வேத வியாசரின் அவதார நோக்கம் (கந்த புராண விளக்கங்கள்):

திருக்கயிலையிலுள்ள சிவபரம்பொருளின் திருச்சபையில் இந்திரன் உள்ளிட்ட தேவர்கள்; நான்முகக் கடவுளான பிரமன்; பாற்கடல் வாசனாரான ஸ்ரீமகாவிஷ்ணு முதலியோர் கூடியிருக்கின்றனர். தேவர்கள் முக்கண் முதல்வரிடம், 'நிலவுகிலுள்ளோர் யாவரும் தாம் அருளியுள்ள மறைகளுக்குத் தத்தமது விருப்பம் போல் பொருள் கற்பித்துக் கொண்டு, அற நெறியிலிருந்து பிறழ்ந்து வருகின்றனர்' என்று முறையிட்டுப் பணிகின்றனர்.   

நான்மறை நாயகரான சிவமூர்த்தி ஸ்ரீமகாவிஷ்ணுவிடம், 'காதலுடன் காத்தல் தொழிலைப் புரிந்து வரும் பரந்தாமா!, உம்முடைய குற்றமற்ற கலைகளில் ஓர் அம்சத்தைக் கொண்டு நிலவுலகில் வியாச முனியாகத் தோன்றுவீராக' என்று அருளிச் செய்கின்றார், 
-
(கந்தபுராணம்: பாயிரம் - திருப்பாடல் 32)
காதலின் அருளுமுன் கலையின் பன்மையில் 
கோதறும் ஓர்கலை கொண்டு நேமிசூழ்
மேதினி அதனிடை வியாதன் என்றிடு
போதக முனியெனப் போந்து வைகுதி

சிவபெருமான் ஸ்ரீமகாவிஷ்ணுவிடம் மேலும் கூறுகின்றார், 'அவ்வாறு வியாசனாய்த் தோன்றிய பின்னர், நாமருளிய மறைகளை ஆய்ந்தறிந்து அதனை நான்காகப் பகுத்து நிலவுலகிலுள்ளோர் அகஇருளை நீக்குவீராகுக, 
-
(கந்தபுராணம்: பாயிரம் - திருப்பாடல் 33)
போந்தவண் இருந்தபின் புகரிலா மறை
ஆய்ந்திடின் வந்திடும் அவற்றை நால்வகை
வாய்ந்திட நல்கியே மரபினோர்க்கெலாம்
ஈந்தனை அவர்அகத்திருளை நீத்தியால்

சிவபெருமான் ஸ்ரீமகாவிஷ்ணுவிடம் மேலும் கூறுகின்றார், 'துன்பங்களைப் போக்கிடும் பதினெண் வகைப் புராணங்களை நாம் முன்னமே நந்தி அறியுமாறு கூறியுள்ளோம்', 
-
(கந்தபுராணம்: பாயிரம் - திருப்பாடல் 36)
என்பெயர் அதற்கெனில் இனிது தேர்ந்துளோர்
துன்பம் அதகற்றிடும் தொல் புராணமாம்
ஒன்பதிற்றிருவகை உண்டவற்றினை
அன்புடை நந்திமுன்அறியக் கூறினேம்

சிவபெருமான் மேலும் தொடர்கின்றார், 'நந்தி அப்புராணங்களை சனற்குமாரருக்கு கூறினான், நிலவுலகில் வியாசனாய்த் தோன்றிய பின்னர் சனற்குமாரரிடமிருந்து அவைகளை அறிந்து கொள்வீராகுக', 
-
(கந்தபுராணம்: பாயிரம் - திருப்பாடல் 37)
ஆதியில் நந்திபால் அளித்த தொன்மைசேர்
காதைகள் யாவையும் கருணையால் அவன்
கோதற உணர் சனற்குமாரற்கீந்தனன்
நீதியொடவனிடை நிலத்தில் கேட்டியால்

ஆக, 'பராசர மகரிஷியின் திருக்குமாரராகத் தோன்றிய வேத வியாசரின் பிரதான அவதார நோக்கங்கள் இரண்டு' என்று கச்சியப்ப சிவாச்சாரியார் பதிவு செய்கின்றார், 

1. ஒவ்வொரு துவாபர யுக துவக்கத்திலும் தோன்றி, அது வரையிலும் ஒரே தொகுப்பாக விளங்கி வந்துள்ள வேதங்களை, 'ரிக், யஜூர், சாம, அதர்வணம்' என்று நான்மறைகளாக பகுத்தளிப்பது,

2. ஆதியில் சிவபெருமான் அருளியுள்ள பதினெண் புராணங்களையும் சனற்குமாரரிடமிருந்துக் கேட்டறிந்து அதனைச் சுலோக வடிவமாக்கி நமக்களித்தல், 

இவை நீங்கலாக, பிரம்ம சூத்திரம், 5ஆவது வேதமெனப் போற்றப் பெறும் மகாபாரத இதிகாசம் ஆகியவைகளையும் வடமொழியில் இயற்றி அருளியுள்ளார் வேத வியாசர்.

No comments:

Post a Comment