பரம்பொருளினும் மேம்பட்ட ஆறுமுகக் கடவுள் (கந்தபுராண நுட்பங்கள்):

'ஆதிப் பரம்பொருளான சிவபெருமானே குமார வடிவெடுத்துக் கந்தக் கடவுளாய்த் தோன்றியுள்ளார்' எனும் சத்தியத்தைக் கந்தபுராணத்தின் பல்வேறு பகுதிகள் ஐயத்திற்கு இடமின்றிப் பதிவு செய்கின்றது. இப்புரிதலோடு கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்களை அணுகுதல் வேண்டும். 

கச்சியப்ப சிவாச்சாரியார் தம்முடைய திருப்பாடல்களில், ஆறுமுக தெய்வத்தின் மேன்மைகளையும் சிறப்பியல்புகளையும் ஆங்காங்கே பல்வேறு அடைமொழிகளால் போற்றிக் கொண்டே வருவார். முதற்பொருள்; மூலப் பொருள்; மூல முதல்வன்; மயிலேறும் பரம்பொருள்; ஆதிக்கடவுள் என்று படலங்கள் தோறும் சிறப்பித்தும் நிறைவு தோன்றாமையால், கீழ்க்குறித்துள்ள இரு திருப்பாடல்களில் 'சிவபரம்பொருளை விட மேன்மை பொருந்திய ஆறுமுகக் கடவுள்' என்று போற்றித் துதித்து மகிழ்கின்றார் ('பரத்தின் மேற்படு பண்ணவன்', 'பரத்தினும் மேதகு பண்ணவன்').

(1)
சிங்கமுகாசுரன் மிகவும் சினந்து ஓராயிரம் அம்புகளை, பரம்பொருளான சிவபெருமானை விடவும் மேன்மை பொருந்திய ஆறுமுகக் கடவுளின் தேரோட்டியான வாயு தேவனின் நெஞ்சில் பதியுமாறு செய்கின்றான்,
-
(யுத்த காண்டம்: சிங்கமுகாசுரன் வதைப் படலம் - திருப்பாடல் 405)
திருத்தகும் திறல் சீய முகத்தினான்
உருத்து வாளியொர் ஆயிரம் தூண்டுறாப்
பரத்தின் மேற்படு பண்ணவன் தேர்விடு
மருத்தின் மார்புற வல்லை அழுத்தினான்
-
(சொற்பொருள்: மருத்து - வாயுதேவன், பண்ணவன் - இறைவன்)

(2)
பரம்பொருளான சிவமூர்த்தியைக் காட்டிலும் மேம்பட்ட அறுமுகக் கடவுளின் வில்லேந்தும் திருக்கரத்தையும், அக்கரங்கள் செலுத்தும் சரங்களையும், உறுதிவாய்ந்த அற்புதத் தேரையும், அத்தேரினைச் செலுத்தி வரும் வாயுதேவனின் வலிமையையும் யுத்தகளத்தில் காண்போரெல்லாம் வியந்து போற்றிப் புகழ்கின்றார், 
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 121)
பரத்தினும் மேதகு பண்ணவன் வார்வில்
கரத்தினையும் விரை வால் கரம் தூண்டும் 
சரத்தினையும் தடந்தேரினையும் கால்
உரத்தினையும் புகழ்வார் புடையுள்ளார்
-
(சொற்பொருள்: கால் - காற்றின் அதிதேவதையாகிய வாயு தேவன்)

சிவபரத்துவம் மட்டுமே பேச வந்த கந்தபுராண மாகாவியத்தில், (உபச்சார வழக்கிற்காக இருப்பினும்) நம் வேலாயுதப் பெருங்கடவுளை 'பரத்தினும் மேம்பட்ட பண்ணவன்' என்று கச்சியப்ப சிவாச்சாரியார் போற்றுவாராயின், ஆறு திருமுகங்கள் கொண்டருளும்  அப்பெருமானின் பெருமைகளை யாரே அளக்க வல்லார்!

No comments:

Post a Comment