கங்கை நதியின் தோற்றம் - அறிந்த செய்திகளும் அறியாத நிகழ்வுகளும் (கந்தபுராண நுட்பங்கள்):

திருக்கயிலையில் ஒரு சமயம் நம் உமையன்னை, இறைவரின் இரு திருக்கண்களையும் தன் திருக்கரங்களால் விளையாட்டாய் மறைக்கின்றாள். அக்கணமே புவனங்கள் யாவிலும் பேரிருள் சூழ்ந்து அனைத்துயிர்களும் அவதியுறுகின்றன. சிவமூர்த்தி உடன் தன் நெற்றிக்கண்ணினால் விழித்து நோக்கி, உலகங்கள் யாவினுக்கும் மீண்டும் ஒளியினை அளித்தருள்கின்றார். 

அம்மை தன் திருக்கரங்களை உடன் விலக்கிக் கொள்ள, அச்சத்தினால் திருக்கை விரல்கள் யாவிலும் வியர்வை தோன்றுகின்றது. அத்தன்மை கண்டு நடுக்கமுறும் அம்மையின் பத்து விரல்களிலிருந்தும் கங்கையெனும் நதியானது புதிதாகத் தோன்றிப் பெருக்கெடுத்துப் பாய்கின்றது,
-
(தக்ஷ காண்டம்: ததீசி யுத்தரப் படலம் -  திருப்பாடல் 369)
சங்கரன் விழிகள் மூடும் தனாதுகை திறக்கும் எல்லை
அங்குலி அவை ஈரைந்தும் அச்சத்தால் வியர்ப்புத் தோன்ற
மங்கை அத்தகைமை காணூஉ மற்றவை விதிர்ப்பப் போந்து
கங்கையோர் பத்தாய் யாண்டும் கடல்களில் செறிந்த அன்றே
(சொற்பொருள்: அங்குலி - கைவிரல், வியர்ப்பு - வியர்வை, விதர்ப்ப - நடுங்கிட, செறிந்த - கலந்த)

அத்துடன் நில்லாது அந்நதியானது, ஆயிரம்; கோடி எனும் தன்மையில் பல்வேறு கூறுகளாக எங்கும் பிரவகித்துப் பாய்ந்து யாவற்றையும் சூழ்ந்து கொள்ள துவங்குகின்றது. 'இதென்ன விபரீதம்?' என்று நான்முகக் கடவுள் உள்ளிட்ட தேவர்கள் யாவரும் திருக்கயிலையில் சிவபரம்பொருளிடம் சென்று முறையிட்டுக் காத்தருளுமாறு வேண்டுகின்றனர்,

முக்கண் முதல்வர் புவனங்களெங்கிலும் சூழ்ந்திருந்த கங்கையின் பெருவெள்ளக் கூறுகள் யாவையும் தன்முன் வருமாறு அழைத்தருளிப் பின் அதனைத் தன் செஞ்சடையின் உரோமம் ஒன்றிலுள் செல்லுமாறு விடுக்கின்றார்.  
-
(தக்ஷ காண்டம்: ததீசி யுத்தரப் படலம் -  திருப்பாடல் 372)
என்றலும் நதிகள் தோற்றம் இயம்பி எவ்வுலகும் சூழ்போய்
நின்றவம் நீத்தம் தன்னை நினைத்தவண் அழைத்து நாதன்
ஒன்றுதன் வேணி மேல்ஓர் உரோமத்தின் உம்பருய்ப்ப
மன்றலம் கமலத்தோனும் மாலும் இந்திரனும் சொல்வார்

தேவர்கள் யாவரும் சிவமூர்த்தியிடம், 'அம்பிகையின் திருவிரல்களில் தோன்றித் தம்முடைய சடாமுடியை அலங்கரிக்கும் பேறு பெற்றுள்ள இப்புனித தீர்த்தத்தினை எங்கள் உலகங்களிலும் சிறிது பாய்வதற்கு அருள வேண்டும்' என்று விண்ணப்பித்துப் பணிகின்றனர்.

வேத முதல்வர் தன் சடையிலிருந்து சிறிதளவு கங்கையை எடுத்து, ஸ்ரீமகாவிஷ்ணு; நான்முகக் கடவுள்; இந்திரன் ஆகிய மூவருக்கும் அளித்தருள, அதுமுதல் அம்மூன்று கூறுகள் 'ஸ்ரீவைகுந்தம்; பிரமலோகம் மற்றும் தேவலோகத்திலும்' பிரவகிக்கத் துவங்குகின்றது,
-
(தக்ஷ காண்டம்: ததீசி யுத்தரப் படலம் -  திருப்பாடல் 374)
இறையவன் வேணியுள் புக்கிருந்ததோர் கங்கை தன்னில்
சிறுவதை வாங்கி மூவர் செங்கையும் செறிய நல்க
நிறைதரும் அன்பால் தாழ்ந்து நிகழ்விடை பெற்றுத் தத்தம்
உறைநகர் எய்தி அங்கண் உய்த்தனர் அனைய நீத்தம்

அவற்றுள், இந்திரனால் தேவலோகத்திற்கு எடுத்துச் செல்லப் பெற்ற கங்கையையே பின்னாளில் பகீரத மன்னன் தன்னுடைய கடும்தவத்தினால், பூமிக்கு வரவழைக்கப் பிரயத்தனம் மேற்கொள்கின்றான். அச்சமயத்திலும் கங்கையின் அச்சிறு கூறின் வேகத்தையும் பூமியால் தாங்கவொண்ணாது எனும் நிலை உருவாக, சிவபெருமான் மீண்டுமொரு முறை கங்கையைத் தன் செஞ்சடையில் தாங்கியருளிப் பின் அவற்றுள் சிறிதளவை மட்டுமே இப்பூமிக்குச் செல்லுமாறு விடுக்கின்றார், 
-
(தக்ஷ காண்டம்: ததீசி யுத்தரப் படலம் -  திருப்பாடல் 375)
அந்நதி மூன்று தன்னில் அயனகர் புகுந்த கங்கை
பன்னரும் திறலின் மிக்க பகீரதன் தவத்தால் மீளப்
பின்னரும் இமையா முக்கண் பெருந்தகை முடிமேல் தாங்கி
இந்நில வரைப்பில் செல்ல இறையதில் விடுத்தல் செய்தான்

No comments:

Post a Comment