திருப்புகழில் சுந்தரர் (ஓலை காட்டி ஆட்கொண்ட நிகழ்வு):

நம்பியாரூரரின் திருமண வைபவம் நடந்தேறி வரும் மண்டபத்திற்கு சிவபரம்பொருள் கிழ வேதியராய் எழுந்தருளி வந்து, அனைவரும் காணுமாறு உரத்த குரலில் 'இச்சுந்தரன் எனக்கு அடிமை' என்று அறிவிக்கின்றார். சுந்தரனார் அவ்வுரை கேட்டு வெகுண்டெழுந்து; விரைந்து சென்று இறைவரின் திருக்கரங்களிலிருந்த ஓலையினைப் பற்றிக் கிழிக்கின்றார். 

நால்வேதங்களும் முறையிட்டு இத்தன்மையினர் என்றறியவொண்ணா ஆதிப் பரம்பொருளான சிவபெருமான் வழியடிமைத் தொண்டரான சுந்தரனாரின் கரங்களைப் பற்றிக் கொண்டு 'இது முறையோ என்று முறையிடுகின்றார்'. இதனைப் பின்வரும் அற்புதத் திருப்பாடலில் தெய்வச் சேக்கிழார் பதிவு செய்கின்றார், 
-
(பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 192)
அருமறை முறையிட்(டு) இன்னும் அறிவதற்கரியான் பற்றி
ஒருமுறை முறையோ என்ன உழைநின்றார் விலக்கி இந்தப்
பெருமுறை உலகில் இல்லா நெறிகொண்டு பிணங்குகின்ற
திருமறை முனிவரே நீர் எங்குளீர் செப்பும்என்றார்

மேற்குறித்துள்ள அற்புத நிகழ்வினை நம் அருணகிரிப் பெருமான் 'இருளளகம் அவிழமதி' என்று துவங்கும் திருவண்ணாமலை திருப்புகழில் பதிவு செய்து போற்றுகின்றார்,
-
ஒருசிறுவன் மணமதுசெய் போதில்எய்த்து வந்து
     கிழவடிவு கொடுமுடுகி வாசலில் புகுந்து
          உலகறிய இவன்அடிமையாம் எனக் கொணர்ந்து ...சபையூடே
-
ஒருபழைய சருகுமடி ஆவணத்தை அன்று
     உரமொடவனது வலியவே கிழிக்க நின்று
          உதறி முறையிடு பழைய வேத வித்தர் தந்த ...சிறியோனே

'மாதர் கொங்கையில்' எனும் உத்திரமேரூர் திருப்புகழில், முக்கண் முதல்வர் சுந்தரனாரை ஆவணம் காட்டி ஆட்கொண்டருளிய நிகழ்வினைப் போற்றுகின்றார். 
-
சாதனம்கொடு தத்தா !மெத்தென
     வே நடந்துபொய் பித்தா உத்தரம்
          ஏதெனும்படி தற்காய் நிற்பவர் ...சபையூடே
-
தாழ்வில் சுந்தரனைத் தானொற்றி கொள்
     நீதி தந்திர நற்சார்புற்றருள்
          சால நின்று சமர்த்தா வெற்றிகொள் ...அரன்வாழ்வே
*
'தந்தமும் துன்பவெஞ் சிந்தை' என்று துவங்கும் மற்றுமொரு பொதுத் திருப்புகழில், 'சுந்தரனாரின் உலகியல் பந்தத்தை முடிவிக்கப் பரிவுடன் தோன்றி 'இவன் எனது அடிமை' என்றருளிச் செய்து, வன்தொண்டரை அருளியல் வாழ்விற்குப் புகுமாறு செய்தருளிய ஆதிப்பரம்பொருள்' என்று போற்றிப் பரவுகின்றார் நம் அருணகிரியார்,
-
சுந்தரன் பந்தமும் சிந்த வந்தன்புடன்
     தொண்டன் என்றன்று கொண்டிடும் ஆதி

No comments:

Post a Comment