பதினெண் புராணங்களில் சைவ; வைணவ புராணங்களின் எண்ணிக்கை என்ன? (கந்த புராண விளக்கங்கள்):

வேத வியாசர் பதினெண் புராணங்களை வடமொழியில் இயற்றி அவைகளை சூத முனிவருக்கு உபதேசிக்கின்றார். ஆதலின் ஒவ்வொரு புராணத்தின் துவக்கமும், சூத முனிவர் நைமிசாரண்ய ஷேத்திரத்தில் குழுமியிருக்கும் எண்ணிறந்த முனிவர்களுக்கு அப்புராண நிகழ்வுகளை விவரிப்பதாகவே அமைந்திருக்கும். இனி இப்புராணங்கள் எவ்வாறு வகைப்படுத்தப் பெற்றுள்ளன என்று நம் கச்சியப்ப சிவாச்சாரியாரின் திருப்பாடல்கள் வாயிலாக உணர்ந்துத் தெளிவுறுவோம், 

'சிவபரம்பொருளுக்கென 10 புராணங்களும், ஸ்ரீமகாவிஷ்ணுவிற்கென 4 புராணங்களும், நான்முகக் கடவுளான பிரமனுக்கு 2 புராணங்களும், சூரிய தேவன் மற்றும் அக்கினி தேவனுக்கு ஓரோர் புராணமுமாய் மொத்தம் 18 புராணங்கள்' என்று பட்டியலிடுகின்றார் கச்சியப்ப சிவாச்சாரியார் (அலரி - சூரிய தேவன், அங்கி - அக்கினி தேவன்),
-
(கந்தபுராணம்: பாயிரம் - திருப்பாடல் 53)
நம்பனார்க்கு ஒருபது நாரணற்கு நான்கு 
அம்புயத்தவற்கு இரண்டு அலரிஅங்கியாம்
உம்பர்வான் சுடர்களுக்கு ஓரொன்று என்பரால்
இம்பரில் இசைக்கும் அப்புராணத்து எல்லையே

பின்வரும் திருப்பாடலில் 12 புராணங்களை வகைப்படுத்தித் தொகுக்கின்றார், 
-
(சைவம் பேணும் சிவசம்பந்தமான புராணங்களின் வரிசை): 
1. சிவ புராணம் 
2. பவிஷ்ய புராணம் 
3. மார்க்கண்டேய புராணம் 
4. இலிங்க புராணம் 
5. ஸ்காந்த புராணம் 
6. வராக புராணம் 
7. வாமன புராணம் 
8. மத்சய புராணம் 
9. கூர்ம புராணம் 
10. பிரமாண்ட புராணம் 
-
(நான்முகக் கடவுளுக்கான புராணங்களின் வரிசை) :
11. பிரம்ம புராணம் 
12. பத்ம புராணம் 
-
(கந்தபுராணம்: பாயிரம் - திருப்பாடல் 54)
எதிரில் சைவமே பவிடியம் மார்க்கண்டம் இலிங்கம்
மதிகொள் காந்த நல் வராகமே வாமனம் மற்சம்
புதிய கூர்மமே பிரமாண்டம் இவை சிவபுராணம்
பதும மேலவன் புராணமாம் பிரமமே பதுமம்
*
பின்வரும் திருப்பாடலில் மீதமுள்ள 6 புராணங்களை வகைப்படுத்துகின்றார், 
-
(ஸ்ரீமன் நாராயணருக்கான புராணங்களின் வரிசை):
13. கருட புராணம் 
14. நாரத புராணம் 
15. ஸ்ரீவிஷ்ணு புராணம் 
16. ஸ்ரீமத் பாகவத புராணம் 
-
(அக்கினி தேவனுக்கான புராணம்):
17. ஆக்கினேய புராணம் 
-
(சூரிய தேவனுக்கான புராணம்):
18. பிரம்ம வைவார்த புராணம் 
-
(கந்தபுராணம்: பாயிரம் - திருப்பாடல் 55)
கருது காருடம் நாரதம் விண்டு பாகவதம்
அரிகதைப் பெயர் ஆக்கினேயம் அழல் கதையாம்
இரவி தன்கதை பிரமகைவர்த்தமாம் இவைதாம்
தெரியும் ஒன்பதிற்றிருவகைப் புராணமாம் திறனே

No comments:

Post a Comment