விநாயகப் பெருமானின் தோற்றம் (கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணம் விவரிக்கும் அற்புத நிகழ்வு):

(1)
திருக்கயிலையில், சோலையொன்றில் அமைந்துள்ள ஓவிய மண்டபத்திற்குச் சிவபெருமானும் அம்பிகையும் எழுந்தருளிச் செல்கின்றனர். அங்குள்ள ஓவியங்கள் ஒவ்வொன்றையும் உமையன்னை பார்த்தவாறு, நடந்து செல்கின்றாள். 
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம் - திருப்பாடல் 141)
எண்தகு பெருநசை எய்தி ஐம்புலன்
விண்டிடல் இன்றியே விழியின் பாற்படக்
கண்டனள் கவுரி அக்கடிகொள் மண்டபம் 
கொண்டிடும் ஓவியக் கோலம் யாவுமே

(2)
பிரணவ மந்திரம் பொறிக்கப் பெற்றிருக்கும் ஓவியமொன்றினை அம்பிகை பார்த்திருக்கையில், சிவபரம்பொருளின் திருவருளால், மூலத்தனி எழுத்தான அப்பிரணவமானது இரு யானைகளின் வடிவுகொண்டு சங்கமிக்கின்றது, 
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம் - திருப்பாடல் 142)
பாங்கரில் வருவதொர் பரமன் ஆணையால்
ஆங்கதன் நடுவணில் ஆதியாகியே
ஓங்கிய தனியெழுத்(து) ஒன்றிரண்டதாய்த்
தூங்கு கைம்மலைகளில் தோன்றிற்றென்பவே

(3)
அக்கணத்திலேயே அப்பிரணவத்திலிருந்து, மூன்று திருக்கண்களோடும், ஐந்து திருக்கரங்களோடும், மும்மதங்கள் பொழியும் திருவாயுடனும், யானையின் திருமுகத்துடனும், சிறுவனின் திருவுருவில் நம் விநாயகப் பெருமான் தோன்றி வெளிப்படுகின்றார், 
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம் - திருப்பாடல் 148)
அக்கணத்தாயிடை ஐங்கரத்தவன் அருள்
முக்கண் நால்வாயினான் மும்மதத்தாறு பாய்
மைக்கரும் களிறெனும் மாமுகத்தவன் மதிச்
செக்கர்வார் சடையன்ஓர் சிறுவன் வந்தருளினான்

(4)
அந்நிலையில் தோன்றிய விக்னேஸ்வர மூர்த்தி, ஒருமுகப்பட்ட உணர்வினரால் மட்டுமே அறிந்துணர்தற்குரிய பெற்றியை உடையவர், எங்கும் யாவிலும் நீக்கமற நிறைந்திருக்கும் தன்மையர், யாவராலும் தொழப்பெறும் பொன்போலும் திருவடிகளைக் கொண்டருள்பவர், சிவபெருமானே என்று கருதத்தக்க வகையில் திருவருள் புரிந்தருளும் அளப்பரிய பெருமையை உடையவர், 
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம் - திருப்பாடல் 149)
ஒருமையால் உணருவோர் உணர்வினுக்(கு) உணர்வதாம்
பெருமையால் எங்கணும் பிரிவரும் பெற்றியான்
அருமையால் ஏவரும் அடிதொழும் தன்மையான்
இருமையாம் ஈசனே என்ன நின்றருளுவான்

(5)
நான்மறைகளில் போற்றப்பெறும் மெய்ப்பொருளான சிவபரம்பொருள், அண்டசராசரங்களிலுள்ள உயிர்களின் அறியாமை இருளைப் போக்கியருளும் பொருட்டும், அவர்தம் இடர்களைக் களைந்தருளும் பொருட்டும், தாமே ஒரு திருவடிவு கொண்டு தோன்றிய மூர்த்தியே நம் விநாயகக் கடவுளாவார் (சிவபரம்பொருளுக்கும், விநாயகப் பெருமானுக்கும் பேதமின்மையைப் பறைசாற்றும் அற்புதத் திருப்பாடலிது). 
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம் - திருப்பாடல் 150)
மருளறப் புகலு(ம்) நான்மறைகளில் திகழுமெய்ப்
பொருளெனப்படும்அவன் புவனமுற்றவர்கள் தம்
இருளறுத்(து)அவர் மனத்திடர் தவிர்த்தருள ஓர்
அருள் உருத்தனை எடுத்(து) அவதரித்துளன் அவன்

No comments:

Post a Comment