சூரசம்ஹாரப் போர் எத்தனை நாள் நடந்தேறியது? (கந்தபுராண விளக்கங்கள்):

'முருகப் பெருமானோடு கூடிய பூதப் படையினருக்கும், சூரபத்மன் உள்ளிட்ட அசுரப் படையினருக்கும் இடையே நடந்தேறிய கடும் யுத்தமானது 10 நாட்களுக்கு நீடித்தது என்று' கச்சியப்ப சிவாச்சாரியார் பின்வரும் இரு திருப்பாடல்களில் பதிவு செய்கின்றார்,  

முதல் நிகழ்வு, சிறையில் அடைப்பட்டு சொல்லொணாத் துயரோடு புலம்பி வருந்தியிருக்கும், இந்திரனின் மகனான சயந்தனின் கனவில் தோன்றும் முருகப் பெருமான், 'கவலையை ஒழிப்பாய், இன்றைய பொழுது கடந்த பின்னர், நாளைக் காலையே திருச்செந்தூரிலிருந்து புறப்பட்டு, இலங்கையைக் கடந்து, சூரனின் தீவான வீரமகேந்திரபுரத்தின் எல்லைக்கருகில் வந்தடைவோம். அன்றிலிருந்து 10 நாட்களுக்குள், சூரன் உள்ளிட்ட அசுரர் கூட்டத் தொகை முழுவதையும் சம்ஹாரம் புரிவோம்' என்றருளிச் செய்கின்றார் (சொற்பொருள்: மல்லல் - செழுமை, செந்தி மல்லலம் பதி -  செழுமை வாய்ந்த செந்தில் பதி)
-
(மகேந்திர காண்டம்: சயந்தன் கனவுகாண் படலம் - திருப்பாடல் 11)
செல்லும் இப்பகல் கழிந்தபின் நாளையே செந்தி
மல்லலம் பதி நீங்கி இந்நகர்க்(கு) அயல் வைகிச்
சொல்லும் ஐந்திரு வைகலின் அவுணர்தம் தொகையும்
அல்லல் ஆற்றிய சூரனும் முடிந்திட அடுதும்

பின்வரும் மற்றொரு திருப்பாடல், '7ஆம் நாளிலிருந்து 10ஆம் நாள் வரையில், தொடர்ந்து நான்கு நாட்கள் சூரன் ஆறுமுக தெய்வத்தோடு யுத்தம் புரிந்த நிகழ்வினை' பதிவு செய்கின்றது ('இன்ன தன்மையில் ஈரிரு நாள் வரை'). இறுதி இரு வரிகள், 'தன்னுடைய தாயான மாயையை உள்ளத்தில் வணங்கி, எண்ணற்ற மாய வடிவங்களில் தோன்றி சூரபத்மன் போர் புரிந்து வரும் தன்மையை' விவரிக்கின்றது. 
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 329)
இன்ன தன்மையில் ஈரிரு நாள் வரைத்
துன்னலன் தொலையா(து) அமர் ஆற்றியே
பின்னும் மாயையின் பெற்றியைப் புந்தியுள்
உன்னியே பல்லுருக்கொடு தோன்றினான்

No comments:

Post a Comment