மானசரோவரத்தில் அன்னை பார்வதியின் திருஅவதாரம் (கந்தபுராண நுட்பங்கள்):

உலகீன்ற உமையன்னை, 'சிவ அபராதம் புரிந்திருந்த தட்சனின் மகளாக முன்னர் அவதரித்திருந்த குற்றம் நீங்க, அவ்வுடலை முழுவதுமாய்த் துறந்து, புதியதொரு அவதாரத்தில் நற்தவமியற்றி அதன் பின்னர் திருக்கயிலைக்கு மீள விரும்புவதாக' இறைவரிடத்து விண்ணப்பிக்கின்றார். சிவபரம்பொருளும், இமயமலைச் சாரலில் தவமியற்றி வரும் மலையரசனின் புதல்வியாகச் செல்லுமாறு அம்பிகைக்கு அருள் புரிகின்றார். இனி இந்நிகழ்வினைக் கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணத் திருப்பாடல்கள் வாயிலாகச் சிந்தித்து மகிழ்வோம்,

தயிர்க்கடலைக் கடைந்தெடுத்த வெண்ணையுள்; பாற்கடலில் தோன்றிய அமுதத்தை வைத்தது போன்று, இடைவிடாது பனிபொழிந்து வரும் இமையமலைச் சாரலின் உட்பகுதியில் 'மானசம்' எனும் ஏரி அமைந்துள்ளது (திருக்கயிலை மலையின் தரிசன எல்லைக்குள் அமையப் பெற்றுள்ள இப்புண்ணியப் புனல் 'மானசரோவரம்' என்று பிரசித்தமாக போற்றப் பெற்று வருகின்றது).   
-
(உற்பத்தி காண்டம் - பார்ப்பதிப் படலம் - திருப்பாடல் 19)
விண்ணவர் ததிக்கடல் கடைந்த வெண்ணெயுள்
அண்ணலம் பாற்கடல் அமுதம் வைத்தெனக்
கண்ணகன் பெரும்பனி கவைஇய வெற்பின்மேல்
உண்ணிறை புனல்தடமொன்று வைகிற்றே

அந்த மானசரோவரக் கரையில் மலையரசனாகிய இமவான், அம்பிகையைப் புதல்வியாகப் பெறும் பொருட்டும், பின்னர் அன்னையை மீளவும் சிவபெருமானுக்குத் திருமணம் செய்வித்துப் பணியும் பேற்றிற்காகவும் கடும் தவமியற்றி வருகின்றான்,
-
(உற்பத்தி காண்டம் - பார்ப்பதிப் படலம் - திருப்பாடல் 20)
அன்னதோர் தடத்திடை அசல மன்னவன்
மன்னிய கௌரிதன் மகண்மையாகவும் 
தன்னிகரிலா அரன் தனக்கு நல்கவும்
முன்னுற வரும்தவம் முயன்று வைகினான்

மெய்த்தவம் புரிந்து வரும் பர்வதராஜன் காணுமாறு, உலகீன்ற உமையன்னை, அம்மானசரோவரத் தீர்த்தத்தில், தாமரை மலரொன்றின் மீது சிறு குழந்தையின் திருவடிவில் தோன்றுகின்றாள், 
-
(உற்பத்தி காண்டம் - பார்ப்பதிப் படலம் - திருப்பாடல் 21)
மெய்த்தவம் இயற்றிய வெற்பன் காணிய
அத்தட மலருமோர் அரவிந்தத்தின் மேல் 
பைத்ததோர் குழவியின் படிவத்துற்றனள்
எத்திறத்துயிரையும் ஈன்ற தொன்மையாள்
(சொற்பொருள்: வெற்பன் - மலையரசன்; பர்வத ராஜன், அரவிந்தம் - தாமரை)

மலையரசன் அத்தெய்வீகக் குழவியைக் கண்டு, 'நால்வேதத் தலைவியான பராசக்தியே அடியேனின் பொருட்டு, சிவபரம்பொருளை விட்டு நீங்கி இவ்விடம் குழந்தையைத் தோன்றியுள்ளாள், இவையாவும் முக்கண் முதல்வரின் திருருவருளே' என்றெண்ணிச் சிவானந்தக் கடலில் மூழுகுகின்றான்,
-
(உற்பத்தி காண்டம் - பார்ப்பதிப் படலம் - திருப்பாடல் 22)
ஆங்கவள் கண்டு வெற்பன் அடியனேன் பொருட்டால் அம்மை
நீங்கினள் போலும் முக்கண் நிருமலன் தன்னை என்னா
ஏங்கினன் தனது நோன்புக்கிரங்கினன் இவைகள் ஈசன்
ஓங்கு பேரருளே என்னா உவகையம் கடலுள் பட்டான்

மலையரசன், கண்ணருவி பாய, அதீத அன்பினால் உரோமக் கால்களெங்கும் நீர் கசிய, உடலெங்கும் புளகமுற, 'அடியேன் உய்ந்தேன்' என்றவாறு குழந்தை வடிவிலிருந்த அம்பிகையைத் தொழுது நிற்கின்றான், 
-
(உற்பத்தி காண்டம் - பார்ப்பதிப் படலம் - திருப்பாடல் 23)
கண்ணுறு போத வாரி கான்றிட உரோம ராசி
உண்ணிகழ் அன்பு மிக்குப் புறந்தனில் ஒழுகிற்றென்ன
வண்ணன்மெய் பொடிப்பத் துள்ளி அடியனேன் உய்ந்தேன் என்னாத்
துண்ணெனப் பாடியாடி அமலையைத் தொழுது நின்றான்
(சொற்பொருள்: வாரி - கடல், கான்றிட - பெருகிட, உரோம ராசி - மயிர்க்கால்கள், பொடிப்ப - மயிர் கூச்செரிய)

பர்வத ராஜனின் புதல்வியாகத் தோன்றியதால் அது முதல் நம் அன்னை 'பார்வதி' எனும் ஒப்புவமையற்ற திருநாமத்தால் போற்றப் பெற்று வருகின்றாள். லலிதா சஹஸ்ரநாமத்தில் 246ஆம் திருநாமமாக இத்திருப்பெயர் இடம்பெறுகின்றது.

No comments:

Post a Comment