இந்த விரதமிருந்தால் முக்தி நிச்சயம் - சிவபெருமானின் வாக்குறுதி (கந்தபுராண நுட்பங்கள்):

முருகப் பெருமானின் திருஅவதாரம் இமயத்திலுள்ள சரவணப் பொய்கையில் நிகழ்ந்தேறுகின்றது.  கார்த்திகைப் பெண்களால் சிறிது காலம் வளர்க்கப் பெற்று வரும் குமாரக் கடவுளைத் திருக்கயிலைக்கு அழைத்துச் செல்லும் பொருட்டு, சிவபெருமானும் அம்பிகையும் அப்பொய்கைக்கு எழுந்தருளி வருகின்றனர். 

அங்கு ஆறு தனித்தனி திருவுருவங்களுடன் அற்புதத் திருவிளையாடல்கள் புரிந்திருந்த முருகக் கடவுளை அம்பிகை, தன் திருக்கரங்களால் காதலோடு எடுத்துத் தழுவி, ஆறு திருமுகங்களும் ஒரு திருமேனியும் கொண்டதோர் வடிவினனாகச் செய்கின்றாள். 

ஆறு கார்த்திகைப் பெண்களும் அங்கு வந்து அம்மையப்பரைப் பணிகின்றனர். சிவபெருமான் அவர்களிடம், 'இக்கந்தனை நீங்கள் பாலூட்டி வளர்த்தமையால், இவன் உங்கள் மைந்தனாகவும் அறியப் பெறும் பொருட்டுக் கார்த்திகேயன் எனும் பெயர் இவனுக்கு உரித்தாகுக. உங்களுடைய (கார்த்திகை) நட்சத்திரத்தில் இவனின் திருவடியினைப் போற்றி நல்விரதமிருப்போரின் துன்பங்கள் யாவையும் களைந்து, அவர்கட்கு முத்திப் பேற்றினையும் அளித்தருள்வோம்' என்று பேரருள் புரிகின்றார்.   

(உற்பத்தி காண்டம்  - சரவணப் படலம் - திருப்பாடல் 30)
கந்தன்தனை நீர்போற்றிய கடனால்இவன் உங்கள்
மைந்தன்எனும் பெயராகுக மகிழ்வால் எவரேனும்
நுந்தம் பகலிடை இன்னவன் நோன்றாள் வழிபடுவோர்
தந்தம்குறை முடித்தே பரம்தனை நல்குவம் என்றான்
-
(சொற்பொருள்: நுந்தம் பகல் - உங்கள் கார்த்திகை நட்சத்திர தினம், நோன்றாள் - திருவடிகள், பரம் - சிவமுத்தி)

No comments:

Post a Comment