அருணகிரிநாதரின் தோழரான கலிசைச் சேவகனார் (திருப்புகழ் குறிப்புகள்):

தம்பிரான் தோழரான சுந்தரனாருக்குச் சேரமான் பெருமாள் நாயனார் தோழரான தன்மை போன்று, நம் அருணகிரிப் பெருமானுக்கும் (பழனியிலுள்ள கலிசை நகரில் வாழ்ந்திருந்த) காவேரிச் சேவகனார் எனும் சிவபுண்ணிய சீலர் தோழராக விளங்கி வந்துள்ளார். இச்சேவகனார் 'வீரை' எனும் தலத்தில் பழனியாண்டவனை எழுந்தருளச் செய்தவராவார். அறுமுக தெய்வத்தை மட்டுமே பாடும் நியமம் பூண்டிருந்த, மேருமலையினும் மேம்பட்ட தவமுடைய நம் அருணகிரியாரின் திருப்புகழ் திருப்பாடல்களில் குறிக்கப் பெறுவாராயின் இப்பெருமகனாரின் சீர்மையினை என்னென்று போற்றுவது!

(1) 'தோகை மயிலே' எனும் பழனித் திருப்புகழில், 'விண்முகிலைப் போல் தன்னலமற்ற கொடைத் திறம் கொண்டவரும், தன் பெருஞ்செல்வத்தை (வாயு வேகத்தில்) வேண்டுவார்க்கு விரைந்தளித்து மகிழும் பாரிக்கு ஒப்பான வள்ளல் தன்மை உடையவரும், மன்மதனுக்கு ஒப்பான தோற்றப் பொலிவினை உடையவருமான காவேரிச் சேவகனாரின் உள்ளத்தில் மேவியிருந்து அருள் புரியும் வீரனே' என்று பழநியாண்டவனைப் போற்றுகின்றார் அருணை மாமுனிவர்.

மேகநிகரான கொடைமானாயகாதிபதி
     வாரிகலி மாருத கரோ பாரி மாமதன
          வேள் கலிசை வாழவரு காவேரி சேவகனது ...... உளமேவும்

(2) 'சீயுதிரம் எங்குமேய்' எனும் பழனித் திருப்புகழில்,
வேலைவிடு கந்த காவிரி விளங்கு
     கார்கலிசை வந்த சேவகன் வணங்க
          வீரைநகர் வந்து வாழ்பழநி அண்டர் ...பெருமாளே

(3) 'இருகனக மாமேரு' எனும் பழனித் திருப்புகழில்,
கருடனுடன் வீறான கேதனம் விளங்கு
     மதிலினொடு மாமாட மேடைகள் துலங்கு
          கலிசைவரு காவேரி சேவகனொடன்பு ...புரிவோனே

(4) 'சீறல்அசடன் வினைகாரன்' எனும் பழனித் திருப்புகழில்,
வீறு கலிசைவரு சேவகனதிதய
     மேவுமொரு பெருமை ...உடையோனே

(5) 'கோல மதிவதனம்' எனும் பழனித் திருப்புகழில்,
வீறு கலிசைவரு சேவகனதிதய
     மேவு முதல்வ வயல் வாவி புடைமருவு
          வீரை வருபழநி ஞான மலையில்வளர் ...பெருமாளே.

மேலும் இக்கலிசைச் சேவகனார்க்கு எய்தியிருந்த சுர நோயினைத் 'தலைவலி மருந்தீடு' எனும் பழனித் திருப்புகழால் அருணகிரிப் பெருமானார் போக்கியருளிய நிகழ்வினைத் திருமுருக வாரியார் சுவாமிகள் தம்முடைய 'குருநாதர்' எனும் நூலில் பதிவு செய்தருளியுள்ளார்

No comments:

Post a Comment