சிவபெருமானுக்கு நீலகண்டம் தோன்றியது எவ்வாறு? (தவறான புரிதல்களும், முறையான கந்தபுராண விளக்கங்களும்)

சிவபரம்பொருள், பிரமன் உள்ளிட்ட தேவர்களையும், மற்றுள்ளோர் யாவரையும் காத்தருளும் பொருட்டு, பாற்கடலில் கிளர்ந்தெழுந்த ஆலகால விடத்தினை உண்ட நிகழ்வு அனைவரும் அறிந்ததே. இனி இந்நிகழ்வு தொடர்பாக வழங்கி வரும் ஒரு உப செய்தியையும் காண்போம், 'அந்நஞ்சு உட்சென்றால் இறைவருள் விளங்கியிருக்கும் அண்டசராசரங்களும் அழிவுறுமே' என்று உமையன்னை கருதியதாகவும், இறைவரின் திருக்கழுத்தினைத் தன் திருக்கரங்களால் பற்றி அவ்விடத்தினைக் கண்டத்திலேயே நிலைபெறச் செய்ததாகவும்' நிலவி வரும் இச்செய்தி குறித்து இப்பதிவில் சிந்தித்துத் தெளிவுறுவோம்,    

சிவமூர்த்தி அனைவரையும் காத்தருளவே நஞ்சினை உட்கொண்டுள்ளார், எனில் 'தன் திருமேனியுள் நஞ்சு சென்றால் அண்டசராசரங்களும் அழிவுறும்' என்றொரு தன்மை இருப்பின், அது இறைவற்கு அறியாதவொன்றாக எவ்விதம் இருந்திருக்க இயலும்?. இவ்விளக்கம் பரம்பொருள் இலக்கணத்திற்கு ஒருசிறிதும் ஒவ்வாததன்றோ?. மற்றொரு கோணம், இறைவனின் சங்கல்ப சக்தியினால் மட்டுமே ஒரு நிகழ்வின் பயன் அமையுமேயன்றிப் பிறிதொன்றால் அன்று (பின்னாளில் நம் நாவுக்கரசு சுவாமிகளுக்குச் சமணர்களால் அளிக்கப் பெறும் நஞ்சு, சிவமூர்த்தியின் திருவுள்ளச் சங்கல்பத்தினால் அமுதமென நலம் பயந்த நிகழ்வினை உய்த்துணர்க). 

இனி நடந்தேறிய மெய்மையான நிகழ்வினைக் கச்சியப்பரின் கந்தபுராணத் திருப்பாடல்கள் வாயிலாக அறிந்துணர்வோம், 

சிவமூர்த்தி தேவர்களிடம், 'இக்கொடிய நஞ்சினை நாம் உட்கொள்ளவோ? அல்லது இதன் தன்மையினை நலிவுறச் செய்துப் பிறிதொரு இடத்தில் எறிந்திடவோ?' என்று கேட்டருள்கின்றார், 
-
(தக்ஷ காண்டம் - ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 355)
காளக உருவு கொண்ட கடுவினை உண்கோ அன்றேல்
நீளிடை அதனிற் செல்ல நெறிப்பட எறிகோ என்னா
வாளுறு மதிதோய் சென்னி வானவன் அருள அன்னான்
தாளுற வணங்கி நின்று சதுர்முகன் முதலோர் சொல்வார்

அங்குள்ளோர் யாவரும், 'ஆதியும் அந்தமுமற்ற இறைவரே, பாற்கடல் கடைகையில் தோன்றிய முதல் விளைச்சலாகிய இந்த நஞ்சானது முழுமுதற் பொருளாகிய உமக்கு உரித்தானதன்றோ, ஆதலின் அடியவர்களாகிய நாங்கள் உய்யும் பொருட்டு இதனைத் தாமே அமுது செய்தருள வேண்டும்' என்று விண்ணப்பித்துப் பணிகின்றனர். முக்கண் முதல்வரும், 'அஞ்சேல்' என்று அபயமளித்து அருள் புரிகின்றார், 
-
(தக்ஷ காண்டம் - ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 357)
முடிவிலா உனக்கே அன்றோ முன்னுறு பாகமெல்லாம்
விடமதே எனினுமாக வேண்டுதும் இதனை வல்லே
அடியரேம் உய்யுமாற்றால் அருந்தினை அருள்மோ என்னக்
கடிகமழ் இதழி வேய்ந்தோன் கலங்கலீர் இனி நீரென்றான்

இறைவர் நஞ்சினை அமுது செய்கையில், அது இறைவரின் திருக்கண்டம் வழியே செல்வதை யாவரும் காண்கின்றனர். உடன் பிரமன், 'ஐயனே! இன்று எங்கள் யாவரையும் தாங்கள் காத்தருளிய தன்மைக்குச் சான்றாக, 'இந்த நஞ்சினைத் தங்கள் திருக்கண்டத்திலேயே நின்று நிலைபெறச் செய்தல் வேண்டும்' என்று தொழுதேத்துகின்றனர், 
-
(தக்ஷ காண்டம் - ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 358)
என்றனன் விரைவில் தன்கை ஏந்திய விடமுட்கொள்ளச்
சென்றது மிடற்றில் அன்ன திறத்தினை யாரும் நோக்கி
இன்றெமதுயிர் நீ காத்தற்கிங்கிது சான்றாய் அங்கண்
நின்றிட வருடி என்றே நிமலனைப் போற்றல் உற்றார்

கருணைப் பெருவெள்ளமான சிவபெருமானும் 'அவ்வண்ணமே ஆகுக' என்றருளி, நீல மணியென அவ்விடம் தம்முடைய கண்டத்தில் விளங்குமாறு செய்தருள்கின்றார். அது கண்டு தேவர்களும் மற்றுள்ளோரும், 'இன்றே யாம் மீண்டும் பிறந்து உய்வு பெற்றோம்' என்று சிவபெருமானைப் போற்றி செய்து பணிகின்றனர். 
-
(தக்ஷ காண்டம் - ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 359)
போற்றலும் மிடற்றில் எங்கோன் பொலன்மணி அணியதென்ன
மாற்றரும் தகைமைத்தான வல்விடம் நிறுவி அன்னார்க்கு 
ஏற்ற நல்லருளைச் செய்ய யாவரும் இறந்தே இன்று
தோற்றினராகும் என்னச் சொல்லரு மகிழ்ச்சி கொண்டார்

No comments:

Post a Comment