திருக்கயிலையில் நடந்தேறிய சூதாட்ட நிகழ்வும், ஆலால சுந்தரரும் (கந்தபுராணம் விவரிக்கும் அரியதொரு நிகழ்வு):

திருக்கயிலையில் ஆதிப்பரம்பொருளான சிவமூர்த்தி திருவிளையாடல் ஒன்றினைப் புரிந்தருளும் திருவுள்ளக் குறிப்புடன் உமையன்னையை நோக்கி, 'நீ நம்முடன் சூதாட்டம் விளையாடுவாயாக, நீ தோல்வியுற்றால் உன்னுடைய ஆபரணங்கள் அனைத்தையும் நீ தந்திடல் வேண்டும், நாம் தோற்பின் நம் முடியிலுள்ள பிறைச் சந்திரன் உள்ளிட்ட ஆபரணங்கள் யாவையும் உனக்குத் தருவோம்' என்றருளிச் செய்கின்றார் (திருமேனி எங்கிலும் அலங்கரிக்கும் நாகாபரணங்களையே தம்முடைய அணிகலன்கள் என்று இறைவர் குறிக்கின்றார் போலும்).   
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம்  - திருப்பாடல் 161)
சூதனை எம்மொடே பொருதி தோற்றனை
ஆதியேல் நீபுனை அணிகள் யாவையும்
ஈதியால் வென்றனை என்னின் எம்மொரு
பாதியாம் சசிமுதல் பலவும் கோடியால்

உலகீன்ற உமையவளும் இறைவரின் கருத்திற்கு இசைவு தெரிவிக்க, முக்கண் முதல்வரும் அச்சமயத்தில் அருகிருந்த வைகுந்த வாசனாரை நோக்கி 'பரந்தாமா! இவ்விளையாட்டிற்குச் சாட்சியாக பொருத்தமுற விளங்கியிருப்பாய்' என்று நியமிக்கின்றார், 
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம்  - திருப்பாடல் 162)
என்னலும் உமையவள் இசைவு கோடலும்
அன்னதொர் எல்லையில் அரியை நோக்கியே
தன்னிகர் இல்லவன் இதற்குச் சான்றென
மன்னினை இருத்தியான் மாயநீ என்றான்

இத்திருவிளையாடலைத் தொடர்ந்து விரிவாகக் காண்பது இப்பதிவின் நோக்கமன்று, 'இந்நிகழ்வினில் நம் தலைவரான ஆலால சுந்தரர் இடம்பெறுகின்ற சுவையான குறிப்பொன்றினை வெளிக்கொணரவே' இப்பதிவு. 

பின்வரும் திருப்பாடலில் 'சுந்தரர் முதலாகவுள்ள அணுக்கத் தொண்டு புரிந்து வருவோர், சிவபெருமானின் கட்டளையினைச் சிரமேற் கொண்டு, அங்கு பலகைகள் உள்ளிட்ட சூதாடு கருவிகளை முறைப்படி கொணர்ந்து வைக்கின்றனர்' என்று கச்சியப்ப சிவாச்சாரியார்  பதிவு செய்கின்றார். 
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம்  - திருப்பாடல் 183)
இந்தவாறாயிடை நிகழும் எல்லையில்
சுந்தரன் முதலிய உழையர் சுற்றினோர்
அந்தமில் பெருங்குணத்து ஆதி ஏவலில்
தந்தனர் காசொடு பலகை தன்னையே

பொதுவில் பெரிய புராண நிகழ்வுகளின் மூலமாக மட்டுமே 'சுந்தரரின் ஏற்றமிகு சிறப்பினை' அறிந்துணர்ந்து மகிழ்ந்திருக்கும் அன்பர்களுக்கு, பிற சைவ புராணங்களிலும் திருமுறைகளிலும் நம் சுந்தரர் தொடர்பாக இடம்பெறும் சிறியதொரு குறிப்பும் வியப்பூட்டுவதாகவும், உள்ளத்திற்கு பெரும் இனிமையைக் கூட்டுவதாகவும் விளங்கி வருகின்றது.

No comments:

Post a Comment