கந்தபுராணம் பறைசாற்றும் காஞ்சீபுரத் தலச் சிறப்புகள்:

'முத்திப்பேறு தரவல்ல ஏழு நகரங்களுள் தலையாய சிறப்புடன் விளங்குவது இக்காஞ்சீபுர ஷேத்திரமே' என்று சிவபரம்பொருள் முன்பொரு சமயம் உமையன்னையிடம் அருளிச் செய்ததாகக் கச்சியப்ப சிவாச்சாரியார் பதிவு செய்கின்றார் (மற்ற ஆறு முத்தி நகரங்கள் - ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் அவதாரத் தலமான அயோத்தி, ஸ்ரீகிருஷ்ணனின் அவதாரத் தலமான மதுரா, மாயாபுரி எனும் ஹரித்வார், அவந்தி எனும் உஜ்ஜைன், வாரணாசி எனும் காசி மற்றும் ஸ்ரீகிருஷ்ணன் அரசு புரிந்த துவாரகாபுரி ஷேத்திரம்)    
-
(திருநகரப் படலம் - திருப்பாடல் 221):
அழகிய அயோத்தி மதுரையே மாயை அவந்திகை காசிநற் காஞ்சி 
விழுமிய துவரையெனப் புவிதன்னில் மேலவாய் வீடருள்கின்ற 
எழுநகரத்துள் சிறந்தது காஞ்சியென்றுமுன் எம்பிரான் உமைக்கு 
மொழிதரு நகர் அந்நகர்எனில் அதற்கு மூவுலகத்து நேருளதோ

(பாவச்செயலென்று அறியாமல்) இக்காஞ்சியில் புரியப் பெறும் ஒரு கோடி பாவங்களின் எண்ணிக்கை ஒன்றாகக் குறைந்து விடும். மற்றொருபுறம், இந்த ஷேத்திரத்தில் புரியப்பெறும் தர்ம காரியங்களுக்கான நற்பலன்கள் ஒன்றிற்குக் கோடி மடங்காய்ப் பெருகி வரும். இத்தன்மையியினால் எண்ணிறந்த தேவர்களும் முனிவர்களும் தத்தமது வசிப்பிடங்களை நீக்கிக் காஞ்சிப்பதியில் விரும்பித் தங்கியிருந்து, தவமும் சிவாச்சார்ச்சனையும் புரிந்துப் பேறு பெற்றுள்ளார்கள்,  
-
(திருநகரப் படலம் - திருப்பாடல் 225):
பாவமோர் கோடி புரியினும் ஒன்றாம் பரிவினில் தருமமொன்றியற்றின்
ஏவரும் வியப்பக் கோடியாய் மல்கும் இன்னதோர் பெற்றியை நாடித்
தேவர்கள் முனிவர் தம்பதம் வெறுத்துச் சிவனருச்சனை புரிந்தங்கண்
மேவினர் தவம் செய்திருத்தலால் காஞ்சி வியனகர்ப் பெருமையார் விரிப்பார்

பிரமனின் பிற்பகலான பிரளய காலத்திலும், முற்பகலான சிருஷ்டிக் காலங்களிலும் காஞ்சிபுரம் ஒருசிறிதும் அழிவுறாது விளங்கும், ஆதலின் இத்தலம் பிரம்ம சிருஷ்டியன்று, உமையொரு பாகனாரான சிவபெருமானே உருவாக்கியுள்ள புண்ணிய ஷேத்திரம்,
-
(திருநகரப் படலம் - திருப்பாடல் 226):
கங்கைதன் சிறுவனருள் பெறு வேதாக் கண்படை கொண்ட காலையினும்
அங்கவன் துஞ்சும் பொழுதினும்  காஞ்சி அழிவுறாதிருந்த பான்மையினால்
துங்கவெண் பிறையும் இதழியும் அரவும் சுராதிபர் முடிகளும்அணிந்த
மங்கையோர் பங்கன் படைத்ததேயன்றி மலரயன் படைத்ததன்றதுவே

உமையன்னையாகிய காமாக்ஷி தேவி இன்னமும் தவம் புரிந்து வரும் இந்த புண்ணிய ஷேத்திரத்தில், இறப்போர்; பிறப்போர்; நிலையாய் வசிப்போர்; நான்மறைகளாகிய மாமர நிழலில் எழுந்தருளியுள்ள ஏகாம்பரேஸ்வரப் பரம்பொருளைத் தரிசித்துப் பணிவோர் ஆகிய யாவருக்கும் சிவமுத்தியினை நல்க வல்ல ஷேத்திரம் காஞ்சீபுரம்,
-
(திருநகரப் படலம் - திருப்பாடல் 232):
இன்னமும் உமையாள் நோற்றிடும் ஆங்கே இறப்பினும் பிறப்பினும் நிலையாய்
மன்னியே உறினும் ஒருகணமேனும் வைகினும் மறைகளாம் தனிமா
நன்னிழலிருந்த பரஞ்சுடர் புரியும் நடம் தரிசிக்கினும் அதனை
உன்னினும் முத்தி வழங்கு காஞ்சியைப் போல் உலகில் வேறொரு நகருளதோ

பாரத தேசமெங்கிலும் முத்தி தரவல்ல 108 ஆலயங்களுள், 20 சிவாலயங்கள் இக்காஞ்சியிலேயே அமையப்பெற்றுள்ளன. அவை முறையே கச்சபேசம், ஏகம்பம், கச்சி மயானம், காயாரோகணம், மாகாளேசம், திருமேற்றளி, அனேகதங்காபதம், கடம்பர் கோயில், பணாதரேசம், மணிகண்டேசம், வராகேசம், சுரகரேசம், பரசுராமேசம், வீரட்டகாசம், வேதநூபுரம் (திருமாகறல்), உருத்திரேசம், இந்திராலயம் (கச்சிநெறிக் காரைக்காடு), நான்முக சங்கரம், திருமால்பேறு, திருவோத்தூர் தலங்களாகும். 
-
(திருநகரப் படலம் - திருப்பாடல் 235):
கச்சபாலயம் ஏகம்பமே மயானம் கவின்கொள் காரோணம் மாகாளம்
பச்சிமாலயநல் அநேகபம் கடம்பை பணாதரம் மணீச்சரம் வராகம்
மெய்ச்சுரகரம் முன்னிராமம் வீரட்டம் வேதநூபுரம் உருத்திரர்கா
வச்சிரன்நகரம் பிரம மாற்பேறு மறைசையாம் சிவாலயம் இருபான்
-
(குறிப்பு: இவற்றுள் கடம்பர் கோயில் 'காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் வெங்கச்சேரிக்கு அடுத்தும்', பரசுராமேசம் 'காஞ்சீபுரம் அரக்கோணம் சாலையில் பள்ளூரிலும்', வராகேசம் 'காஞ்சிக்கு மேற்கேயுள்ள தாமலிலும்', நான்முக சங்கரம் 'காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையிலுள்ள பெருநகரத்திலும்', தேவாரத் தலமான திருமால்பேறு 'காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையிலுள்ள பள்ளூருக்கு மேற்கிலும்', தேவாரத் தலமான திருவோத்தூர் 'செய்யாற்றுக்கு அடுத்துள்ள திருவத்திபுரத்திலும்', தேவாரத் தலமான வேதநூபுரம் (திருமாகறல்) 'காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில், காஞ்சிபுரத்திலிருந்து 15 கி.மீ  தொலைவிலும்', இந்திராலயம் என்பது தேவாரத் தலமான கச்சிநெறிக் காரைக்காட்டிலும் அமைந்துள்ளது. மற்ற 12 தலங்களும் சிவ காஞ்சியின் எல்லைக்குள்ளையே அமையப் பெற்றுள்ளன).

No comments:

Post a Comment