வாயு தேவனைச் சிறையிலடைக்கும் சூரபத்மன் (தவத்தின் மேன்மை) - கந்தபுராண நுட்பங்கள்:

சிவபரம்பொருள் குமார வடிவெடுத்து ஆறுமுகக் கடவுளாகத் தோன்றுவதற்கு முன்னதான காலகட்டமிது. சூரபத்மனுக்கு அஞ்சி இந்திரன் மறைந்து வாழ்ந்து வருகின்றான், சிவமூர்த்தியிடம் மீண்டுமொரு முறை தன்னுடைய நிலை குறித்து முறையிட்டு வரலாம் என்றெண்ணித் திருக்கயிலைக்குச் செல்கின்றான். செல்லுமுன் மனைவியான இந்திராணியை அரிகர புத்திரரான ஸ்ரீமகாசாஸ்தாவின் திருவடிகளில் அடைக்கலமாக விட்டுச் செல்கின்றான். இதற்கிடையில் சூரனின் தங்கையான அஜமுகி தனித்திருக்கும் இந்திராணியை அபகரித்துச் செல்ல முயல, மகாசாஸ்தாவின் பூதப் படைத் தலைவரான மகாகாளர் அவ்விடத்தே தோன்றி அஜமுகியின் கைகளைத் துண்டித்து இந்திராணியைக் காக்கின்றார்.  

உடன் அஜமுகி (இலங்கைக்கு அப்பாலுள்ள) வீரமகேந்திரபுரம் எனும் தீவிற்குச் சென்று, தமையனான சூரபத்மனிடம் இது குறித்து முறையிட்டுக் கதறுகின்றாள். தேவர்களில் ஒருவரே இச்செயலுக்குக் காரணம் என்றெண்ணும் சூரன் கடும் கோபம் கொள்கின்றான். சூரிய தேவனை அழைத்து 'நீயும் இச்செயலை விண்ணிலிருந்து கண்டிருப்பாயே, ஏன் எம்மிடம் இது குறித்து அறிவிக்கவில்லை?' என்று முழங்கி, நடுநடுங்கியிருந்த சூரிய தேவன் உள்ளிட்ட எண்ணிறந்த தேவர்களைச் சிறையிலிட்டுக் கொடுமைப்படுத்தத் துவங்குகின்றான்.

மேலும் சினம் தனியாதவனாய், வாயு தேவன் மற்றும் அவனுடைய சார்பில் பணிபுரிந்து வரும் வாயுதேவர்களின் கூட்டத்தினர் யாவரையும் சபையின் முன் கொண்டு வர ஆணையிடுகின்றான். பேசக்கூடத் திராணியற்ற நிலையில் அச்சமுற்று நிற்கும் வாயுதேவர்களின் கூட்டத்தினர் யாவரையும் 'எங்கும் வியாபித்துப் பரவும் நீங்களும் என் தங்கையின் நிலை குறித்து எம்மிடம் அறிவிக்கவில்லையே' என்று கூறி அவர்களையும் சிறையிலிட்டு வாட்டத் துவங்குகின்றான்,
-
(அசுரகாண்டம் :- சூரன் தண்டம்செய் படலம் - திருப்பாடல் 49)
வன்திறல் இன்றியே மனத்தில் அச்சமாய்
நின்றிடு கால்களை நீடு கால்களில் 
துன்றிய கனைகழல் சூரனென்பவன்
ஒன்றொரு சிறைதனில் உய்த்திட்டானரோ

இவ்விடத்தில் ஒரு நுட்பம், 'வாயு தேவனின் சக்தியோ அளப்பரியது, முன்பொரு சமயம் ஆதிசேடனுடனான போட்டியொன்றில் மேருமலையின் சிகரங்களையே தகர்த்தெறிந்தவன், சக்திக்கு இலக்கணமாய் விளங்கி வரும் வாயுவையும் ஒருவன் இவ்விதமாய் நடுநடுங்கச் செய்து சிறையிலிட முடியுமெனில், இவ்வுலகினில் தவத்தினால் அடைய இயலாத சக்தியும் செல்வங்களும் உளவோ?' என்றெண்ணி வியக்கின்றார் கந்தபுராண ஆசிரியரான நம் கச்சியப்ப சிவாச்சாரியார். 
-
(அசுரகாண்டம் :- சூரன் தண்டம்செய் படலம் - திருப்பாடல் 50)
ஈற்றினை இழைத்திட இருக்கும் கால்களைச்
சீற்றமொ(டு) அவுணர்கோன் சிறையில் வீட்டினான்
சாற்றிடின் உலகமேல் தவத்தினால் வரும்
பேற்றினும் உளதுகொல் பெருமைத்தானதே

கந்தபுராணத் திருப்பாடல்களில் ஆங்காங்கே தவத்தின் அவசியத்தையும் சிறப்பையும் பதிவு செய்து கொண்டே வருவார் கச்சியப்ப சிவாச்சாரியார் ('மேலை தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்' என்பாள் நம் அவ்வைப் பிராட்டி).

No comments:

Post a Comment