காஞ்சியில் விகடசக்கர விநாயகர் எங்கு கோயில் கொண்டுள்ளார்?

கச்சியப்ப சிவாச்சாரியார் தம்முடைய கந்தபுராண நூலினை விகட சக்கர விநாயகரைப் போற்றிப் பணிந்த பின்னரே துவங்குகின்றார்,
-
(விநாயகர் காப்பு - திருப்பாடல் 1)
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர வின்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்

பிரணவ முகத்தினரான இம்மூர்த்தி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலுள், இறைவரின் திருச்சன்னிதிக்கு செல்லும் பிரதான வழியில் அல்லாமல், ஆயிரங்கால் மண்டபத்தில்; இறைவர் விழாக்காலத்தில் வெளிவரும் கோபுர வாயிலுக்கு இடப்புறம் எழுந்தருளி இருக்கின்றார். கச்சி ஏகம்பமெனும் இவ்வாலயத்திற்குச் செல்லுகையில் அவசியம் 'விகட சக்கர' விநாயகக் கடவுளைத் தரிசித்துப் பணிந்து நலமெலாம் பெற்று வாழ்வோம்,
-
(விநாயகர் காப்பு - திருப்பாடல் 2)
உச்சியின் மகுட மின்ன ஒளிர்தர நுதலின்ஓடை
வச்சிர மருப்பின் ஒற்றை மணிகொள் கிம்புரி வயங்க
மெய்ச்செவிக் கவரி தூங்க வேழமா முகம் கொண்டுற்ற
கச்சியின் விகட சக்ர கணபதிக்(கு) அன்பு செய்வாம்
-
(சொற்பொருள்: நுதலின் ஓடை - நெற்றிப் பட்டம், மருப்பு - தந்தம், கிம்புரி - தந்தத்தின் பூண், தூங்க - அசைய)

No comments:

Post a Comment