் பெற்றொடு பாடிட வேடையில் 
          இளைப்புக்கிட வார்மறையோன் என வந்துகானில் 
-
திதப்பட்டெதிரே பொதி சோறினை
     அவிழ்த்திட்(டு) அவிநாசியிலே வரு
          திசைக்குற்ற சகாயனுமாகி மறைந்து போமுன்

'அவிநாசி' என்ற தலப் பெயரைக் அருணகிரியார் குறித்திராவிடில் 'திசைக்குற்ற சகாயனுமாகி மறைந்து போமுன்' எனும் வரிகளை கூடலையாற்றூர் நிகழ்வுடன் எளிதில் பொருத்தியிருக்கலாம். எனினும் இவ்விடத்தில் திருப்புகழ் ஆசிரியர் 'அவிநாசியிலே வரு' என்று ஐயத்திற்கு இடமின்றிக் குறித்திருப்பதால் இதற்குப் பிறிதொரு பொருள் கொள்ள இடமில்லை.

சுந்தரர் இருமுறை கேரள தேசத்திற்கு அவிநாசி வழியே பயணித்துச் சென்றுள்ளதாகப் பெரிய புராணம் பதிவு செய்கின்றது. முதல் பயணத்தில் சேரமான் பெருமாள் நாயனார் மற்றும் அவர்தம் படையினரும் உடனிருந்தமையால் அச்சமயத்தில் திசையறியாத நிலை உருவாகியிருக்க வாய்ப்பில்லை. சுந்தரனார் 2ஆம் முறையாக சேரமான் நாயனாரின் கொடுங்களூருக்குப் பயணிக்கையில், உடன் சில பரிசனங்களையும் திருவாரூரிலிருந்து அழைத்துச் சென்றதாகச் சேக்கிழார் பெருமான் பதிவு செய்கின்றார். ஆதலின் 'அச்சமயத்திலேயே இறைவர் வழித்துணையாய் வந்தருள் புரிந்துள்ளார்' என்பது தெளிவு.  

தெய்வச் சேக்கிழாரின் அவதாரக் காலத்திலிருந்து சுமார் 4 நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தோன்றியுள்ள நம் அருணகிரிப் பெருமானின் வாயிலாக, சுந்தரர் குறித்த இக்குறிப்பு வெளிப்பட்டிருப்பது வியந்து போற்றுதற்குரியது.

திருப்புகழில் சுந்தரர் (வெள்ளை யானையில் திருக்கயிலை சென்ற நிகழ்வு):

சுந்தரரின் அவதார நோக்கம் முடிவுறும் சமயத்தில் திருக்கயிலைப் பரம்பொருள் 'நம்பால் ஒருமையுற்ற சிந்தையுடைய ஆரூரனை (அயிராவணம் எனும்) வெள்ளை யானையில் ஏற்றுவித்து உடன் இங்கு அழைத்து வருவீர்' என்று நான்முகக் கடவுள் உள்ளிட்ட தேவர்களுக்குக் கட்டளையிட்டு அருள் புரிகின்றார்.

தேவேந்திரன் உள்ளிட்ட எண்ணிறந்த தேவர்கள்; நான்முகக் கடவுளான பிரமன்; பாற்கடல் வாசரான ஸ்ரீமகாவிஷ்ணு ஆகியோர் சுந்தரனாரை எதிர்கொண்டழைக்க (அயிராவணத்துடன்) அஞ்சைக்களத்திற்குச் செல்கின்றனர். வழிபாடு முடித்துத் திருவாயிலினின்றும் வெளிவரும் வன்தொண்டரை எதிர்கொள்ளும் தேவர் குழாம், தம்பிரான் தோழரிடம் இறைவரின் ஆணையினைத் தெரிவித்துப் பணிகின்றனர். நாவலூர் வேந்தர் உளமுருகிக் கண்ணீர் பெருக்கி, செயலொன்றும் அறியாதவராய், அயிராவணத்தினை வலம் வந்து, சேரமான் பெருமாள் நாயனாரை உள்ளத்து எண்ணியவாறே அதன் மீது ஆரோகணித்து விண்மிசை பயணித்துச் செல்கின்றார். 

சுந்தரர் திருக்கயிலைக்கு சென்று கொண்டிருப்பதைத் திருவருட் குறிப்பினால் அறியப் பெறும் சேரமான் நாயனார், சுந்தரரின் பிரிவை தரிக்க மாட்டாதவராய், உடன்செல்லும் குறிப்புடன் தன்னுடைய புரவியின் செவியில் ஸ்ரீபஞ்சாக்ஷர மந்திரத்தினை ஓதுகின்றார். பலகாலும் பாராயணம் புரிந்து சித்தி பெற்றிருந்த திருஐந்தெழுத்தின் மேன்மையினால் அக்குதிரை மேலெழும்பி விண்ணில் விரைந்து, சுந்தரனாரின் வெள்ளை யானையை வலமாய்ச் சென்று பின்னர் முன்னாகப் பயணித்துச் செல்கின்றது.  

இரு அருளாளர்களுமாய்த் திருக்கயிலை நாதரைத் தரிசித்துப் பணிகையில் சேரமான் பெருமாள் நாயனார் 'திருக்கயிலாய ஞான உலா' எனும் பனுவலால் முக்கண் முதல்வரைப் போற்றிப் பரவுகின்றார். 

அருணகிரிப் பெருமான் மேற்குறித்துள்ள நிகழ்வுகளை, 'நாத விந்து கலாதி நமோ நம' என்று துவங்கும் பிரசித்தி பெற்ற திருஆவினன்குடித் திருப்புகழில் பதிவு செய்து போற்றுகின்றார்,

-
ஆதரம் பயில் ஆரூரர் தோழமை
     சேர்தல் கொண்டவரோடே முனாளினில்
          ஆடல் வெம்பரி மீதேறி மாகயிலையிலேகி
-
ஆதி அந்தஉலா ஆசுபாடிய
     சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
          ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் ...... பெருமாளே.

திருப்புகழில் கண்ணன் (பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள்):

திருவண்ணாமலையில் ஆறுமுகப் பெருங்கடவுள் 'முத்து முத்தாய்ப் பாடுவாய்' என்று அடியெடுத்துக் கொடுத்து அருள் புரிய, அருணகிரிப் பெருமான் 'முத்தைத் தரு' எனும் அற்புதத் திருப்புகழால் கந்தக் கடவுளைப் பணிந்தேத்துகின்றார். 

முதல் திருப்புகழான இத்திருப்பாடலிலேயே ஸ்ரீமன் நாராயணரின் தசாவதாரங்களுள் மூன்றினைப் பதிவு செய்து போற்றி மகிழ்கின்றார்;  ஸ்ரீராமாவதார நிகழ்வு ; கூர்மாவதார நிகழ்வு மற்றும் ஸ்ரீகிருஷ்ண லீலைகள். இவற்றுள் நம் கண்ணனைப் பற்றிய திருப்பாடல் வரிகளை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம், 

மாபாரதக் கண்ணன், குருஷேத்திர யுத்தகளத்தில் தன் சுதர்சன சக்கரத்தால் சூரியனின் ஒளியை மறைத்து; ஜயத்ரதனை வெளிப்படச் செய்து; அர்ஜுனனால் அவன் மாளுமாறு செய்தருளிய லீலையை, ' பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக' என்று போற்றுகின்றார்.

பக்தனான பார்த்தனுக்கு எளிவந்து, மாபாரத யுத்த சமயத்தில் சாரதியாக விளங்கியருளிய நிகழ்வினை, 'பத்தற்(கு) இரதத்தைக் கடவிய' எனும் வரியில் போற்றுகின்றார்.

இறுதியாய் வைகுந்த வாசரைப் 'பச்சைப் புயல்' எனும் அற்புத அடைமொழியொன்றினால் சிறப்பித்துப் பின் 'அத்தகு சீர்மை பொருந்திய கண்ணன் மெச்சும் முதற்பொருளாகிய அறுமுக தெய்வமே' என்று சிவகுமரனைப் போற்றிப் பரவுகின்றார். 'பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள்' என்பது நம் அருணகிரியாருக்கே உரித்தான தனித்துவமான; கவித்துவமான சொல்லாடலன்றோ (கிருஷ்ண கிருஷ்ண)!! 
-
பத்துத்தலை தத்தக் கணைதொடு
     ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
          பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...இரவாகப்
பத்தற்கிரதத்தைக் கடவிய
     பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
          பட்சத்தொடு ரட்சித்தருள்வதும் ...ஒருநாளே

திருப்புகழில் கண்ணன் (பால்ய பருவத்து லீலைகள்):

'மாயா சொரூப முழுச் சமத்திகள்' என்று துவங்கும் வயலூர் திருப்புகழில் அருணகிரிப் பெருமான் பின்வரும் கிருஷ்ண லீலைகளைப் பட்டியலிட்டுப் போற்றுகின்றார்,

ஸ்ரீகிருஷ்ணன், எவரொருவரும் காணாதவாறு, நண்பர்களும் உடனிருக்க, கோபிகைகளாகிய இடைச்சிமார்களின் இல்லத்திலுள்ள குடங்களினின்றும் பால்; நெய்; வெண்ணை; தயிர் ஆகியவற்றைத் திருடிக் குடித்துக் கொண்டிருக்கையில், யசோதையன்னையிடம் கையும் களவுமாக பிடிபட்டு விடுகின்றான். உடன் அவள் கோபம் கொள்பவள் போல், கண்ணனைச் சிறிது அடித்து; அங்குள்ள உரலொன்றில் பிணைத்துக் கட்டுகின்றாள். 14 உலகங்களையும் தன்னுடைய வாயினுள் முன்னர் வெளிப்படுத்திக் காட்டிய கண்ணனோ இச்சமயத்தில் தன் பிஞ்சுப் பொற்கரங்களால் இரு காதுகளையும் பற்றியவாறு, அன்னையிடம் அழுது மன்றாடி மன்னிப்பு வேண்டுகின்றான்.

அனுதினமும் காலை; மாலை இருவேளையும், ஆன்மாக்கள் யாவும் உய்வு பெறுமாறு; விவரிக்கவொண்ணா இனிய புல்லாங்குழல் நாதத்தை வெளிப்படுத்தியவாறே, எண்ணிறந்த பசுக்கூட்டங்களை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று பின்னர் மீளவும் அழைத்து வருகின்றான்.

மேற்குறித்துள்ள கிருஷ்ண லீலைகளைச் சிறப்பித்துப் போற்றும் அருணகிரியார், இறுதியாய் 'இத்தகைய அரியபெரிய சிறப்புகள் பொருந்திய கண்ணனை மாமனாகக் கொண்டருள்பவனே' என்று வயலூரில் உறையும் ஆறுமுக தெய்வத்தைப் பணிந்தேத்துகின்றார்,  

காயாத பால்நெய் தயிர்க் குடத்தினை
     ஏயா எணாமல் எடுத்திடைச்சிகள்
          காணாதவாறு குடிக்கும் அப்பொழுதுரலோடே
-
கார்போலு மேனி தனைப் பிணித்தொரு
     போர் போல் அசோதை பிடித்தடித்திட
          காதோடு காது கையில் பிடித்தழுதினிதூதும்
-
வேயால் அநேக விதப் பசுத்திரள்
     சாயாமல் மீள அழைக்கும் அச்சுதன்
          வீறான மாமன் எனப் படைத்தருள் ...வயலூரா

திருப்புகழில் கண்ணன் (காளிங்க நர்த்தனம்):

அருணகிரிப் பெருமான் கண்ணனின் காளிங்க நர்த்தன லீலையை எண்ணிறந்த திருப்புகழ் திருப்பாடல்களில் மகிழ்ந்து போற்றியுள்ளார். அவற்றுள் சிலவற்றை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம்,

(1)
('மாந்தளிர்கள் போல' என்று துவங்கும் பூம்பறை தலத் திருப்புகழ்),
-
பாந்தள்முடி மீது தாந்ததிமி தோதி
     தாஞ்செகண சேசெ ...எனஓசை
-
பாங்குபெறு தாளம் ஏங்க நடமாடு
     பாண்டவர் சகாயன் ...மருகோனே

(2)
('தகர நறுமலர்' என்று துவங்கும் பழனித் திருப்புகழ்),
-
சக்கரம்; சங்கு; கதை; வாள்; வில் எனும் பஞ்ச ஆயுதங்களை உடையவனும், மேக நிறத்தவனும், காளிங்கனின் மீது 'திமித திமிதிமி' என்று திருநடமிடுபவனுமாகிய கண்ணனின் மருகோனே,
-
திகிரி வளைகதை வசிதநு உடையவன் 
     எழிலி வடிவினன் அரவுபொன் முடிமிசை
          திமித திமிதிமி எனநடமிடும்அரி ...மருகோனே

(3)
('தும்பி முகத்தானை' என்று துவங்கும் கும்பகோணத் திருப்புகழ்),
-
புல்லாங்குழலைத் தன் அடையாளமாகக் கொணடவனும், விஷ மடுவில் 'திந்தம்' எனும் தாள நயத்தோடு பொருந்தி ஆடுபவனும், பசுக்கூட்டங்களை மேய்த்து வருபவனுமாகிய கண்ணனின் மகளான வள்ளிதேவியிடம் காதல் கொண்டருளும் கும்பகோணப் பெருமாளே,
-
கொம்புகுறிக் காளமடுத் திந்தம் எனுற்றாடி நிரைக்
     கொண்டு வளைத்தே மகிழ்அச்சுத(ன்)ஈண
-
கொஞ்சுசுகப் பாவையிணைக் கொங்கைதனில் தாவி மகிழ்க்
     கும்பகொணத்தாறுமுகப் ...பெருமாளே.

(4)
('மடலவிழ் சரோருகத்து' என்று துவங்கும் பொதுத் திருப்புகழ்),
-
பரந்து விரிந்த மகுண்டங்களைக் கொண்ட, நாகரத்தினம் பொருந்திய படங்களை உடைய காளிங்கனின் மீது திருநடமிடும்; தாமரை மலர் போன்ற திருவடிகளைக் கொண்டருளும் கண்ணனின் மருகோனே,
-
தடமகுட நாகரத்ந படநெளிய ஆடுபத்ம
     சரணயுக மாயனுக்கு ...மருகோனே

(5)
('நற்குணமுளார் தமைப்பொல்' என்று துவங்கும் பொதுத் திருப்புகழ்),
-
'இரத்தினங்கள் பொருந்திய படங்களை உடைய காளிங்கனின் மீது திருநடம் புரிபவனான கண்ணனின் மகனான மன்மதனும் வியந்து போற்றும் பேரழகினைக் கொண்டருளும் சுப்ரமண்ய தெய்வமே'
-
ரத்தின பணா நிருத்தன் மெய்ச்சுதனு(ம்) நாடு மிக்க
     லக்ஷண குமார சுப்ரமணியோனே

(6)
('பகர நினைவொரு' என்று துவங்கும் பொதுத் திருப்புகழ்),
-
சக்கரத்தை ஏந்தியவனும், மரகதமலை போன்றவனும், நெருப்பினை உமிழும் காளிங்கனின் மீது திருநடமிடுபவனுமாகிய கண்ணனின் மருகோனே,
-
     திகிரிதர மரகதகிரி எரியுமிழ்
          உரக சுடிகையில் நடநவில் அரிதிரு ...மருகோனே

திருப்புகழில் கண்ணன் (கோவர்த்தன லீலை):

'மூவுலங்களுக்கும் தானே அதிபதி' என்று இந்திரன் கர்வம் கொண்டிருப்பதை அறியும் ஸ்ரீகிருஷ்ணன் அவனுடைய அறியாமையைப் போக்கியருளத் திருவுள்ளம் பற்றுகின்றான். கோகுலத்தில் ஆண்டுதோறும் நடந்தேறி வரும் இந்திரனுக்கான யாக வழிபாடுகளை இனி மலையரசனான பர்வத ராஜனுக்கே புரிவோமென்று ஆலோசனை கூறுகின்றான். கோகுலத்தில் தான் கண்ணனின் வாக்கிற்கு மறுமொழியே கிடையாதே, அனைவரும் அவ்விதமே மலையரசனைக் குறித்து வேள்வி செய்ய முனைகின்றனர்.

இதனைக் கண்டு சினம் கொள்ளும் இந்திரன், சூறாவளிக் காற்றோடு கூடிய பெருமழை உண்டாகுமாறு செய்ய, கோகுலவாசிகள் அனைவரும் கண்ணனிடம் சென்று தஞ்சமடைகின்றனர். கண்ணன் புன்முறுவலுடன் கோவர்த்தன மலையைத் தன் திருவிரலினால் குடைபோலத் தாங்கி, 'இனி நீங்கள் அனைவரும் எவ்விதக் கவலையுமின்றி உங்கள் பணிகளைச் செய்து கொண்டிருங்கள்' என்று அபயமளித்து அருள் புரிகின்றான். 

ஒருநாள் அல்ல; இருநாள் அல்ல; தொடர்ந்து ஏழு நாட்கள் காற்றோடு கூடிய பெருமழை நீடிக்கின்றது. இந்திரன், கோகுல வாசிகளுக்கு எவ்விதத் தீங்கும் நேராதது கண்டு நாணமுற்றுத் தன் முயற்சியைக் கைவிடுகின்றான்; கண்ணனின் திருவடிகளில் பிழைபொறுக்குமாறு வேண்டித் தொழுது, கோவிந்த பட்டாபிஷேகமும் செய்து மகிழ்கின்றான். 

கோபால கிருஷ்ணனின் இவ்வற்புத லீலையை நம் அருணகிரிப் பெருமான் பல்வேறு திருப்பாடல்களில் மகிழ்ந்து போற்றுகின்றார். அவற்றுள் சிலவற்றை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம்,

(1)
('சந்தனம் பரிமள' என்று துவங்கும் சீகாழித் திருப்புகழ்),
-
மந்தரம்குடை எனநிரை  உறுதுயர்
     சிந்த அன்றடர் மழைதனில் உதவிய
          மஞ்செனும்படி வடிவுறும் அரிபுகழ் ...மருகோனே

(2)
'பொன்றா மன்றாக்கும் புதல்வரும்' என்று துவங்கும் திருவாலங்காட்டுத் திருப்புகழ்),
-
குன்றால்விண் தாழ்க்கும் குடைகொடு
     கன்றாமுன் காத்தும் குவலயம் 
          உண்டார் கொண்டாட்டம் பெருகிய ...மருகோனே

(3)
('தகர நறுமலர்' என்று துவங்கும் பழனித் திருப்புகழ்)
-
சிகர குடையினில் நிரைவர இசைதெரி
     சதுரன் விதுரனில் வருபவன் அளையது
          திருடி அடிபடு சிறியவ(ன்) நெடியவன் ...மதுசூதன்

(4)
('இரவியென வடவையென' என்று துவங்கும் பழனித் திருப்புகழ்),
-
நிரைபரவி வரவரையுள் ஓர்சீத மருதினொடு
     பொருசகடு உதையது செய்(து)ஆமாய மழைசொரிதல்
          நிலைகுலைய மலை குடையதாவே கொள் கரகமலன் ...மருகோனே


திருப்புகழில் கண்ணன் (மருத மரங்களை முறித்த நிகழ்வு):

குபேரனின் புதல்வர்களான நளகூபரன்; மணிக்கிரீவன் ஆகியோர் நாரத முனிவரின் சாபமொன்றினால் மருத மரங்களாய் நின்றிருக்க, உரலோடு கயிற்றினால் பிணைக்கப் பெற்றிருந்த கோகுலக் கண்ணன்; அவ்விரு மரங்களும் வேரோடு முறிந்து விழுமாறு அவைகளுக்கிடையே தவழ்ந்து சென்றருள, சாப விமோசனம் பெறும் குபேரனின் புத்திரர்கள் கண்ணனின் திருவடிகளைப் பணிந்து போற்றுகின்றனர். 

அருணகிரிப் பெருமான் கண்ணனின் இவ்வற்புத லீலையை எண்ணிறந்த திருப்புகழ் திருப்பாடல்களில் பதிவு செய்து போற்றுகின்றார். அவற்றுள் சிலவற்றை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம்,

(1):
('மருமலரினன் துரந்து' என்று துவங்கும் பழனித் திருப்புகழ்),
-
அருணகிரியார் இத்திருப்பாடலில் கண்ணனை 'பரமபத நண்பர்' எனும் இனிமையான அடைமொழியளித்துப் போற்றுகின்றார்,
-
பரிவொடு மகிழ்ந்திறைஞ்சு மருதிடை தவழ்ந்து நின்ற
     பரமபத நண்பர் அன்பின் ...மருகோனே

(2)
('குருதி கிருமிகள்' என்று துவங்கும் வயலூர் திருப்புகழ்),
-
மருது நெறுநெறு நெறுவென முறிபட
     உருளும் உரலொடு தவழ்அரி மருகசெ
          வனச மலர்சுனை புலிநுழை முழையுடைய விராலி

(3)
('குருவும் அடியவர்' என்று துவங்கும் நெருவூர் திருப்புகழ்)
-
உருவு பெருகயல் கரியதொர் முகிலெனும் 
     மருது நெறிபட முறைபட வரைதனில்
          உரலினொடுதவழ் விரகுள இளமையு(ம்) ...மிகமாரி

(4)
('பொருத கயல்விழி' என்று துவங்கும் பொதுத் திருப்புகழ்),
-
மருது பொடிபட உதைத்திட்டாய்ச் செரி
     மகளிர் உறிகளை உடைத்துப் போட்டவர்
          மறுக ஒருகயிறடித்திட்டார்ப்புற ...அழுதூறும்

திருப்புகழில் கண்ணன் (வஸ்திர அபகரண லீலை):

பிருந்தாவனப் பகுதியிலுள்ள தடாகமொன்றில் கோபிகைகள் நீராடச் செல்கின்றனர், தத்தமது ஆடைகளைக் கரையிலேயே பத்திரப்படுத்தி விட்டுப் பின்னர் ஆற்றில் மகிழ்வுடன் நீராடிக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது கண்ணனுக்கு 5 வயது, கோபிகைகள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் தான் எழுந்தருளியுள்ள தன்மையினை உணர்த்தவும், யாவற்றிலும் தன்னையே காணும்; பேதமற்ற பரிபக்குவ நிலையை அவர்களுக்கு அளித்தருளவும் கண்ணன் திருவுள்ளம் பற்றுகின்றான். கரையிலிருந்த அவர்களின் உடைகளைக் கவர்ந்து கொண்டு அங்குள்ள குருந்த மரமொன்றில் ஏறிச் சென்று, வேங்குழலில் நாதமிசைக்கத் துவங்குகின்றான். 

கண்ணனின் இவ்வற்புத லீலையை அருணகிரிப் பெருமான் பல்வேறு திருப்பாடல்களில் பதிவு செய்து போற்றுகின்றார். அவற்றுள் சிலவற்றை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம்,

(1)
('வஞ்சனை மிஞ்சிய' என்று துவங்கும் பழனித் திருப்புகழ்),
-
கஞ்சன்விடும் சகடாசுரன் பட
     வென்று குருந்தினிலேறி மங்கையர்
          கண்கள் சிவந்திடவே கலந்தரு ...முறையாலே
-
கண்டு மகிழ்ந்தழகாய் இருந்திசை
     கொண்டு விளங்கிய நாளில் அன்பொடு
          கண்குளிரும் திருமால் மகிழ்ந்தருள் ...மருகோனே

(2)
('செழுந்தாது' என்று துவங்கும் பொதுத் திருப்புகழ்),
-
கொழும் கானிலே மாதர் செழும் சேலையே கோடு
     குருந்தேறு மால் மாயன் மருகோனே

(3)
('இருந்த வீடும் கொஞ்சிய' என்று துவங்கும் பொதுத் திருப்புகழ்),
-
குருந்திலேறும் கொண்டலின் வடிவினன் ...மருகோனே

(4)
('எங்கேனும் ஓருவர் வர' என்று துவங்கும் தென்சேரிகிரித் திருப்புகழ்),
-
தன்காதல் தனையுகள என்றேழு மடவியர்கள்
     தம்கூறை கொடுமரமில் அதுஏறும்

திருப்புகழில் கண்ணன் ('க்ருஷ்ண' எனும் திருநாமம்):

அருணகிரிப் பெருமான் எண்ணிறந்த திருப்பாடல்களில் கிருஷ்ண லீலைகளைப் பதிவு செய்து போற்றியுள்ளார், நிகழ்வுகள் கண்ணன் தொடர்புடையதாக இருப்பினும் அதனை ஸ்ரீமன் நாராயணரின் திருநாமங்களில் ஏதேனுமொன்றினைக் குறிப்பிட்டு நிறைவு செய்யும் வழக்கத்தினைக் கொண்டிருந்தார் (சில உதாரணங்கள்: 'மால் மருகா; அரி மருகா; மாயோன் மருகா'). அச்சுதன்; கோபாலன்; கேசவன் என்று கண்ணனின் திருநாமங்களை நேரடியாகவே குறித்துள்ள திருப்பாடல்களும் உண்டு, கண்ணனின் லீலைகளில் துவங்கி 'அபிராமா' என்று இராம திருநாமத்தால் நிறைவுறும் பனுவல்களும் உண்டு. பரந்தாமனின் அவதாரங்களுக்குள் பேதமின்மையை வெளிக்கொணர்வதே அருணகிரியாரின் நோக்கமாக இருந்திருக்கக் கூடும். 

இருப்பினும் 'க்ருஷ்ண' எனும் திருநாமம் முழுமையாய் இடம்பெறுவது 'நடையுடையிலே' என்று துவங்கும் பின்வரும் பொதுத் திருப்புகழில் மட்டுமே - என்பதொரு இனிமையான குறிப்பு (தாள நயத்துக்காக 'கோபால க்ருஷ்ணன்' என்பதனை கொபால க்ருஷ்ணன் என்று குறிக்கின்றார்), 

-
இடையர்மனை தோறுநித்தம் உறிதயிர்நெய் பால்குடிக்க
     இருகையுறவே பிடித்து ...உரலோடே
-
இறுகிட அசோதைகட்ட அழுதிடு கொபால க்ருஷ்ணன் 
     இயல்மருகனே குறத்தி ...மணவாளா

மற்றுமொரு சுவையான குறிப்பு, 'பசையற்ற உடல்வற்ற' என்று துவங்கும் விருத்தாசலத் திருப்புகழில், தாள நயத்துக்காக 'கிருஷ்ணன்' எனும் திருநாமத்தை நம் அருணகிரியார் 'கிட்ணன்' என்று குறிக்கின்றார், 
-
வசையற்று முடிவற்று வளர்பற்றின் அளவற்ற
     வடிவுற்ற முகில்கிட்ணன் ...மருகோனே

திருப்புகழில் கண்ணன் (சகடாசுர வதம்):

அன்று கண்ணனுக்கு ஜென்ம நட்சத்திர தினம் (அதாவது ஆவணி ரோகினித் திருநாள்), கோகுலமே விழாக் கோலம் பூண்டிருந்தது. நந்தகோபரும்; யசோதையும் வேதியர்களை அழைத்து ஹோம காரியங்களைச் செய்வித்து, அவர்களைக் கொண்டு கண்ணனை ஆசிர்வதிக்கச் செய்கின்றனர். குழந்தைக் கண்ணனை நன்கு அலங்கரித்து நந்தவனத்தில் தொட்டிலிட்டு மகிழ்கின்றனர். அங்குள்ள சிறுவர்; சிறுமியர் யாவரும் தொட்டிலைச் சுற்றி நின்றவாறு; பற்பல விளையாட்டுகளால் கண்ணனை மகிழ்வித்துத் தாங்களும் பெருமகிழ்வு கொள்கின்றனர். 

அப்பொழுது கம்சனால் (கண்ணனைக் கொன்றுவரும் பொருட்டு) அனுப்பப்பட்டிருந்த சகடாசுரன் வண்டியொன்றின் வடிவெடுத்து, சக்கரங்கள் வேகமாகச் சுழலக் கண்ணனின் தொட்டிலை நோக்கி வருகின்றான். உடனிருந்த சிறுவர் யாவரும் பதறியவாறு அங்குமிங்குமாய் ஓடுகின்றனர், கண்ணனுக்கு என்ன நேருமோ என்று தவித்துப் பதறுகின்றனர். பால கிருஷ்ணனோ புன்முறுவலுடன் ஒரு திருவடியைத் தொட்டிலில் ஊன்றி மற்றுமொரு திருவடியால் அச்சக்கரத்தை உதைக்கின்றான். அந்த வேகம் தாளாது வண்டியானது பொடிப் பொடியாகிச் சகடாசுரன் அவ்விடத்திலேயே மாண்டொழிகின்றான். 

அனைவரும் பதறி வந்து பார்க்கையில் நம் கண்ணன் ஏதுமறியாதவன் போல அவர்களைப் பார்த்து மகிழ்ந்து சிரிக்கின்றான். குழந்தை பயந்திருப்பானே என்றெண்ணி நந்தகோபரும்; யசோதையும் அங்குள்ள பெரியவர்களிடம் கண்ணனை அழைத்துச் சென்று மந்திரிக்கச் செய்கின்றனர். 

அருணகிரிப் பெருமான் கண்ணனின் இவ்வற்புத லீலையைப் பல்வேறு திருப்புகழ் திருப்பாடல்களில் பதிவு செய்து போற்றுகின்றார். அவற்றுள் சிலவற்றை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம்,

(1)
('வஞ்சனை மிஞ்சிய' என்று துவங்கும் பழனித் திருப்புகழ்),
-
கஞ்சன்விடும் சகடாசுரன் பட
     வென்று குருந்தினிலேறி மங்கையர்
          கண்கள் சிவந்திடவே கலந்தரு ...முறையாலே

(2)
('இரவியென வடவையென' என்று துவங்கும் பழனித் திருப்புகழ்),
-
நிரைபரவி வரவரையுள் ஓர்சீத மருதினொடு
     பொருசகடு உதையது செய்(து)ஆமாய மழைசொரிதல்
          நிலைகுலைய மலை குடையதாவே கொள் கரகமலன் ...மருகோனே

(3)
('முதிர உழையை' என்று துவங்கும் பழனித் திருப்புகழ்),
-
சதுரன் வரையை எடுத்த நிருதன் உடலை வதைத்து
     சகடு மருதம் உதைத்த ...தகவோடே

(4)
('சுருதி வெகுமுக' என்று துவங்கும் பொதுத் திருப்புகழ்),
-
வலிய சகடிடறி மாயமாய் மடி
     படிய நடைபழகி ஆயர் பாடியில்
          வளரு முகில்மருக வேல்விநோத சிகண்டிவீரா

(5)
(அருணகிரியார் அருளியுள்ள திருவகுப்பு எனும் தொகுப்பில் இடம்பெறும் 'வேல் வாங்கு வகுப்பு')
-
மருதிடை சென்றுயர் சகடு தடிந்தடர் வெம்புளை
    வாய்கீண்டொரு பேய்காய்ந்தவன்

திருப்புகழில் கண்ணன் (வையகம் உண்ட லீலை):

கோகுலக் கண்ணன் பலராமனோடும்; மற்றுமுள்ள சிறுவர்களோடும் வீதிகளில் விளையாடுகையில், சிறிது மண்ணை அள்ளி வாயில் போட்டுக் கொள்கின்றான். சிறுவர்கள் உடன் யசோதையிடம் சென்று 'அம்மா - அம்மா! கிருஷ்ணன் மண்ணைத் தின்கின்றான்' என்று தெரிவிக்க, யசோதை கையில் ஒரு கம்புடன் அவ்விடத்திற்கு விரைந்து வருகின்றாள். 'ஏண்டா மண்ணைத் தின்றாயா?' என்று சிறிது அதட்டிக் கேட்க, கண்ணன் மிரள மிரள விழித்தவாறு 'இல்லை' என்பது போல தலையை அசைக்கின்றான்.   

கோபாலச் சிறுவர்களோ 'அவன் தின்றானம்மா, நாங்கள் நிச்சயம் பார்த்தோம்' என்று மீண்டுமொரு முறை உறுதி கூற, யசோதையானவள் அடிப்பது போல் குச்சியை ஓங்கி 'பொய் சொல்லாதே கிருஷ்ணா, எங்கே வாயைத் திறந்து காட்டு?' என்று மிரட்டும் தொனியில் கேட்கின்றாள். குழந்தைக் கண்ணன் அஞ்சியவன் போலும் தன் திருவாயினை மெல்லத் திறக்கின்றான். 

யசோதை அப்பவள வாயினுள் சப்த சாகரங்களால் சூழப்பெற்றுள்ள உலகங்களைக் காண்கின்றாள், திருப்பாற்கடலையும்; அங்கு பிரமன் போற்றி நிற்கும் நிலையில் ஸ்ரீமன் நாராயண மூர்த்தியையும் தரிசிக்கின்றாள், மீண்டும் நிலவுலகையும், கோகுலத்தையும், அதனுள் ஓங்கிய கையுடன் தன்னையும் கண்ணனையும் காண்கின்றாள். உடன் காட்சிகள் மறைகின்றன. உடலெங்கும் புளகமுற; விதிர்விதிர்த்து; கண்ணீர் ஆறாகிப் பெருகிய நிலையில் கண்ணனை வாரியணைத்து 'கிருஷ்ணா! நீயொரு தெய்வக் குழந்தையடா' என்று மாறி மாறி முத்தமிட்டு நெகிழ்கின்றாள். 

மண்ணை உண்டு திருவாயினுள் உலகங்களைக் காட்டியருளிய தன்மையால் 'உலகம் முழுமையும் உண்ட கண்ணன்' என்று அருளாளர்கள் கவித்துவமாக இந்நிகழ்வினைக் குறிப்பது மரபு. அருணகிரிப் பெருமான் கண்ணனின் இவ்வற்புத லீலையைப் பல்வேறு திருப்புகழ் திருப்பாடல்களில் பதிவு செய்து போற்றுகின்றார், 

(1)
'பொன்றா மன்றாக்கும் புதல்வரும்' என்று துவங்கும் திருவாலங்காட்டுத் திருப்புகழ்),
-
குன்றால்விண் தாழ்க்கும் குடைகொடு
     கன்றாமுன் காத்தும் குவலயம் 
          உண்டார் கொண்டாட்டம் பெருகிய ...மருகோனே

(2)
('இடமருவும் சீற்ற வேலெடுத்து' என்று துவங்கும் பொதுத் திருப்புகழ்)
-
 அகிலம் உண்டார்க்கு நேர் இளைச்சி ...பெருவாழ்வே

(3)
('தரணிமிசை அனையினிட' என்று துவங்கும் பொதுத் திருப்புகழ்),
-
சகமுழுதும் அடைய அமுதுண்டிடும் கொண்டலும் 
     தெரிவரிய முடியின் அரவங்களும் திங்களும் 
          சலமிதழி அணியுமொரு சங்கரன் தந்திடும் ...பெருமாளே

அருணகிரியாரின் அவதாரக் காலத்திற்கு சுமார் 7 நூற்றாண்டுகளுக்கு முன்னர் அவதரித்த நம் சுந்தர மூர்த்தி சுவாமிகள் பின்வரும் கூடலையாற்றூர் திருப்பதிகப் பாடலில், 'வையக(ம்) முழுதுண்ட மாலொடு' என்று இந்நிகழ்வினைப் பதிவு செய்கின்றார்,
-
வையக(ம்) முழுதுண்ட மாலொடு நான்முகனும்
பையிள அரவல்குல் பாவையொடும் உடனே
கொய்யணி மலர்ச்சோலைக் கூடலையாற்றூரில்
ஐயன் இவ்வழி போந்த அதிசயம் அறியேனே

திருப்புகழில் கண்ணன் (யசோதையும் கண்ணனும்):

('நாமேவு குயிலாலும்  மாமாரன் அயிலாலும்' என்று துவங்கும் திருப்பாடல்)
-
தாமோகமுடன் ஊறு பால்தேடி உரலூடு
     தானேறி விளையாடும் ஒருபோதில்
-
தாயாக வருசோதை காணாது களவாடு
     தாமோதரன் முராரி மருகோனே!!!

திருப்புகழில் கண்ணன் (தயிர்ச் சோரன்):

('உயிர்க்கூடு விடுமளவும்' என்று துவங்கும் திருப்பாடல்)
-
தயிர்ச் சோரன் என்று வசைபாடும் கோபிகைகளிடத்து பல்வேறு திருவிளையாடல்களைப் புரிந்தருளும் கண்ணனின் மருமகனே, என்று கண்ணனையும் பழனியாண்டவனையும் ஒருசேரப் போற்றி மகிழ்கின்றார் நம் அருணகிரிப் பெருமான். 
-
தயிர்ச்சோரன் எனும்அ(வ்)வுரை வசைக்கோவ வனிதையர்கள்
     தரத்தாடல் புரியும்அரி ...மருகோனே

திருப்புகழில் கண்ணன் (பூதனை வதம்):

குழந்தைக் கண்ணனைத் தொட்டிலிலிட்டு அதற்கருகிலேயே அமர்ந்தவாறு யசோதையும், பலராமனின் தாயான ரோகினி தேவியுமாய் உரையாடிக் கொண்டிருக்கின்றனர். அச்சமயத்தில், குழந்தை பிறந்த செய்தி கேட்டு ஆசிர்வாதம் செய்ய வந்திருப்பதாகக் கூறிக்கொண்டு நிறைந்த சுமங்கலியொருத்தி அவ்விடத்திற்கு வருகின்றாள். இவளே கம்சனால் அனுப்பப்பட்டிருந்த பூதனை எனும் அரக்கி, மார்புகளில் விஷத்தைத் தடவிக் கொண்டு சுமங்கலிப் பெண்ணின் உருவில் வந்திருந்த அவள், குழந்தைக் கண்ணனைத் தொட்டிலினின்று எடுத்தணைத்து கொஞ்சுவது போலும் நடிக்கின்றாள். 

கண்ணன் சிறிதும் காலம் தாழ்த்த விரும்பவில்லை, பசிப்பவன் போல் அழத் துவங்குகின்றான். பூதனை தன் மார்புகளினின்றும் பால் கொடுக்க முனைய, பாலைச் சுவைப்பது போல் அவள் உயிரையும் சேர்த்து இழுக்கின்றான் பால கிருஷ்ணன். அலறியவாறு (மலை போன்ற) தன் சுய உருவத்துடன் உயிர் துறக்கின்றாள் பூதனை. ஏதுமறியாதவன் போல் அவள் மார்புகளின் மீது விளையாடிக் கொண்டிருந்த கண்ணனை, யசோதையும் நந்தகோபரும் பதறியெடுத்து 'குழந்தைக்கு ஊறொன்றும் நேராததை எண்ணி' நிம்மதி கொள்கின்றனர். 

'கண்ணனின் திருமேனி சம்பந்தத்தால் பூதனை உத்தம உலகத்தை அடைகின்றாள்' என்று ஸ்ரீமத் பாகவத புராணம் பறைசாற்றுகின்றது.

அருணகிரிப் பெருமான் மழலைக் கண்ணனின் இவ்வற்புத லீலையைப் பல்வேறு திருப்புகழ் திருப்பாடல்களில் பதிவு செய்து போற்றுகின்றார், 

(1)
('முருக மயூரச் சேவக' என்று துவங்கும் பொதுத் திருப்புகழ்),
-
மருகன் எனாமல் சூழ்கொலை கருதிய மாமப் பாதகன்
     வரவிடு மாயப் பேய்முலை ...பருகாமேல்

(2)
('சொற்பிழை வராமல்' என்று துவங்கும் திருவாவடுதுறை திருப்புகழ்),

எத்திய பசாசின் முலைக்குடத்தைக் குடித்து
     முற்றுயிர் இலாமல் அடக்கிவிட்டுச் சிரித்த

(3)
('இலகி இருகுழை' என்று துவங்கும் பொதுத் திருப்புகழ்),
-
அலகை உயிர்முலை அமுது செய்தருளிய
     அதுலன் இருபதம் அதுதனில் எழுபுவி
          அடைய அளவிட நெடுகிய அரிதிரு ...... மருகோனே

(4)
('சுருதி வெகுமுக' என்று துவங்கும் பொதுத் திருப்புகழ்),
-
மருது நெறுநெறென மோதி வேரோடு
     கருதும் அலகைமுலை கோதி வீதியில்
          மதுகையொடு தறுகண்ஆனை வீரிட ...... வென்றுதாளால்

திருப்புகழில் திருஞானசம்பந்தர் (அம்பிகையின் இரு அருளாசிகள்):

முருகப் பெருமானின் சாரூப்ய முத்தி பெற்றிருந்த ஓர் உன்னத ஆன்மாவையே சிவபரம்பொருள் திருஞானசம்பந்தராக அவதரிக்கச் செய்துள்ள காரணத்தால், அருணகிரியார் உள்ளிட்ட அருளாளர்கள் சம்பந்த மூர்த்தியை முருகப் பெருமானின் அவதாரமாகவே (உபச்சார வழக்கமாய்) போற்றி வந்துள்ளனர். இவ்வரிய நுட்பத்தினை நம் வாரியார் சுவாமிகள் பல்வேறு விரிவுரைகளில் தெளிவுறுத்தி வந்துள்ளார். இனி இப்புரிதலோடு பதிவிற்குள் பயணிப்போம். 

சிவமாகிய பரம்பொருள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு அரிய நிகழ்வுகளை, ஞானப் பெருநிலையிலுள்ள அடியவர்களுக்கு உணர்த்தி வருவது கண்கூடு. அம்முறையில் ஞானப்பாலுண்ட நிகழ்வு தொடர்பாக நம் தெய்வச் சேக்கிழாருக்கு இறைவர் உணர்த்தியருளிய குறிப்பினை முதற்கண் சிந்திப்போம், 
-
அம்பிகை சிவஞானமேயாகிய தன் திருமுலைப் பாலைப் பொற்கிண்ணத்திலிட்டு, 3 வயதே நிரம்பியிருந்த ஞானசம்பந்தக் குழவிக்கு, ''இதனை உண்பாய்' என்று அளித்தருளியதாக நம் தெய்வச் சேக்கிழார் பதிவு செய்கின்றார், 
-
(பெரிய புராணம்: திருஞானசம்பந்தர் புராணம் - 68)
எண்ணரிய சிவஞானத்(து) இன்னமுதம் குழைத்தருளி
'உண்அடிசில்' எனஊட்ட உமையம்மை எதிர்நோக்கும்
கண்மலர்நீர் துடைத்தருளிக் கையில் பொற்கிண்ணம் அளித்(து)
அண்ணலைஅங்கழுகை தீர்த்(து) அங்கணனார் அருள்புரிந்தார்

இது ஒருபுறமிருக்க, 15ஆம் நூற்றாண்டில் அவதரித்த அருணகிரியாருக்கு நம் ஆறுமுகக் கடவுள் இந்நிகழ்வு தொடர்பான, அம்பிகையின் மேலும்இரு அருளாசிகளையும் உணர்த்திப் பேரருள் புரிந்துள்ளான். இதனைப் பின்வரும் பழனித் திருப்புகழ் திருப்பாடல்கள் வாயிலாக உணர்ந்து மகிழ்வோம்,

(1) ('பகர்தற்கரிதான செந்தமிழ் இசையில்' என்று துவங்கும் திருப்புகழ்)

நுகர்வித்தகமாகும் என்றுமை மொழியில்பொழி பாலைஉண்டிடு
     நுவல் மெய்ப்புள பாலன் என்றிடும் ...இளையோனே
-
(குறிப்பு: இத்திருப்பாடலில் 'நுகர் வித்தகமாகும்' - இதனை உண்டு சிவஞானம் பெறுவாய்' என்பதாக அம்பிகையின் முதல் அருளாசி அமைந்திருக்கின்றது)

(2)  ('கலவியில் இச்சித்திரங்கி' என்று துவங்கும் திருப்புகழ்),

பலவித நல்கற்படர்ந்த சுந்தரி
     பயில்தரு வெற்புத் தரும் செழும்கொடி
          பணைமுலை மெத்தப் பொதிந்து பண்புறுகின்ற பாலைப்

பலதிசை மெச்சத் தெரிந்த செந்தமிழ்
     பகர்என இச்சித்துகந்து கொண்டருள்
          பழநியில் வெற்பில் திகழ்ந்து நின்றருள் ...தம்பிரானே
-
(குறிப்பு: இத்திருப்பாடலில் 'பலதிசை மெச்சத் தெரிந்த செந்தமிழ் பகர்' - 'திசைகள் யாவும் போற்றும் தன்மையில், சிவஞானத்தை விளைவிக்கும் செந்தமிழ்ப் பாக்களைப் பாடுவாய்' என்பதாக நம் அம்பிகையின் மற்றொரு அருளாசி அமைந்திருக்கின்றது). 

(இறுதிக் குறிப்பு: இவ்வைகையான திருப்பாடல்களை நாமும் பலசமயம் படித்து வந்திருப்பினும், மேற்குறித்துள்ள நுட்பங்களை ஒருவாறு மேலோட்டமாய்க் கடந்து சென்றிருப்போம். சிவத்திரு. தணிகைமணி அவர்கள் தம்முடைய ஆய்வு நூலில் இவ்விதமான திருப்பாடல் வரிகள் ஒவ்வொன்றினையும் ஆய்ந்தறிந்து அதன் நுட்பங்களைப் பிரகடனப் படுத்தியுள்ளார். அப்பெருமகனாரை இச்சமயத்தில் நன்றியோடு நினைவு கூர்ந்து போற்றுதல் அடியவர் கடன்)

அருணகிரிநாதர் போற்றும் சீகாழி குருநாதர்:

அருணகிரிப் பெருமானார் ஞானசம்பந்த மூர்த்தியின் மீது அதீத பக்தியும் ஈடுபாடும் கொண்டிருந்த தகைமையாளர், எண்ணிறந்த தமது திருப்பாடல்களில் சீகாழி வேந்தரின் அவதார நிகழ்வுகளையம் அருட்செயல்களையும் போற்றிப் பரவி மகிழ்ந்துள்ளார். 

(1)
முதற்கண் அருணகிரியார் காழி அண்ணலுக்கு சூட்டி மகிழ்ந்துள்ள பல்வேறு அடைமொழிகளையும், சிறப்புத் திருநாமங்களையும் காண்போம்,

1. கவுணிய குலாதித்தன் ('சமரமுக வேலொத்த' என்று துவங்கும் கதிர்காமத் திருப்புகழ்)
2. சதுர்வேதச் சிறுவன் ('கறுவி மைக்கணிட்டு' என்று துவங்கும் திருவரத்துறைத் திருப்புகழ்)
3. சுருதித் தமிழ்க்கவிப் பெருமாள் ('கவடுற்ற சித்தர்' என்று துவங்கும் திருத்தணித் திருப்புகழ்)
4. ஞானபுனிதன், கவிவீரன் ('எழுகுநிறை' என்று துவங்கும் திருக்கழுக்குன்றத் திருப்புகழ்)
5. முத்தமிழ் விரகன், நாற்கவி ராஜன் ('ஓருருவாகி' என்று துவங்கும் திருவெழுகூற்றிருக்கை)
6. தவமுனி ('நெய்த்த சுரி குழல்' என்று துவங்கும் வயலூர் திருப்புகழ்)
7. திருந்த வேதம் தண்டமிழ் தெரிதரு புலவோன் ('இருந்த வீடும்' என்று துவங்கும் பொதுத் திருப்புகழ்)
8. புகலியில் வித்தகர் ('புமியதனில்' என்று துவங்கும் திருக்கயிலைத் திருப்புகழ்)
9. முத்தமிழாகரன் ('ஒய்யாரச் சிலையாம்' என்று துவங்கும் சீகாழித் திருப்புகழ்)
10. விருது கவிராஜ சிங்கம் ('கருவினுருவாகி' என்று துவங்கும் பழனித் திருப்புகழ்)

(2)
குமாரக் கடவுளின் சாரூப முத்தி பெற்றிருந்த முத்தான்மா ஒருவரே திருஞானசம்பந்தராக அவதரித்திருந்த தன்மையினால், அருணகிரியார் சம்பந்தச் செல்வரைக் குமாரக் கடவுளின் சுவரூபமாகவே போற்றும் கொள்கையைக் கொண்டிருந்தார். இது தொடர்பான இரு திருப்பாடல்களை இனிக் காண்போம்,

(நெய்த்த சுரி குழல்' என்று துவங்கும் வயலூர் திருப்புகழ்)
புத்தர் அமணர்கள் மிகவே கெடவே
     தெற்கு நரபதி திருநீறிடவே
          புக்க அனல்வய மிக ஏடுயவே ....உமையாள்தன்
புத்ரனென இசை பகர்நூல் மறைநூல்
     கற்ற தவமுனி பிரமாபுரம் வாழ்
          பொற்ப கவுணியர் பெருமான் உருவாய் ....வருவோனே

('ஓருருவாகி' என்று துவங்கும் திருவெழுகூற்றிருக்கை)
ஒருநாள் உமைஇரு முலைப்பால் அருந்தி
     முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்
          ஐம்புலக் கிழவன் அறுமுகன் இவனென
               எழில்தரும் அழகுடன் கழுமலத்(து) உதித்தனை

(3)
தமை ஆளுடைய கந்தப் பெருமானிடம், 'ஐயனே! இப்புவிக்கே பிரபுவாக; தனித்தலைமை கொண்டு விளங்கும் புகலி வேந்தரின் அருளிச் செயல்களைப் போல, அற்புத அற்புதமான பாமாலைகளை உன்மீது புனைந்தேத்தும் அரியதொரு ஞானத்தை, உன் திருவடித் தொண்டனான அடியேனுக்கும் அளித்தருள் புரிவாய்' என்று உளமுருக வேண்டுகின்றார். கந்தவேளும் திருப்புகழ் அரசரின் அவ்விண்ணப்பத்தினை முற்றுவிக்கின்றான்,

('புமியதனில்' என்று துவங்கும் திருக்கயிலைத் திருப்புகழ்)
புமியதனில் ப்ரபுவான
     புகலியில் வித்தகர்போல

அமிர்தகவித் தொடைபாட
     அடிமை தனக்கருள்வாயே!

சீகாழி வள்ளல் 16,000 திருப்பாடல்களை அருளிச் செய்துள்ளதாக சைவ சமயச் சான்றோர் பொதுவில் குறிப்பர். அம்முறையிலேயே நம் அருணகிரியாரும் (சம்பந்த மூர்த்தியின் குருவருளாலும்; அறுமுகக் கடவுளின் திருவருளாலும்) 16,000 திருப்புகழ் திருப்பாடல்களை அருளிச் செய்துள்ளார்.

(4)
மேற்குறித்துள்ள அனைத்திற்க்கும் சிகரம் வைக்குமாற்போலே, பின்வரும் கந்தர்அந்தாதித் திருப்பாடலில், 'ஞானசம்பந்த மூர்த்தியைத் தவிர்த்துப் பிறிதொரு தெய்வமேயில்லை' என்று போற்றுவாராயின், திருஞானசம்பந்தரின் மீது அருணகிரியார் கொண்டிருந்த பெருமதிப்பு தெள்ளென விளங்குமன்றோ, 

(கந்தர் அந்தாதி - திருப்பாடல் 29)
திகழும் அலங்கல் கழல்பணிவார் சொற்படி செய்ய !ஓ
தி கழுமலம் கற்பகவூர் செருத்தணி செப்பி வெண் !பூ
தி கழுமலம் கற்பருளும் என்னா அமண் சேனை !உபா
தி கழு மலங்கற்(கு) உரைத்தோன் அலதில்லை தெய்வங்களே!!!

(கடினப் பதங்களை உடைய இத்திருப்பாடலின் சுருக்கமான பொருளை இனிக் காண்போம்)

அடித்தொண்டர் உய்யுமாறு தேவாரப் பனுவல்களை அருளிச் செய்தவரும், 'சீகாழி; அமராவதி; திருத்தணி எனும் திருப்பெயர்களை உச்சரித்தவாறே திருநீற்றினைத் தரித்துக் கொள்வதே சிவமாகிய மெய்ப்பொருளை அடைவிக்கும்' எனும் மெய்யுணர்வற்ற அமணர்களின் திறத்தை அழித்தவருமாகிய, (அறுமுகக் கடவுளின் வடிவினரான) ஞானசம்பந்த மூர்த்தியை அன்றிப் பிறிதொரு பிரத்யட்ச தெய்வமில்லை!!!

திருஞானசம்பந்தரின் தேவாரத் திருப்பதிகங்கள் எந்த வேதத்தின் சாரம்? (திருப்புகழ் நுட்பங்கள்):

பின்வரும் திருப்பாடலில் 'சிவபத்தி ருக்கை ஐயம் போக உரைத்தான்' என்று 'ஞானசம்பந்தப் பெருமானின் தேவாரப் பனுவல்கள் ரிக் வேத சாரமானவை' என்று அருணகிரிநாதர் ஐயத்திற்கு இடமின்றிக் குறிக்கின்றார். இனி இத்திருப்பாடலின் பொருளை அறிந்துணர்வோம், 

(கந்தர் அந்தாதி - திருப்பாடல் 96)
திருக்கை அம்போதிகளோ; கஞ்சமோ; நஞ்சமோ; திருமால்
திருக்கை அம்போ; செய்ய வேலோ; விலோசனம்; தென்னன் அங்கத்
திருக்கை அம்போருகக் கைந்நீற்றின் மாற்றித் தென்னூல் சிவ!பத்
தி ருக்கை ஐயம் போக உரைத்தோன் சிலம்பிற் சிறுமிதற்கே!!
-
இத்திருப்பாடலின் 2ஆவது வரியின் இறுதியிலுள்ள 'தென்னன்' எனும் சொல்லிலிருந்து 'ஞானசம்பந்த மூர்த்தியைப் பற்றிய குறிப்பு' துவங்குகின்றது. 
-
'தென்னவனாகிய 'நின்றசீர் நெடுமாற நாயனாரின்' கூனைத்  (அங்கத் திருக்கை)  தன் திருக்கரத்திலுள்ள  திருநீற்றினால் போக்கியருளி, தமிழ் நூலாகவும்; சிவபக்தியை உண்டாக்க வல்லதாகவும், ருக் வேத சாரமாகவும் விளங்கும் தேவாரப் பனுவல்கள் வாயிலாக, 'சிவபெருமானே பரம்பொருள்' என்று ஐயம் தீருமாறு உரைத்தருளியவர் ஞானசம்பந்த மூர்த்தி' என்று அருணகிரிப் பெருமானார் போற்றுகின்றார். 
-
(குறிப்பு: 3ஆம் வரியின் இறுதியில் வரும் 'சிவபத்' எனும் எழுத்துக்களோடு, 4ஆம் வரியின் முதல் எழுத்தான 'தி' என்பதையும் சேர்த்து 'சிவபத்தி' என்று வாசித்தல் வேண்டும்)   

மற்றொரு புறம் அருணகிரியாரின் காலத்திற்கு 3 நூற்றாண்டுகளுக்கு முன்னர் தோன்றிய நம் தெய்வச் சேக்கிழாரும் ஞானசம்பந்த மூர்த்தியை 'இருக்கு மொழிப் பிள்ளையார்' என்று ரிக் வேத குறியீட்டுடன் இனிமையாகக் குறித்துள்ளார், 

(பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - திருப்பாடல் 80)
திருப்பதிகம் நிறைவித்துத் திருக்கடைக்காப்புச் சாத்தி
இருக்கு மொழிப் பிள்ளையார் எதிர்தொழுது நின்றருள
அருட்கருணைத் திருவாளனார் அருள்கண்(டு) அமரரெலாம்
பெருக்க விசும்பினில் ஆர்த்துப் பிரசமலர் மழைபொழிந்தார்
.

சிதம்பரம் திருப்புகழில் சிவகங்கை தீர்த்தம்:

('சந்திர ஓலை' என்று துவங்கும் திருப்புகழின் இறுதி வரிகள்)
செந்தமிழ் ஞானதடாகமென் சிவகங்கை அளாவு மகா சிதம்பர
திண்சபை மேவு மனா சவுந்தர தம்பிரானே!!
-
தில்லைத் திருக்கோயிலிலுள்ள சிவகங்கை தீர்த்தத்தை 'செந்தமிழ் ஞானத் தடாகம்' என்று அருணகிரிப் பெருமானார் போற்றியிருப்பதால், 'இப்புண்ணிய தீர்த்தத்தில் நீராடுவோர் செந்தமிழ் ஞானத்தினைப் பெற்று மகிழ்வர்' என்று சிவத்திரு. தணிகைமணி அவர்கள் தம்முடைய திருப்புகழ் உரையில் நயம்படக் குறித்துள்ளார்கள்.






'கந்தர் அலங்காரத்தில்' ஈகையின் சிறப்பு:

'தாழாது அறம் செய்மின்' என்பார் நம் சுந்தர மூர்த்தி சுவாமிகள். அவ்வழியில் நம் அருணகிரிப் பெருமானும், 107 திருப்பாடல்களைக் கொண்ட தம்முடைய கந்தர் அலங்காரத் தொகுப்பில், வறியவர்க்கு உதவும் ஈகைச் செயலின் அவசியத்தை 9 திருப்பாடல்களில் வலியுறுத்தியுள்ளார். இனி அதன் நுட்பங்களை இப்பதிவில் சிந்தித்துத் தெளிவுறுவோம்,

(திருப்பாடல் 16):

'ஆறுமுகக் கடவுளின் திருவருள் தானே வந்து நம்மை எய்துவதற்கு' அருணகிரியார் கூறும் 4 வழிமுறைகளில் 'தானமிடுவதும்' ஒன்று ('தானம் என்றும் இடுங்கோள்'). 'என்றும்' என்று குறித்திருப்பதால் 'இச்செயல் வாழ்நாள் முழுவதுமே கைக்கொள்ள வேண்டிய நெறி' என்பது தெளிவு. 
-
தடுங்கோள் மனத்தை, விடுங்கோள் வெகுளியைத், தானம்என்றும்
இடுங்கோள், இருந்தபடி இருங்கோள், எழு பாரும்உய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றம் திறக்கத் தொளைக்க வைவேல்
விடும்கோன் அருள்வந்து தானே உமக்கு வெளிப்படுமே 

(திருப்பாடல் 18):

'நொய்யின் அளவேனும் பிறர்க்கு அளித்துதவுங்கள்; அதீதமாகச் சேர்த்து வைத்து வைத்துள்ள பொருள் யாவுமே வீண்; ஆன்மா உடலினை விட்டுச் செல்லும் இறுதி யாத்திரைக்கு வேறெதுவும் உடன் வராது' என்று இத்திருப்பாடலில் எச்சரிக்கின்றார். 
-
வையிற் கதிர் வடிவேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யின் பிளஅளவேனும் பகிர்மின்கள், நுங்கட்(கு) இங்ஙன்
வெய்யிற்கொதுங்க உதவா உடம்பின் வெறுநிழல் போல், 
கையில் பொருளும்உதவாது காணும் கடைவழிக்கே 

(திருப்பாடல் 51)

'அனுதினமும் அன்பொடு கந்தக் கடவுளைப் போற்றுவதும், இல்லாதவர்க்குத் தொடர்ந்து பகிர்ந்து வருதலுமே, இறுதி ஆன்ம யாத்திரைக்கு வழித்துணை' என்று மற்றுமொரு முறை இத்திருப்பாடலில் தெளிவுறுத்துகின்றார்,
-
மலையாறு கூறெழ வேல் வாங்கினானை வணங்கி அன்பின்
நிலையான மாதவம் செய்குமினோ, நும்மை நேடிவரும் 
தொலையா வழிக்குப் பொதிசோறும் உற்ற துணையும் கண்டீர்,
இலையாயினும் வெந்த(து) ஏதாயினும் பகிர்ந்(து) ஏற்றவர்க்கே 

(திருப்பாடல் 53)

'பொருள் உள்ள போதே பிறர்க்கு ஈயாதவர் வாழ்நாளை வீணுக்குக் கழிப்பவராவார், அவ்வகையில் சேர்த்து வைத்துள்ள பொருள் பலவகையிலும் மறைந்து, உரியவருக்கே உதவாமல் போகும்' என்றும் இத்திருப்பாடலில் எச்சரிக்கின்றார்,
-
வேடிச்சி கொங்கை விரும்பும் குமரனை மெய்யன்பினால் 
பாடிக் கசிந்(து) உள்ள போதே கொடாதவர், பாதகத்தால் 
தேடிப் புதைத்துத் திருட்டில் கொடுத்துத் திகைத்திளைத்து
வாடிக் கிலேசித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே

(திருப்பாடல் 54)

'ஐயனே, பிறர்க்கு உதவும் உத்தமமான ஈகைச் செயலுக்கு அடியவனை விதிக்காமல் விட்டனையே' என்று இத்திருப்பாடலில் அருணகிரியார் வருந்திப் பாடுகின்றார். 
-
சாகைக்கு(ம்) மீண்டு பிறக்கைக்கும் அன்றித் தளர்ந்தவர்க்(கு) ஒன்(று)
ஈகைக்கெனை விதித்தாய்இலையே, இலங்காபுரிக்குப்
போகைக்கு நீவழி காட்டென்று போய்க்கடல் தீக்கொளுந்த
வாகைச் சிலை வளைத்தோன் மருகா, மயில் வாகனனே 

(திருப்பாடல் 59)

அற்புதத் திருப்பாடலிது, 'இல்லாதவர்க்கு நாம் இன்று செய்யும் ஈகைச் செயலானது, வேலாயுதக் கடவுளின் திருவருள் போலத் 'தக்க இடத்தில; தக்க நேரத்தில்' நம்மைத் தேடி வந்து துணை செய்யும்', அது விடுத்து 'நாம் அலங்காரமாய்ச் சேர்த்து வைத்துள்ள யாதொன்றுமே எள்ளளவும் துணை செய்யாது' என்று எச்சரிக்கின்றார் அருணகிரியார். 
-
பொங்கார வேலையில் வேலைவிட்டோன்அருள் போலுதவ
எங்காயினும் வரும் ஏற்பவர்க்(கு) இட்ட(து), இடாமல்வைத்த
வங்காரமும்; உங்கள் சிங்கார வீடு(ம்); மடந்தையரும் 
சங்காதமோ, கெடுவீர் உயிர்போம் அத்தனிவழிக்கே 

(திருப்பாடல் 66)

ஒரு புறம் 'இவ்வுடல் நீர்க்குமிழி போன்றது, செல்வம் நிலையற்றது; மின்னல் போலும் மறைந்து விடுவது' என்று பலவாறு அறிஞர்கள் போலும் பேசுவர், மற்றொரு புறம் 'எவரேனும் உதவி கேட்டு வந்தாலோ யாதொன்றும் கூறாமல் அவ்விடம் விட்டு அகன்று சென்று விடுவர்'. 'அறுமுகக் கடவுளின் மீது பக்தியிலாத இத்தகையோரின் செயல் மிகவும் நன்று' என்று பரிகசிக்கின்றார் அருணகிரியார். ஆதலின் 'பிறர்க்குதவும் ஈகைச் செயலும் பக்தியின் ஒரு அங்கம்' என்பது புலனாகின்றது. 
-
நீர்க் குமிழிக்கு நிகரென்பர் யாக்கை, நில்லாதுசெல்வம்,
பார்க்குமிடத்(து)அந்த மின்போலும்என்பர், பசித்து வந்தே
ஏற்கும்அவர்க்கு இடஎன்னின் எங்கேனும் எழுந்திருப்பார்,
வேல்குமரற்கு அன்பிலாதவர் ஞானம் மிகவு(ம்) நன்றே 

(திருப்பாடல் 75)

'பிறற்கு உதவி அதனால் எய்தும் வறுமைப் பேற்றினை எய்தாமல் போய் விட்டேனே' என்று தன்னைத் தானே நொந்து கொள்கின்றார் அருணகிரியார் ('முசியாமல்இட்டு மிடிக்கின்றிலை'). 
-
(குறிப்பு: 'இளையான்குடி மாற நாயனார்' வரலாற்றில் தெய்வச் சேக்கிழார் 'மாற நாயனாருக்கு வறுமைப்பதம் எய்துமாறு தில்லைப் பரம்பொருள் செய்தருளினார்' என்கின்றார் ('நீடிய செல்வம் மெல்ல மறைந்து நாடொறு மாறி வந்(து) ஒல்லையில் வறுமைப் பதம் புக உன்னினார் தில்லை மன்னினார்'). வாரியார் சுவாமிகள் தம்முடைய பெரிய புராண விரிவுரையில், 'அடியவர்க்கு உதவி, அதன் பொருட்டு எய்தியதால் வறுமையும் பதமாயிற்று' என்று இச்சொல்லாடலை வியந்து போற்றுவார்'. 
-
படிக்கின்றிலை, பழநித் திருநாமம் படிப்பவர்தாள்
முடிக்கின்றிலை, முருகா என்கிலை, முசியாமல்இட்டு
மிடிக்கின்றிலை, பரமானந்த(ம்) மேற்கொள விம்மி விம்மி
நடிக்கின்றிலை, நெஞ்சமே தஞ்சமேது நமக்கினியே

(திருப்பாடல் 100)

'இடுதலாகிய ஈகைச் செயலை ஒரு சிறிதும் கருதாதவன்' என்று அருணகிரியார் இத்திருப்பாடலில் தன்னைத் தானே நிந்தித்துக் கொண்டாலும், இது நமக்கான அறிவுறுத்தல் என்றே கொள்ளுதல் வேண்டும். 
-
இடுதலைச் சற்றும் கருதேனைப் போதமிலேனை அன்பால் 
கெடுதல்இலாத் தொண்டரில் கூட்டியவா, கிரெளஞ்ச வெற்பை
அடுதலைச் சாதித்த வேலோன் பிறவியற இச்சிறை
விடுதலைப் பட்டது, விட்டது பாச வினைவிலங்கே

திருப்புகழில் சபாஷ்; சலாம்:

('பச்சை ஒண்கிரி போலிரு மாதனம்' என்று துவங்கும் திருநள்ளாறு திருப்புகழ்)
-
கற்பகம் திரு நாடுயர் வாழ்வுற
     சித்தர் விஞ்சையர் மாகர் சபாசென
          கட்ட வெங்கொடு சூர்கிளை வேரற ...விடும்வேலா
-
'கற்பக மரத்தைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் தேவலோகம் ஏற்றமுற, சித்தர்கள்; விஞ்சையர்கள்; தேவர்கள் ஆகியோர் 'சபாஷ்' என்று வியந்து போற்றும் தன்மையில், சூரபன்மனுடைய படைகள் வேரோடு அழியுமாறு வேலாயுதத்தை செலுத்திய முதற்பொருளே' என்று போற்றுகின்றார் அருணகிரியார்.

('அவா மருவினா' என்று துவங்கும் சுவாமிமலைத் திருப்புகழ்),
-
சுராதிபதி மால் அயனும் மாலொடு சலாமிடும் 
சுவாமிமலை வாழும் பெருமாளே!!!!
-
'சுரர்களின் அதிபதியான இந்திரன், பாற்கடல் வாசரான ஸ்ரீமன் நாராயண மூர்த்தி, நான்முகக் கடவுளான பிரமன் ஆகியோர் அன்புடன் சலாமிட்டு வணங்கும் சுவாமிமலைப் பெருமாளே' என்று சிவகுருநாதனைப் பணிந்தேத்துகின்றார் அருணகிரியார்.

திருப்புகழில் திருவள்ளுவ தேவர் (முக்கியக் குறிப்புகள்):

அருணகிரிப் பெருமான் இருவேறு திருப்பாடல்களில் திருவள்ளுவ தேவரையும், திருக்குறளையும் சிறப்பித்துள்ளார். இனி அதன் நுட்பங்களை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம்.

(1) ('படர்புவியின் மீது மீறி' என்று துவங்கும் திருச்செந்தூர் திருப்புகழ்)

'திருவளுவ தேவர் வாய்மை என்கிற பழமொழியை' என்று இத்திருப்பாடலில் அருணகிரியார் குறிக்கின்றார். பண்பாலும்; தவச்சிறப்பாலும் உயர்ந்த பெரியர் ஆதலின் 'வள்ளுவ தேவர்' என்றும், அப்பெருந்தகையார் அருளியுள்ள குறட்பாக்களை 'வாய்மையாகிய பழமொழி' என்றும் திருப்புகழ் வேந்தர் சிறப்பிக்கின்றார்.  

மற்றொரு புறம் நெறியற்ற புலவர்களை இத்திருப்பாடலில் சாடுகின்றார். 'நெறி நூல்கள்; சங்கப் பாடல்கள்; 64 கலை நூல்கள்; காவியங்கள்; பிரபந்த வகைகள்; பொய்யா மொழியாகிய திருக்குறள்' இவைகளை வெறும் படாடோபத்திற்கும்; லோபிகளாகிய செல்வந்தர்களைப் புகழ்வதற்காகவும் மட்டுமே பயின்று (அப்பனுவல்கள் அறிவுறுத்தும் ஒழுக்க நெறிகள் யாதொன்றிலும் நில்லாமல்), 'மதுரகவி ராஜன்; ஆசுகவி; சண்டமாருதன்' என்று பட்டங்களைச் சூட்டிக் கொண்டு, ஆடம்பரச் சின்னங்களோடு உலவி வரும் இத்தகையோரின் மமதையும்; அறியாமையும் என்று தீருமோ?' என்று வெகுள்கின்றார் அருணகிரியார்.

(முதல் 12 வரிகள்):
படர்புவியின் மீது மீறி வஞ்சர்கள்
     வியனினுரை பானுவாய் வியந்துரை
          பழுதில்பெரு சீல நூல்களும் தெரி ...... சங்கபாடல்
-
பனுவல்கதை காவ்யமாம் எணெண்கலை
     திருவளுவ தேவர் வாய்மைஎன்கிற
          பழமொழியை ஓதியேஉணர்ந்துபல் ...... சந்தமாலை
-
மடல்பரணி கோவையார் கலம்பகம் 
     முதல்உளது கோடி கோள் ப்ரபந்தமும்
          வகை வகையிலாசு சேர்பெரும்கவி ...... சண்டவாயு
-
மதுரகவி ராஜநானென் வெண்குடை
     விருதுகொடி தாள மேள தண்டிகை
          வரிசையொடுலாவு மால்அகந்தை தவிர்ந்திடாதோ

(2) ('அகல்வினை உள்சார் சட் சமயிகளொடு' என்று துவங்கும் பழனித் திருப்புகழ்)
-
இத்திருப்பாடலின் இறுதியில், 'முப்பால் செப்பிய கவிதையின் மிக்(க) ஆரத்தினை' (திருக்குறளினும் மேன்மை பொருந்திய தேவாரப் பனுவல்கள்) என்று அருணகிரியார் குறிக்கின்றார். 

இகல்படு நெட்டூர் பொட்டெழ இளநகையிட்டே சுட்டருள்
     எழுபுவி துய்த்தார் மைத்துனர் ...மதலாய்!வென்
-
றிடரற முப்பால் செப்பிய கவிதையின் மிக்காரத்தினை
     எழுதி வனத்தே எற்றிய ...பெருமாளே

'அறம்; பொருள்; இன்பம்; வீடு' எனும் 4 நெறிகளையும் புருஷார்த்தங்கள் என்பர். இவற்றுள் முதல் மூன்றினை விளக்கமாகக் கூறுவதால் திருவள்ளுவ தேவனாரின் குறட்பாக்கள் 'அறநூல்' வகையென்பர். மற்றொரு புறம்  சிவஞானப் பிழிவாகிய மூவர் தேவாரப் பனுவல்கள் (அற நெறிகளோடு கூடிய) அருள் நூல் ஆதலின் 'திருக்குறளினும் விழுமிய தேவாரம்' என்று அருணகிரியார் சிறப்பித்துப் போற்றுகின்றார். 

வள்ளுவனார் காட்டிய அறவழி நின்றொழுகிப் பின்னர் சமயக் குரவர்களான நால்வர் பெருமக்கள் காட்டும் அருள் வழி பயணித்து இறுதியில் சிவமுத்தி பெற்று உய்வு பெறுவதே, ஆன்ம யாத்திரையின் உன்னத லட்சியமெனக் கொள்ளுதல் வேண்டும்.

ஒப்புவமையில்லாத தேவாரப் பனுவலைச் சிறப்பித்துக் கூறுகையில், வள்ளுவப் பெருந்தகையின் வாக்கோடு ஒப்பு நோக்கி அருணகிரியார் விளக்கியிருக்கும் தன்மையினால், வள்ளுவனாரின் மேன்மையும் அவர்தம் வாக்கின் தனிச்சிறப்பும் தெள்ளென விளங்குமன்றோ!!

திருப்புகழில் நக்கீரர்; திருமுருகாற்றுப்படை பற்றிய அற்புதக் குறிப்புகள்:

மதுரையில் சோமசுந்தரக் கடவுளிடம் வாதிட்டு அருள்பெற்ற நக்கீரனார் சிவபரம்பொருளை மட்டுமே போற்றும் நியமமுடையவர், ஆதலின் 'கந்தக் கடவுளின் மீது ஒருபொழுதும் பாடல்களைப் புனைதல் செய்யேன்' என்று உறுதி பூண்டிருந்தார். நம் வேலாயுதக் கடவுளோ 'நக்கீரனாரிடம் பனுவலொன்றினைப் பெற்றே தீருவது' எனும் திருவுளக் குறிப்புடன், பெருவிருப்பொடு காத்திருக்கின்றான்.  

(1)
இந்நிலையில் நக்கீரனார் திருப்பரங்குன்றத்திலுள்ள பொய்கைக் கரையொன்றில் அனுஷ்டானம் புரிகையில், குதிரைமுகப் பெண் பூதமொன்றினால் குகையொன்றில் அடைக்கப் பெறுகின்றார். அங்கு முன்னமே இதே நிலையில் 999 புலவர்கள் அடைக்கப் பெற்றிருப்பதைக் கண்டு உளம் வெதும்புகின்றார். 

(அகல்வினை உட்சார்' என்று துவங்கும் பழனித் திருப்புகழ்)
துரக முகக் கோதைக்கிடை
     புலவரில் நக்கீரர்க்குதவிய வேளே'

(2)
'சிவசோதியினின்றும் தோன்றியருளிய அறுமுகப் பெருங்கடவுளைப் போற்றாத கொள்கைப் பிழையினாலன்றோ இவ்வினை எய்தியுள்ளது. இனி அப்பெருமானைப் போற்றி செய்து இதனின்றும் உய்வு பெறுவேன்' என்று தெளிகின்றார். 'கந்தா; குகனே, என் குருநாதா! உன் திருவடிகளே சரணம் சரணம்' என்று உளமுருகி விண்ணப்பித்து, 'திருமுருகாற்றுப்படை' எனும் ஒப்புவமையற்ற பனுவலைத் துவங்க முற்படுகின்றார். 

('எந்தன் சடலங்கம்' என்று துவங்கும் கந்தன்குடித் திருப்புகழ்)
கந்தன்குக என்றன்குரு என்றும்தொழும் அன்பன் கவி
     கண்டுய்ந்திட அன்றன்பொடு ....வருவோனே

('முருகுலாவிய' என்று துவங்கும் பொதுத் திருப்புகழ்)
மருகு மாமதுரைக் கூடல் மால்வரை
     வளைவுளாகிய நக்கீரர் ஓதிய
          வளகை சேர் தமிழுக்காக நீடிய ....கரவோனே
(3)
கருணைப் பெருவெள்ளமான கந்தவேள் இதற்கன்றோ நெடுநாள் காத்திருந்தான். தன் திருவடிகளைச் சரணமெனப் பற்றியுள்ள நக்கீரரின் பால் கருணைத் திருநோக்கம் புரிந்தருளி, அசரீரியாய் 'உலகம் உவப்ப' என்று அடியெடுத்துக் கொடுத்துப் பேரருள் புரிகின்றான்,   

('கடிமா மலர்க்குள்' என்று துவங்கும் சுவாமிமலைத் திருப்புகழ்) 
வளவாய்மை சொற் ப்ரபந்தம் உள கீரனுக்குகந்து
     மலர்வாய் இலக்கணங்கள் ....இயல்போதி

அடிமோனை சொற்கிணங்க உலகாம் உவப்ப என்றுன் 
     அருளால் அளிக்கு(ம்) கந்த ....பெரியோனே

(4)
நக்கீரனார் அற்புத அற்புத ஆற்றுப்படைப் பனுவல்களால் குமாரக் கடவுளின் திருவடிச் சீர்மைகளைப் பட்டியலிட்டுப் போற்றிப் பரவ, உமை மைந்தனான ஷண்முகக் கடவுள் திருவுள்ளம் மிக உவந்து, அக்குதிரை முக பூதத்தைச் சம்ஹாரம் புரிந்தருளி, நக்கீரர் உள்ளிட்ட 1000 புலவர்களையும் அக்குகையினின்றும் விடுவிக்கின்றான்,  

('முலைமுகம் திமிர்ந்த' என்று துவங்கும் திருச்செந்தூர் திருப்புகழ்)
மலை முகம் சுமந்த புலவர் செஞ்சொல் கொண்டு
     வழி திறந்த செங்கை ....வடிவேலா

(5)
அருணை மாமுனிவர் கந்தர் அந்தாதித் தொகுப்பின் 51ஆம் திருப்பாடலில், 'தெய்வயானை அம்மையின் காதலின்பத்தைக் காட்டிலும் கீரனாரின் ஆற்றுப்படைத் திருப்பாடல்கள் முருகக் கடவுளின் திருவுள்ளத்திற்கு மிகவும் இனிமை சேர்க்க வல்லது' என்று வியந்து போற்றுகின்றார்.

பின்வரும் திருப்பாடல் கடினப் பதங்களை உடையது. ஆதலின் 'கைமா மயில் செவ்வி நற்கீரர் சொல் தித்தித்ததே' எனும் இறுதி வரியின் பொருளை மட்டும் இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம். 

'கைமா' - (யானை - தெய்வ யானையான ஐராவதம்) 
-
'கைமா மயில்' - (ஐராவத யானையால் வளர்க்கப் பெற்ற நம் தெய்வயானை அம்மை)
-
செவ்வி - (கலவியின்பம் அல்லது காதலின்பம்)
-
நற்கீரர் சொல் - (திருமுருகாற்றுப்படை திருப்பாடல்கள்)
-
(கந்தர் அந்தாதி 51ஆம் திருப்பாடல்)
சிகைத்தோகை மாமயில் வீரா சிலம்பும் சிலம்(பு) !அம்புரா
சி, கைத்தோகை மாமயில் வாங்கிப் பொருது திசைமுகன் !வா
சி, கைத்(து) ஓகை மாமயில் வானில் வைத்தோய் வெஞ்செருமகள் !வா
சி, கைத்தோ கைமா மயில் செவ்வி நற்கீரர் சொல் தித்தித்ததே