கல்லாதது உலகளவு (கந்தபுராண நுட்பங்கள்)

பதிவிற்குள் செல்லுமுன் 'நான்முகக் கடவுளான பிரமன் எவ்வளவு பெரியவர்?' என்பது குறித்துச் சிறிது சிந்திப்போம். பொதுவில் மும்மூர்த்திகளுள் ஒருவராகப் போற்றப் பெறுபவர், சிவபரம்பொருளின் கட்டளையினால் படைப்புத் தொழிலைப் புரிந்து வருபவர். இவரின் ஒரு நாளானது 2000 சதுர்யுக கால அளவினைக் கொண்டது (ஒரு சதுர்யுகமானது 4,32,000 ஆண்டுகளைக் கொண்டது). இவரது நாளின் முற்பாதி 1000 சதுர்யுகங்கள் சிருஷ்டிக் காலமாகவும், பிற்பாதி 1000 சதுர்யுகங்கள் பிரளய காலமாகவும் விளங்கி வரும் . இவ்விதமாய் நான்முகக் கடவுளுக்கு 100 ஆண்டுகள் ஆயுட்காலம். 14 உலகங்களிலும் சிறந்தது பிரமனின் சத்திய லோகம் என்று புராணங்கள் பறைசாற்றுகின்றது. 

'இவ்விதமான அரிய பெரிய சிறப்புகளோடு விளங்கி வரும் நான்முகக் கடவுளே ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளறியாது மயங்குவாராயின், நாம் பெற்றுள்ள மிகச் சிறிய அளவிலான ஞானத்தையெண்ணி அகந்தை கொள்வதென்பது நகைப்புக்குரியதே' என்று கச்சியப்ப சிவாச்சாரியார் பின்வரும் திருப்பாடலில் அறிவுறுத்துகின்றார்.  
-
(உற்பத்தி காண்டம்: அயனைச் சிறைபுரி படலம் - திருப்பாடல் 13)
தூமறைக்கெலாம் ஆதியும் அந்தமும் சொல்லும்
ஓமெனப்படும் ஓரெழுத்துண்மையை உணரான்
மாமலர்ப் பெரும் கடவுளும் மயங்கினான் என்றால்
நாம்இனிச்சில அறிந்தனம் என்பது நகையே!!!

No comments:

Post a Comment