முருகப் பெருமான் உலவும் இடங்கள் (கந்தபுராண விளக்கங்கள்):

சரவணப் பொய்கையில் கார்த்திகைப் பெண்களிடம்  சில காலம் வளர்ந்து வரும் கந்தக் கடவுளைச் சிவபரம்பொருளும் அம்பிகையும் திருக்கயிலைக்கு அழைத்துச் செல்கின்றனர். இந்நிலையில் முருகப் பெருமான் புரிந்தருளும் எண்ணிறந்த திருவிளையாடல்களை நம் கச்சியப்ப சிவாச்சாரியார் 'திருவிளையாட்டுப் படலம்' எனும் பகுதியில் காட்சிப்படுத்தி மகிழ்கின்றார். முருகப் பெருமான் உலவும் இடங்களைப் பட்டியலிடும் இப்படலத் திருப்பாடல்களுள் ஒன்றினை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம், 

'முன்னவனான விநாயகப் பெருமான் எழுந்தருளியுள்ள இடங்கள் தோறும் உலவி வருவார், அம்மையப்பரான சிவபெருமானும் உமையன்னையும் கோயில் கொண்டருளும் தலங்கள் தோறும் உலவுவார், கடப்ப மரங்கள் நிறைந்துள்ள பகுதிகள் தோறும் உலவுவார்' என்று விவரித்துக் கொண்டே வரும் கச்சியப்பர் இறுதியாய், 'செந்தமிழும்; மறைமொழியான வடமொழியும் இணைந்து வழங்கப் பெறும் பதிகள் தோறும் நம் சிவகுமரன் உலவி வருவார்' என்று பதிவு செய்கின்றார். 
-
(உற்பத்தி காண்டம்: திருவிளையாட்டுப் படலம் - திருப்பாடல் 5)
இந்துமுடி முன்னவன் இடந்தொறும் உலாவும்
தந்தையுடன் யாயமர் தலங்களில் உலாவும்
கந்தமலர் நீபமுறை கண்டொறும் உலாவும்
செந்தமிழ் வடாதுகலை சேர்ந்துழி உலாவும்
(சொற்பொருள்: யாய் - தாய்)

சிவபெருமான் அருளியுள்ள, 'ரிக்; யஜுர்; சாம; அதர்வணம்' எனும் நால்வேதங்களும் வடமொழியில் வழங்கி வருகின்றன. மற்றொருபுறம், அடியவர் பெருமக்கள் அருளிச் செய்துள்ள 'நால்வேத சாரமான திருமுறைகளும், ஏனைய தெய்வப் பனுவல்களும்' தமிழ் மொழியில் அமையப் பெற்றுள்ளன. சைவப் பெருஞ்சமயத்திற்கு இவ்விரண்டுமே இரு கண்களெனப் போற்றுதற்குரியன. 

எந்தெந்த இடங்களில் இவ்விரு மொழிகளிலுள்ள மந்திரங்களும்; பனுவல்களும் பேதமின்றிச் சமமாக இணைந்துச் சிறப்பிக்கப் பெறுகின்றதோ, அத்திருத்தலங்களில் 'நம் வேலாயுத தெய்வம் விருப்பத்தோடு எழுந்தருளிப் பேரருள் புரிகின்றான்' என்பது இதனால் புலனாகின்றது (சிவ சிவ).

No comments:

Post a Comment