காசியில் மரணிக்கும் ஆன்மாக்களுக்குச் சிவபெருமான் எந்த மந்திரத்தை உபதேசித்து முத்தியளிக்கின்றார்? (கந்தபுராண விளக்கங்கள்):

காசியில் மரணிக்கும் ஆன்மாக்களுக்கு ஆதிப் பரம்பொருளாகிய சிவபெருமான் மந்திர உபதேசம் புரிந்துப் பின் முத்திப் பேற்றினையும் அளித்தருள்வதாகப் பொதுவில் கேள்வியுற்றிருப்போம். எனில் 'சிவமூர்த்தி எந்த மந்திரத்தை உபதேசம் செய்கின்றார்?' என்பதற்கான விடையை நம் கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணத் திருப்பாடல்கள் வாயிலாக உணர்ந்துத் தெளிவுறுவோம்,

முதல் திருப்பாடல் 'திருக்கயிலையில் முருகப் பெருமான் பிரமனிடம் 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தின் பொருளைக் கேட்டுச் சோதிக்கும்' நிகழ்வு தொடர்பானது. அச்சமயத்தில் பிரமன் அச்சத்துடன் 'சிவபெருமான் எழுந்தருளும் பீடமாய் விளங்குவதும், எழுத்துக்கள் மற்றும் நால்வேதங்களுக்கும் முதன்மையாகத் திகழ்வதும், காசி ஷேத்திரத்தில் மரணிக்கும் ஆன்மாக்களுக்கு சிவமூர்த்தி உபதேசிப்பதுமான பிரணவத்தின் பொருள் யாதென்று?' சிந்தித்துத் திகைப்பதாகக் கச்சியப்ப சிவாச்சாரியார் பதிவு செய்கின்றார். ஆதலின் 'சிவபெருமான் காசியில் பிரணவ மந்திர உபதேசம் புரிகின்றார்' என்பது இதனால் புலனாகின்றது, 
-
(உற்பத்தி காண்டம் - அயனைச் சிறைபுரி படலம்):
ஈசன் மேவரும் பீடமாய் ஏனையோர் தோற்றும்
வாசமாய் எலா எழுத்திற்கும் மறைகட்கும் முதலாய்க்
காசி தன்னிடை முடிபவர்க்கு எம்பிரான் கழறும்
மாசில் தாரகப் பிரமமாம் அதன்பயன் ஆய்ந்தான்

இரண்டாவதாக, 'அகத்தியர் வடதிசையிலிருந்து தென்திசைக்கு வரும் வழியில் காசித் தலத்தையும் தரிசிக்கும் நிகழ்வினை' விவரிக்கும் பின்வரும் திருப்பாடலில், 'காசியில் அந்தமடைவோருக்குச் சிவபெருமான் தனது மூல மந்திரத்தை உபதேசம் செய்தருள்வதாக' கச்சியப்ப சிவாச்சாரியார் பதிவு செய்கின்றார் ('அந்தமது அடைந்தோர்க்கு அங்கண் அருளினால் தனது மூல மந்திரம் உணர்த்தும் முக்கண் வானவன் காசி புக்கான்'). ஆதலின் கீழ்க்குறித்துள்ள திருப்பாடலே, 'சிவபெருமான் காசியில் சிவ பஞ்சாக்ஷர உபதேசமும் புரிகின்றார்' என்பதற்கான பிரமாணம்,
-
(அசுர காண்டம் - விந்தம் பிலம்புகு படலம்)
பைந்தமிழ் முனிவன் வான்தோய் பனிவரையதனை நீங்கிக்
கந்தரம் செறி பொற்கோட்டுக் கடவுளர் வரைச்சார்எய்தி
அந்தமது அடைந்தோர்க்கு அங்கண் அருளினால் தனது மூல
மந்திரம் உணர்த்தும் முக்கண் வானவன் காசி புக்கான்

No comments:

Post a Comment