சூரபத்மனுக்கு சிங்கமுகாசுரனின் அறிவுரைகள் (கந்தபுராண நுட்பங்கள்):

முருகப் பெருமான் தாரகாசுரனை வதம் புரிந்துப் பூதப் படையினருடன் திருச்செந்தூருக்கு எழுந்தருளி வருகின்றார். அங்கிருந்தவாறே வீரவாகுவை இலங்கைக்கு அப்பாலுள்ள வீரமகேந்திரபுரத்திற்குத் தூதாக அனுப்புகின்றார். சூரன் தூதுச் செய்தியை அலட்சியப்படுத்த, வீரவாகு சூரனின் தளபதிகள் சிலரையும், சூரனின் மகனான வச்சிரவாகுவையும் கொன்று அங்கிருந்து மீள்கின்றான். இந்நிலையில் சூரன் அமைச்சர்களுடன் கலந்து ஆலோசிக்கின்றான். அங்குள்ளோர் யாவரும் சூரனின் மனநிலைக்கு ஏற்றவாறு பேசிக்கொண்டே வர, இறுதியாய்ச் சூரனின் இளைய சகோதரனான சிங்கமுகாசுரன் தன் அறவுரைகளைக் கூறத் துவங்குகின்றான்.  

கச்சியப்ப சிவாச்சாரியார் 41 திருப்பாடல்களில் சிங்கமுகாசுரனின் அறிவுரைகளைப் பதிவு செய்கின்றார். சிவபரத்துவம், ஆறுமுகக் கடவுளின் மேன்மைகள், படைப்பின் தன்மைகள் இவைகளோடு பற்பல தர்மங்களையும் தமையனுக்கு எடுத்துரைக்கின்றான். இப்படலத்தின் 142ஆம் திருப்பாடலில் கச்சியப்ப சிவாச்சாரியார் இவனை அறிஞர்களுக்குள் மேலான அறிஞன் ('அறிஞரின் மிக்கோன்') என்று போற்றுகின்றார்,  

தமையனே கேள், 'பரம்பொருளான சிவபெருமான், வரமளித்த நாமே அழிப்பது முறையன்று! ஆதலின் நம் சுவரூபமேயான திருக்குமாரன் ஒருவனைத் தோற்றுவித்து இச்செயலினை முற்றுவிப்போம்' என்று திருவுள்ளம் கொண்டருளினார், 
-
(மகேந்திர காண்டம்: சூரன் அமைச்சியல் படலம் - திருப்பாடல் 122)
வரமளித்த யாம் அழிப்பது முறையன்று வரத்தால்
பெருமை பெற்றுள சூரனை அடுவது பிறர்க்கும்
அரிதெனப் பரன் உன்னியே தன்னுருவாகும்
ஒரு மகற்கொடு முடித்தும் என்றுன்னினான் உளத்தில்

அக்காரணத்தால், முன்னவர்க்கெல்லாம் முன்னவரான அச்சிவ மூர்த்தி தன் நெற்றிக் கண்ணிலிருந்து, 'செக்கச் சிவந்த திருமேனியும், ஆறு திருமுகங்களும், பன்னிரு திருத்தோள்களும் கொண்டருளும் குமாரக் கடவுளைத் தோற்றுவித்துள்ளார், 
-
(மகேந்திர காண்டம்: சூரன் அமைச்சியல் படலம் - திருப்பாடல் 123)
செந்நிறத் திருமேனியும் திருமுகம்ஆறும்
அன்னதற்கிரு தொகையுடைத் தோள்களுமாக
முன்னவர்க்கு முன்னாகிய பராபர முதல்வன்
தன்நுதற்கணால் ஒருதனிக் குமரனைத் தந்தான்

'மும்மல சம்பந்தமுடைய உயிர்களினின்றும் தோன்றும் பிற உயிர்களைப் போன்று, சிவபரம்பொருளின் நெற்றிக் கண்களினின்றும் தோன்றியருளிய குமரனைத் தவறாக எண்ணி விடாதே. அக்குமாரப் பெருங்கடவுள் மறைகளையும் கடந்த நிலையில் விளங்குபவர் என்பதனை அறிவாயாக,
-
(மகேந்திர காண்டம்: சூரன் அமைச்சியல் படலம் - திருப்பாடல் 124)
மானுடத்தரில் விலங்கினில் புட்களில் மற்றும்
ஊனமுற்றுழல் யாக்கையில் பிறந்துளார் ஒப்ப
நீ நினைக்கலை பரஞ்சுடர் நெற்றியம் தலத்தே
தான்உதித்தனன் மறைகளும் கடந்ததோர் தலைவன்
*
சீலமும் பக்தியும் இல்லாதவரால் உணர இயலாத அந்த ஆறுமுகப் பரம்பொருளைப் பாலன் என்று கருதி விடாதே. 'சிறியதொரு விதைக்குள் ஆலமரத்தின் முழுத் தன்மையும் இருத்தலைப் போன்று, பால வடிவினனான குமர நாயகனுக்குள் பரம்பொருள் தன்மை பரிபூரணமாய் நிறைந்துள்ளது' என்று தெளிவாயாக, 
-
(மகேந்திர காண்டம்: சூரன் அமைச்சியல் படலம் - திருப்பாடல் 125)
சீலம் இல்லவர்க்(கு) உணரவொண்ணாத சிற்பரனைப்
பாலன் என்றனை அவனிடத்தில் பல பொருளும்
மேலை நாள்வந்து தோன்றிய சிறியதோர் வித்தின்
ஆலம் யாவையும் ஒடுங்கியே அவதரித்தது போல்

மூல முதற்பொருளைச் சிறுவன் என்று இகழ்கின்றாய், 'ஆறுமுகங்கள் கொண்டருளும் அப்பெருமான் உன்னையும் உன் அசுரப் படைகளையும் கண்ணிமைக்கும் நேரத்தில் அழித்தொழிக்க வல்லவர். எனினும் தன் பேரருள் திறத்தினைக் காட்டும் பொருட்டு, இன்று உன்னுடன் போர் புரிய வருவது போன்றதொரு திருவிளையாடலைப் புரிகின்றார்' என்பதனை உணர்வாயாக, 
-
(மகேந்திர காண்டம்: சூரன் அமைச்சியல் படலம் - திருப்பாடல் 133)
இன்ன தன்மைசேர் முதல்வனைச் சிறுவன் என்றிகழ்ந்து
பன்னுகின்றனை அவுணர்தம் கிளையெலாம் படுத்து
நின்னையும் தடிந்திடுவன்ஓர் இமைப்பினின் இரப்பும் 
தன்அருட்திறம் காட்டுவான் வந்தனன் சமர்மேல

No comments:

Post a Comment