அருணகிரிநாதர் அருளியுள்ள பாடல் தொகுப்புகள்:

அருணகிரியார் அருளியவை மொத்தம் 16,000 திருப்புகழ் திருப்பாடல்கள். எனினும் திருவருளால் நமக்கின்று கிடைக்கப் பெற்றுள்ளவையோ 1340 திருப்பாடல்களே (ஆதாரபூர்வமாக அறியப் பெற்றுள்ளவை 1326 திருப்பாடல்களே எனினும் பின்னாளில் 14 புதிய திருப்பாடல்களும் கிடைக்கப் பெற்றுள்ளன)

திருப்புகழோடு பின்வரும் பாடல் தொகுப்புகளையும் அருணை மாமுனிவர் அருளிச் செய்துள்ளார், 
1. கந்தர் அலங்காரம் (108 திருப்பாடல்கள்)
2. கந்தர் அந்தாதி (102 திருப்பாடல்கள்)
3. கந்தர் அனுபூதி (52 திருப்பாடல்கள்)
4. வேல் விருத்தம் (10 திருப்பாடல்கள்)
5. மயில் விருத்தம் (12 திருப்பாடல்கள்)
6. சேவல் விருத்தம் (12 திருப்பாடல்கள்)
7. திருவகுப்பு (25 திருப்பாடல்கள்)
8. திருஎழுகூற்றிருக்கை (1 திருப்பாடல்)

அருணகிரிநாதர் (சன்னிதி - சென்னை வடபழனி முருகன் திருக்கோயில்):





அருணகிரிநாதர் குருபூஜைத் திருநாள் (பௌர்ணமி திதியோடு கூடிய ஆனி மூலம்):

15ஆம் நூற்றாண்டில் தோன்றிய தனிப்பெரும் குருநாதர். திருவண்ணாமலையையே அவதாரத் தலமாகவும்; தடுத்தாட்கொள்ளப் பெற்ற தலமாகவும்; முத்தித் தலமாகவும் கொண்டு விளங்கும் தகைமையாளர். கந்தவேளின் திருக்கை வேலால் 'ஓம்' என்று நாவில் பொறிக்கப் பெற்ற, மேருமலையினும் மேம்பட்ட தவமுடைய அணுக்கத் தொண்டர். சைவப் பெருஞ்சமயத்தின் வழிநின்று முருக வழிபாட்டினை இன்னுயிரெனப் பேணியதோடு, சைவ வைணவ ஒற்றுமைக்கு தனித்துவமான வழியொன்றினை வகுத்தளித்த அருளாளர்.

அருணகிரிப் பெருமான் கந்தக் கடவுளின் திருவடிப் பேற்றினை பெற்றுய்ந்த திருநாள் 20ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரையில் அறியப்படாமலே இருந்து வந்தது. அதனை அறுமுகக் கடவுளின் திருவருளால் கண்டறிந்து சமய உலகிற்கு அறிவித்துப் பேருபகாரம் புரிந்தருளியவர் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளாவார். 

(தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளை அவர்கள் அருளியுள்ள அருணகிரிநாதர் பாராயணத் துதிகள்)
அந்தாதி இல்லா இறைவனுக்கு அந்தாதி அன்றுரைத்தும்
நந்தா வகுப்பலங்காரம் அவற்கே நனிபுனைந்தும்
முந்தாதரவில் அவன்புகழ் பூதியும் முற்றும் சொன்ன
எந்தாய் அருணகிரிநாதா என்னை நீ ஏன்றருளே!!
-
நெடியான் உகந்த மருகன் திருப்புகழ் நித்தமுமே 
படியார் படித்துப் பரகதி பற்றப் பரிந்தளித்த 
அடியான் அருணகிரிநாதன் அம்பொன் அடிமலர்க்கே 
அடியார் எவரோ அவரேஎம் ஆவிக்(கு) அருந்துணையே 

(தாயுமான சுவாமிகள் திருவாக்கில் அருனை மாமுனிவர்)
ஐயா அருணகிரி அப்பா உனைப்போல் 
மெய்யாக ஓர்சொல் விளம்பினர்யார்?
-
யான்தான் எனல்அறலே இன்பநிட்டை என்(று)அருணைக் 
கோன்தான் உரைத்தமொழி கொள்ளாயோ?
-
கந்தரநுபூதி பெற்றுக் கந்தர்அனுபூதி சொன்ன 
எந்தையருள் நாடியிருக்கு நாள் எந்நாளோ!

(தணிகைச் சந்நிதிமுறையின் திருவாக்கில் அருணை வள்ளல்)
கருப்புகழாம் பிறசமயக் கதைகேளா(து) அனுதினமுன் 
திருப்புகழை உரைப்போர்க்குச் சித்தியெட்டும் எளிதாமே 

(ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியுள்ள அருணகிரிநாதர் பாராயணத் துதி)
அருவம் ஒரு நான்காகி உருவம் ஒரு நான்காகி அவைஇரண்டும்
மறுவியுள உருவருவம் ஒன்றாகி முத்திறமும் வழுத்தவொண்ணாப் 
பெருவெளிக்கும் அப்பாலாய் உள்ள பொருள் ஈதெனவே பெரிதும் சேயோன் 
ஒருவனையே புகழ்ந்த அருள்அருணகிரி சேவடிப்போது உளத்துள் வைப்பாம்!!!

(திருமுருக வாரியார் சுவாமிகள் அருளியுள்ள அருணகிரிநாதர் பாராயணத் துதி):
விருப்புடன் உபய சரணமென் மலரை வேண்டுவார் வேண்டுவதளிக்கும்
பொருப்புகள் தோறும் நின்றருள் ஒருவன் புகழினை அகநெகப் புகன்று
கருப்புகுதாத கதிதனைக் காட்டும் கலையுணர் புலவர்கள் திலகம்
திருப்புகழ் அருணகிரி எமதடிகள் திருவடி குருவடிவாமே.

அருணகிரிநாதர் (ஆடும் பரிவேல் அணிசேவலென - ஒலிப்பதிவு)

(கந்தர் அனுபூதி - திருப்பாடல் 1)
ஆடும் பரிவேல் அணி சேவலெனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில் 
சாடும் தனியானை சகோதரனே!!!

(குறிப்பு: பொதுவில் அருளாளர்களின் குருபூஜைத் திருநாளுக்கு திருநட்சத்திரத்தை மட்டுமே கணக்கில் கொள்வது மரபு. இருப்பினும் நம் அருணகிரிப் பெருமானுக்கு பௌர்ணமித் திதியோடு கூடிய மூல நட்சத்திரத்தைக் குருபூஜைத் திருநாளாக ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அறிவித்து அருளியுள்ளார், அதனை நம் வாரியார் சுவாமிகளும் வழிமொழிந்துள்ளார்). 

வாரியார் சுவாமிகள் (குருபூஜைத் திருநாள் - ஐப்பசி ஆயில்யம்)

வேலூர் மாவட்டத்திலுள்ள பரம புண்ணியத் தலம் காங்கேயநல்லூர், சென்னையிலிருந்து சுமார் 2 1/2 மணி நேர பயணத் தொலைவில் அமைந்துள்ளது. காங்கேயக் கடவுளான நம் கந்தப் பெருமானுக்கு பெருவிருப்புடைய தலமாக விளங்குவதால் காங்கேயநல்லூர். திருமுருக வாரியார் சுவாமிகளின் அவதாரத் தலம். நம் சுவாமிகள் நவம்பர் 7 1993 அன்று சிவமாம் பேறு பெற்றுக் குகசாயுச்சியப் பெருநிலையை எய்திய பின்னர் சிவத்தொண்டால் பழுத்திருந்த அப்பெருமகனாரின் திருமேனியை இத்தலத்தில் சமாதி கொள்ளச் செய்து அவ்விடத்திலேயே அழகிய பிருந்தாவன வளாகமொன்றையும் உருவாக்கினர்.

ஏகாந்தமான சூழலில் அமையப் பெற்றுள்ள இச்சமாதிக் கோயிலில் சுவாமிகள் தனக்கே உரித்தான அதீத கருணை ததும்பும் திருப்பார்வையோடும், தெய்வீகப் புன்னகையுடனும் அதி ஆச்சர்யமான திருக்கோலத்தில் பிருந்தாவனக் கருவறையில் எழுந்தருளி இருக்கின்றார். சுவாமிகளின் சமாதிக் கோயிலுக்கு நேரெதிரில் கந்தக் கடவுளின் புராதனத் திருக்கோயில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் ஒவ்வொரு அணுவிலும் சுவாமிகளின் திருப்பணி பொதிந்துள்ளது. 
அடியவர் வழிபாடு நம் இந்து தர்மத்தில் மிகமுக்கிய இடத்தினை வகிக்கின்றது. அடியவர் வழிபாடு அடியவர்களை அடைவதோடு மட்டுமல்லாது அப்பெருமக்களின் உள்ளத்தில் எழுந்தருளியுள்ள சிவபரம்பொருளையும் சென்று சேர்கின்றது என்று திருமந்திரம் அறுதியிடுகின்றது. 

நேரம் அமைத்துக் கொண்டு காங்கேயநல்லூர் சென்று ஆறுமுகக் கடவுளையும், அப்பெருமானின் திருவடிகளில் நிலை கொண்டுள்ள நம் சுவாமிகளையும் தரிசித்துப் பணிவோம். சுவாமிகளின் தரிசனம் பரம புண்ணியமானது; வல்வினைகளை சுட்டெரிக்க வல்லது; சீரிய பக்தியையும் நல்லொழுக்கத்தையும் ஆன்ம பக்குவத்தையும் ஏனைய நலன்கள் அனைத்தையும் நல்க வல்லது. 
-
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!

வாரியார் சுவாமிகள் (காங்கேயநல்லூர் பிருந்தாவன வளாகம்):

வேலூர் மாவட்டத்தில், சென்னையிலிருந்து சுமார் 2 1/2 மணி நேர பயணத் தொலைவில் அமைந்துள்ளது  காங்கேயநல்லூர். மிகத் தொன்மையான முருகன் திருக்கோயிலொன்று விளங்கி வரும் இப்புண்ணிய பூமியே நம் வாரியார் சுவாமிகளின் அவதாரத் தலமாகவும் திகழ்கின்றது. 
சுவாமிகள் 1993ஆம் ஆண்டு ஆறுமுகக் கடவுளின் திருவடிகளை அடைந்த பின்னர் அப்பெருமகனாரின் திருமேனியைக் காங்கேயநல்லூர் முருகன் ஆலயத்திற்கு நேரிதிரில் சமாதி கொள்ளச் செய்கின்றனர். ('சரவண பவன் உணவகத்தினர்' கைங்கர்யத்தினால்) அவ்விடத்திலேயே அழகியதொரு  பிருந்தாவன வளாகமும் உருவாக்கப் பெறுகின்றது. இதன் கருவறையில் சுவாமிகள் அமர்ந்த திருக்கோலத்தில், அதீத கருணை ததும்பும் திருப்பார்வையோடும், தெய்வீகப் புன்னகையுடனும் அற்புதத் தன்மையில் எழுந்தருளி இருக்கின்றார். காண்பதற்கரிய திருக்காட்சி.
இவ்வளாகத்தின் பின்புறம், 'சரவண பவன் உணவகத்தினர்' தங்கும் விடுதியொன்றினையும் (குறைந்த கட்டண சேவையில்) அமைத்துள்ளனர். அனுதினமும் காலை 11.30 மணி அளவில் நடந்தேறும் தீபாராதனை அவசியம் தரிசிக்க வேண்டிய நிகழ்வு. இதன் முடிவில் 'சரவண பவன் உணவகம்' சார்பாக, அங்குள்ளோர் அனைவருக்கும் பிரசாத உணவு வழங்கப் பெற்று வருகின்றது.
சுவாமிகளுக்குப் பன்னிரு சைவத் திருமுறைகள் மற்றும் அருணகிரியாரின் திருப்பாடல்களில் அதீத ஈடுபாடு ஆதலின் இவ்வளாகத்தில் சுவாமிகளின் திருமுன்பு அமர்ந்து, தேவார; திருவாசக; திருப்புகழ் திருப்பாடல்களைப் பாராயணம் புரிந்து வணங்கி, குருவருளோடு வேலாயுதக் கடவுளின் திருவருளையும் ஒருசேரப் பெற்று மகிழ்வோம்!!!
-
(கந்தர் அலங்காரம் - திருப்பாடல் 102)
திருவடியும் தண்டையும் சிலம்பும் சிலம்பூடுருவப்
பொரு வடிவேலும் கடம்பும் தடம்புயம் ஆறிரண்டும்
மருவடிவான வதனங்கள்ஆறும் மலர்க் கண்களும் 
குருவடிவாய் வந்தென் உள்ளம் குளிரக் குதிகொண்டவே!!!


வாரியார் சுவாமிகள் (திருக்குறளில் ஸ்ரீவைகுந்தம் - ஒலிப்பதிவு)

(திருமுருக வாரியார் சுவாமிகளின் விரிவுரையிலிருந்து சில மணித்துளிகள்):
-
தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு!!!