விண்ணிலிருந்து தமிழகத்திற்கு வந்த காவிரி (தவறான திரைக்கதையும், உண்மை நிகழ்வும் - கந்தபுராண விளக்கங்கள்):

1972ஆம் வருடம் வெளிவந்த 'அகத்தியர்' திரைப்படத்தில், தன்னைப் பரிகசித்துப் பேசிய காவிரி தேவியை அகத்தியர் கமண்டலத்தில் அடைப்பதாகவும், பின்னர் காக்கையின் வடிவில் தோன்றும் விநாயகப் பெருமானால் அந்நதி வெளிப்படுவதாகவும் காட்சி அமைக்கப் பெற்றிருக்கும். இந்நிகழ்வுகளுள் விநாயக மூர்த்தியால் காவிரி வெளிப்பட்டது மட்டுமே உண்மை வரலாறு, அதற்கு முந்தைய நிகழ்வுகள் யாவும் திரைக்கதை சுவாரஸ்யத்திற்காகப் புனையப் பெற்றவையே. இனி இந்நிகழ்வுகள் குறித்த மெய்மையான வரலாற்றினை கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணத் திருப்பாடல்கள் வாயிலாக உணர்ந்துத் தெளிவுறுவோம், 

அகத்திய மாமுனி சிவபரம்பொருளின் கட்டளைப்படி தென்திசை நோக்கிப் பயணித்துச் செல்லுகையில், தேவர்கள் 'விந்திய மலையின் ஆணவத்தை அடக்கி அருள் புரியுமாறு' அகத்தியரை வேண்டிப் பணிகின்றனர். குறுமுனியும் இதுகுறித்துச் சிவபெருமானின் திருவருளை வேண்டித் தொழ, முக்கண் முதல்வர் திருக்காட்சி அளித்து ஆசி கூறியருள் புரிகின்றார். அச்சமயத்தில் 'தென்திசையில் அனுஷ்டானம் மற்றும் வழிபாடு புரிதற் பொருட்டு தீர்த்தமொன்றினைத் தந்தருள வேண்டும்' என்று அகத்தியர் விண்ணப்பிக்க, சிவமூர்த்தி காவிரி தேவியை அகத்தியருடன் செல்லுமாறு கட்டளையிட்டு அருள் புரிகின்றார், 
-
(கந்த புராணம் - அசுர காண்டம் - அகத்தியப் படலம்):
தீது நீங்கிய தென் திசைக்கு ஏகிய
கோதிலாத குறுமுனி தன்னொடும்
போதல் வேண்டும் பொருபுனல் காவிரி
மாது நீஎன மற்றவள் கூறுவாள்

பின்னர் சிவபெருமான் அகத்தியரிடம், 'இனி இக்காவிரியை உன்னுடைய கமண்டலத்தில் நிறைத்துச் செல்வாய்' என்று அருள் புரிகின்றார், 
-
(கந்த புராணம் - அசுர காண்டம் - அகத்தியப் படலம்):
நீடு காவிரி நீத்தத்தை நீ இனிக்
கோடி உன் பெரும் குண்டிகைப் பால்என
நாடி அத்திறம் செய்தலும் நன்முனி
மாடு சேர்ந்தனள் மாநதி என்பவே
-
மேற்குறித்துள்ள திருப்பாடல்களால் 'அகத்திய மாமுனி தென்திசைக்கு வருவதன் முன்னமே காவிரி நதியானது அவருடைய கமண்டலத்தில் விளங்கியிருந்தது' என்பதும், 'காவிரி தேவி பரிகசித்து அகத்தியர் கமண்டலத்தில் அடைத்ததாகக் கூறுவது புனைந்துரையே' என்பதும் தெளிவாகின்றது. 

பின்னர் அகத்தியர் வில்லவன் வாதாபி எனும் அசுரர்களை அழித்தொழித்து அதிலுண்டான தோஷ நிவர்த்திக்காக கொங்கு தேசத்தில் சிவவழிபாடு புரிந்து வருகின்றார். சரி நம் விநாயகப் பெருமான் இந்நிகழ்விற்குள் எங்கு வருகின்றார் எனில், சூரபன்மனின் கொடுமையினால் இந்திரன் சீர்காழித் தலத்தில் மறைந்து வாழ்ந்து வருகின்றான்; சிவவழிபாட்டிற்குப் போதுமான நீர்நிலைகள் இல்லையாதலின், நாரதரின் உபாயப்படி விநாயகப் பெருமானைப் போற்றித் துதித்துப் பணிகின்றான்.

இந்திரனின் முன் தோன்றும் வேழ முகத்து இறைவரான கணபதி, இந்திரனின் வேண்டுகோளினை ஏற்றுக் காவிரியை இந்நிலப்பிறப்பில் பாயுமாறு செய்வதாக அருள் புரிகின்றார்.  
-
(கந்தபுராணம் - அசுர காண்டம்: காவிரி நீங்கு படலம்):
அன்னவன் தனது மாட்டோர் அணி கமண்டலத்தினூடே
பொன்னி என்றுரைக்கும் தீர்த்தம் பொருந்தியே இருந்ததெந்தாய்
நன்னதி அதனை நீபோய் ஞாலமேல் கவிழ்த்து விட்டால்
இன்னதோர் வனத்தின் நண்ணும் என்குறை தீருமென்றான்

காக்கை வடிவில் அகத்தியரின் கமண்டலத்தினைக் கவிழ்த்துக் காவிரியை வெளிப்படச் செய்கின்றார். பின்னர் சிறுவனொருவனின் வடிவில் தோன்றி, கோபத்துடன் விரட்டி வரும் அகத்தியருக்கு அங்குமிங்கும் போக்குக் காட்டித் திருவிளையாடல் புரிந்துப் பின்னர் தன் சுய திருக்கோலத்தைக் காட்டியருள் புரிகின்றார். அகத்தியர் தன் தவுறுணர்ந்துத் தன் கரங்களாலேயே தலையில் குட்டிக் கொண்டு, தாரகப் பிரம்மமான விநாயகப் பெருமானிடம் பிழை பொறுக்குமாறு வேண்டிப் பணிகின்றார், யானை முக வள்ளலும் 'வருந்தற்க' என்று அருள் புரிகின்றார்,
-
(கந்தபுராணம் - அசுர காண்டம்: காவிரி நீங்கு படலம்):
அந்தண குமரன் என்றே ஐயநின் சிரமேல் தாக்கச்
சிந்தனை புரிந்தேன் யாதும் தெளிவிலேன் அதற்குத் தீர்வு
முந்தினன் இயற்றுகின்றேன் என்றலும் முறுவல் செய்து
தந்தியின் முகத்து வள்ளல் அலமரல் தவிர்தி என்றான்

No comments:

Post a Comment