நவ வீரர்களின் தோற்றம் (கந்தபுராண நுட்பங்கள்):

சிவபெருமானின் ஐந்து திருமுகங்களினின்றும்; மற்றுமுள்ள அதோமுகத்தினின்றும் தோன்றிய ஆறு தீச்சுடர்களின் வெம்மை தாளாமல் திருக்கயிலையிலுள்ளோர் யாவரும் அங்குமிங்குமாய்ப் பதறி ஓடுகின்றனர். அருகில் எழுந்தருளியிருந்த நம் உமையன்னையும்  அவ்வெப்பத்தினைத் தாள மாட்டாது இறைவரிடமிருந்து விரைந்து விலகிச் செல்கின்றாள். அச்சமயத்தில் அம்மையின் திருவடிச் சிலம்பிலிருந்து எண்ணிறந்த மணிகள் சிதறுகின்றன. அம்மணிகளுள் உமா தேவியாரின் பிம்பம் தோன்றும் 9 மணிகளை இறைவர் பார்த்தருளி, 'விரைந்து வெளியில் வாருங்கள்' என்று அழைத்தருள, அவைகளினின்றும் நவசக்தி தேவியர் வெளிப்பட்டுப் பணிகின்றனர். 

9 தேவியரும் சிவமூர்த்தியின் திருவுள்ளத்தில் இடம்பெற விரும்ப அக்கணமே அவர்கள் யாவரும் (சிவசங்கல்பத்தால்) கருவுருகின்றனர். உமையன்னை அதுகண்டு உளம் வெதும்பி, 'இவ்விதம் நேர்வதற்கு நீங்கள் காரணமாக இருந்ததால் நெடுநாட்கள் இக்கருவினைச் சுமப்பீர்' என்று சாபமிடுகின்றாள். அதனால் அச்சமுற்று விளங்கிய அந்த 9 தேவியரிடத்தும் வெளிப்பட்ட வியர்வையினின்றும் 1 லட்சம் வீரர்கள் தோன்றுகின்றனர். 

இதனிடையில் சரவணப் பொய்கையில் சிவபரம்பொருளின் குமார வடிவமாக ஆறுமுக தெய்வம் திருஅவதாரம் புரிகின்றான். அம்மை விதித்த சாப நீக்கத்திற்கான காலமும் கூடிவர, அந்த 9 சக்தியரிடத்தும் ஓரோர் வீரராகத் தோன்றி, நவவீரர்களும் ஒன்று சேர்ந்து அம்மையப்பரின் திருமுன்பு வந்து பணிகின்றனர். 
-
அவர்கள் பெயர்கள் முறையே 'வீரவாகு, வீரகேசரி, வீரமா மகேந்திரன், வீரமா மகேச்சுரரன், வீரமா புரந்தரன், வீர ராக்கதன், வீர மார்த்தாண்டன், வீராந்தகன். வீரதீரன்' என்று வழங்கப் பெறுவதாயின. 

(1)
நவ வீரர்களும் பணிந்து தொழுதிருக்க சிவபெருமான் உமாதேவியாரிடம், 'தேவி, இவர்கள் புதியவரல்லர், நம் நந்தி கணத்தவரே இச்சமயத்தில் இங்கு நவ வீரர்களாகத் தோன்றியுள்ளனர். பெருவலிமையும் ஆற்றலும் மிக்க இவர்கள் நம் மைந்தர்களாவர்' என்றருளிச் செய்கின்றார். (ஆதலின் 'முன்னமே சிவமுத்தி பெற்று நந்தி கணத்தவராக விளங்கியிருந்த 9 முத்தான்மாக்களையே இறைவர் புதியதொரு வடிவில் மீண்டும் தோன்றுமாறு சங்கல்பிக்கின்றார்' என்பது புலனாகின்றது).
-
(உற்பத்தி காண்டம் - துணைவர் வரு படலம் - திருப்பாடல் 35)
உதிதரும் அத்திறல்வீரர் அரியணைமேல் அம்மையுடன் உறைந்த நாதன்
பதமலர்கள் பணிந்தெழலும் அவர்க்கண்டு பார்ப்பதியைப் பரிவால் நோக்கி
மதியுடையர் திறலுடையர் மான அரும்கலத்தினர் நம் மைந்தர் இன்னோர்
புதியரலர் நந்திதனிக் கணத்தவர்என்றான் சுருதிப் பொருளாய் நின்றான்

(2)
இறைவரின் திருவாக்கினைக் கேட்டு அம்மை திருவுள்ளம் மகிழ்ந்து அவர்கட்குப் பேரருள் புரிகின்றாள். முக்கண் முதல்வர் நவவீரர்கள் ஒவ்வொருவருக்கும் அற்புத வாளொன்றினை அருளி, 'நவசக்தியர் வியர்வையினின்றும் தோன்றிய லட்சம் வீரர்களோடு சேர்ந்து நீங்கள் அனைவரும் உங்கள் இறைவனான நமது மைந்தனை விட்டு நீங்காமல் அவனுக்குத் தொண்டு புரிந்து வருவீர்களாகுக' என்றருள் புரிகின்றார், 
-
(உற்பத்தி காண்டம் - துணைவர் வரு படலம் - திருப்பாடல் 36)
தேவியது கேட்டு மைந்தர்க்கருள் புரிய அவர்க்கெல்லாம் சிவன் வெவ்வேறு
தாவில்சுடர் வாளுதவி வியர்ப்பில்வரும் ஓரிலக்கம் தனயரோடு
நீவிர்களும் ஒன்றி நுங்கட்(கு) இறையவனாகிய சேயை நீங்கலின்றி
ஏவலவன் பணித்தன செய்தொழுகுதிர் என்றான் அவரும் இசைந்து தாழ்ந்தார்

No comments:

Post a Comment