அருணகிரிநாதர் (திருவடி தீட்சை பெற்ற திருத்தலங்கள்):

நாவுக்கரசு சுவாமிகளுக்கு நல்லூரிலும், சுந்தரனாருக்குத் திருவதிகைக்கு அருகிலுள்ள சித்தவடமடத்திலும்  சிவபரம்பொருள் தன் திருவடியினைச் சூட்டி அருள் புரிந்த அற்புத நிகழ்வுகளைப் பெரிய புராணத்தில் தெய்வச் சேக்கிழார் விவரித்துப் போற்றுகின்றார். 

அம்முறையில் நம் அறுமுகக் கடவுள் (விண்ணப்பம் ஏதுமின்றித் தானாகவே சென்று) திருவண்ணாமலையிலும் பின்னர் வயலூரிலும் தன் திருவடியினை திருப்புகழ் வேந்தரின் சென்னிமிசை சூட்டிப் பேரருள் புரிகின்றான். அத்துடன் அருணகிரியார் நிறைவு கண்டுவிடவில்லை, (இவ்வுலக மாயையினின்றும் முற்றிலுமாய்த் தொடர்பற) பழனி; சுவாமிமலை; திருத்தணி ஆகிய 3 திருத்தலங்களிலும் மீண்டுமொரு முறை தனை ஆளுடைய கந்தப் பெருமானிடம் அத்திருவடிப் பேற்றினை உரிமையுடன் வேண்டி விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்கின்றார்.

இனி கீழ்குறித்துள்ள 5 திருத்தலங்களில் அருணகிரியாரின் திருவடி தொடர்பான விண்ணப்பப் பாடல் வரிகளோடு, அவ்விருப்பம் முற்றுப் பெற்றதற்கான அகச் சான்றுகளையும் உணர்ந்து மகிழ்வோம்,

1. (திருவண்ணாமலையில் திருவடி தீட்சை)

('முருகு செறிகுழல் - திருவண்ணாமலை திருப்புகழ்')
 அருணை நகர்மிசை கருணையொடருளிய
          மவுன வசனமும் இருபெரு சரணமும் ....மறவேனே

2. (வயலூரில் திருவடி தீட்சை)

('குருவும் அடியவர்' - நெரூர் திருப்புகழ்)
வயலி நகரியில் அருள்பெற மயில்மிசை
     உதவு பரிமள மதுகர வெகுவித
          வனச மலரடி கனவிலு(ம்) நனவிலு(ம்) ....மறவேனே

3. (பழனியில் திருவடி தீட்சை)

('குறித்தமணிப் பணித்துகிலை' - பழனித் திருப்புகழ் - தீட்சைக்கு விண்ணப்பம்)
புலத்தலையில்  செலுத்துமனப்
     ப்ரமத்தையறப் ப்ரசித்தமுறப்
          புரித்தருளித் திருக்கழலைத் ....தருவாயே

('களபமுலையைத் திறந்து' - பழனித் திருப்புகழ் - தீட்சை அடையப் பெறுதல்)
இப முகவனுக்குகந்த இளையவ மருக் கடம்ப
     எனதுதலையில் பதங்கள் அருள்வோனே

4. (திருத்தணியில் திருவடி தீட்சை)

('ஏது புத்தி ஐயா' - திருத்தணித் திருப்புகழ் - தீட்சைக்கு விண்ணப்பம்)
பாதம் வைத்திடையா தெரித்தெனை
     தாளில் வைக்க நியே மறுத்திடில்
          பார் நகைக்குமையா தகப்பன்முன் ...மைந்தனோடி

('கொந்துவார் குரவடியினும்' - திருத்தணித் திருப்புகழ் - தீட்சை அடையப் பெறுதல்)
சஞ்சரீகரிகர முரல் தமனிய
     கிண்கிணீமுக இதபத யுகமலர்
          தந்த பேரருள் கனவிலும் நனவிலும் ...மறவேனே

5. (சுவாமிமலையில் திருவடிப் பேறு)

(இத்தலத்தில் திருவடி தொடர்பான நான்கைந்து விண்ணப்பப் பாடல்களுண்டு)

('ஆனனம் உகந்து தோளொடு' - சுவாமிமலைத் திருப்புகழ் - திருவடி தீட்சைக்கு விண்ணப்பம்)
வாரிஜ பதங்கள் நாயடியேன் முடிபுனைந்து போதக
     வாசகம் வழங்கி ஆள்வதும் ஒருநாளே

('செகமாயை உற்றென்' - சுவாமிமலைத் திருப்புகழ் - திருவடி தரிசனம் பெறுதல்)
தகையாதெனக்குன் அடிகாண வைத்த
     தனிஏரகத்தின் ....முருகோனே

அருணகிரிநாதர் (சிதம்பரத்தில் கந்தக் கடவுள் தோழமை தந்து அருள் புரிதல்):

நமக்கின்று கிடைத்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுள், பின்வரும் தில்லைத் திருப்புகழொன்றில் மட்டுமே நம் அருணகிரிப் பெருமானார் அறுமுக தெய்வத்தைத் 'தோழா' என்று உரிமையோடு குறிப்பிட்டுப் போற்றுகின்றார். இனி இப்பதிவில் 'சக மார்க்கம்' எனும் தோழமை நெறி குறித்துச் சிறிது சிந்திப்போம்.

இப்புவியில் தோன்றும் ஒவ்வொரு உயிர்க்கும் தாய்;தந்தையர் உண்டு ஆதலின் இறைவர்; இறைவியை அம்மையப்பராகக் கொண்டு பக்தி புரிந்து வழிபடும் சத்புத்ர மார்க்கத்தினை உள்வாங்கிப் பின்பற்றுதல் எளிது. 

தத்துவ நோக்கில் ஆன்மாக்கள் அனைவரும் பரம்பொருளான அம்பிகை பாகனாருக்கு அடிமைத்திறம் பூண்டொழுகுபவை என்றிருப்பினும், உலகியல் வழக்கில் எவரொருவருக்கும் 'நாம் சிவமாகிய பரம்பொருளுக்கு அடிமை' எனும் உணர்வு இயல்பிலேயே சித்தித்து விடுவதில்லை. 'சிவனடியார் அல்லது சிவபக்தர்' எனும் புரிதலையே முதற்கண் எய்தப் பெறுகின்றோம். ஆதலின் இறைவரைத் தலைவராகவும் தன்னை அடிமையாகவும் கொண்டொழுகும் தாச மார்க்கம் என்பது தத்துவப் புரிதலினாலும்; சமயப் பயிற்சியினாலும்; குருவருளாலும் மட்டுமே சித்திக்க வல்லது. 

இறுதியாய் இறைவராக அளித்து அருளினாலன்றி 'தோழமை உணர்வு சித்திக்க வாய்ப்பேயில்லை' என்பது கண்கூடு. 63 நாயன்மார்களுள் சுந்தரனாருக்கு மட்டுமே அவ்வரிய பேறு வாய்க்கப் பெறுகின்றது. அதுவும் வன்தொண்டனார் அப்பேற்றினை விண்ணப்பித்துப் பெறவில்லை, திருவாரூர் மேவும் மறைமுதல்வர் தாமாக முன்வந்து 'தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம்' என்று விண்ணொலியாய் அறிவித்து அருள் புரிகின்றார். 

'தோழமை உணர்வையும் அடிமைத் திறத்தினால் மட்டுமே அடைய இயலும்' என்பதொரு அரிய நுட்பம், தோழமை ஒரு கூடுதல் உரிமையே எனினும் அதனைக் கூட்டுவிப்பது 'அதீத அடிமைத்திறம்' எனும் உத்தம நிலையே. முதற் திருப்பதிகத்திலேயே சுந்தரனார் 'அத்தா உனக்காளாய் இனிஅல்லேன் எனலாமே' என்று 'தன்னை அடிமை' என்றே பிரகடனப்படுத்திக் கொள்வதால் இதனை உணரப் பெறலாம். 

திருப்புகழ் மாமுனிவரான நம் அருணகிரியாரும் எண்ணிறந்த திருப்பாடல்களில் தன்னை 'அடிமை' என்றே அடையாளப் படுத்திக் கொள்கின்றார் ('அமிர்தகவித் தொடைப்பாட அடிமை தனக்கருள்வாயே').

ஆதலின் சிதம்பர ஷேத்திரத்தில் சிவகுமரனான நம் கந்தப் பெருமான் அருணகிரியாருக்குத் தம்முடைய நடனக் கோல தரிசனத்தோடு, தோழமை பேற்றினையும் அளித்து அருள் புரிந்துள்ளது தெளிவு. 'தூயா துதித்தவர்கள் நேயா எமக்கமிர்த தோழா கடப்பமலர் அணிவோனே' என்று பின்வரும் திருப்பாடலில் நெகிழ்ந்து போற்றுகின்றார் திருப்புகழ் வேந்தர்,

தானா தனத்ததன தானா தனத்ததன
     தானா தனத்ததன ...தனதான

நாடா பிறப்பு முடியாதோ எனக்கருதி
     நாயேன் அரற்றுமொழி ...வினையாயின்

நாதா திருச்சபையின் ஏறாது சித்தமென
     நாலா வகைக்கும் உனதருள்பேசி

வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறி
     வாய்பாறி நிற்குமெனை ...அருள்கூர

வாராய் மனக்கவலை தீராய் நினைத்தொழுது
     வாரேன் எனக்கெதிர் முன் ...வரவேணும்

சூடா மணிப்பிரபை ரூபா கனத்தஅரி
     தோல்ஆசனத்தி உமை ...அருள்பாலா

தூயா துதித்தவர்கள் நேயா எமக்கமிர்த
     தோழா கடப்பமலர் ...அணிவோனே

ஏடார் குழற்சுருபி ஞானாதனத்தி மிகு
     மேராள் குறத்திதிரு ....மணவாளா

ஈசா தனிப்புலிசை வாழ்வே சுரர்த் திரளை
     ஈடேற வைத்தபுகழ் ...... பெருமாளே.

அருணகிரிநாதரின் முற்பகுதி வாழ்வின் நிகழ்வுகள் மெய்யானவையா? (சிவத்திரு. தணிகைமணி அவர்களின் அற்புத விளக்கவுரை):

திருப்புகழ் திருப்பாடல்களை நாமின்று பாராயணம் புரிந்தும் பாடியும் உய்வு பெறுகின்றோம் எனில் அதற்குக் காரணம் இருபெரும் தவசீலர்கள், சிவத்திரு. வ.த. சுப்பிரமணியம் பிள்ளை அவர்கள் மற்றும் அவர்தம் திருக்குமாரரான சிவத்திரு. தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளை அவர்கள். திருப்புகழ் திருப்பாடல்களைத் தங்களது பகீரத பிரயத்தனத்தினால் தேடித் தேடிச் சேகரித்து, பல்வேறு பிரதிகளோடு சரிபார்த்துத் தொகுத்து முதன்முதலில் பதிப்பித்த தனிச்சிறப்பு இவ்விரு பெரியோரையே சாரும். 

திருப்புகழ் உள்ளிட்ட அருணகிரியாரின் பாடல் தொகுப்புகள் யாவற்றிற்கும் முதன்முதலில் உரைகண்டருளியவர் சிவத்திரு. தணிகைமணி அவர்கள். அம்மட்டோ!, 'அருணகிரிநாதர் வரலாறும் நூலாராய்ச்சியும்' மற்றும் அப்பர் சம்பந்தர் தேவாரங்களுக்கான 'தேவார ஒளி நெறி' எனும் ஆய்வுக் கட்டுரைகளையும் இவர் வரைத்தருளியுள்ளார். 'ஒரு பல்கலைக்கழகமே ஒன்றுதிரண்டு செய்திருக்க வேண்டிய அரியதொரு ஆய்வினைத் தனியொருவராக மேற்கொண்ட பெருமகனார் இவர்' என்று சிவத்திரு. வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்கள் தம்முடைய விரிவுரைகள் தோறும் குறிப்பிட்டுப் போற்றி மகிழ்வார். 

தணிகைமணி அவர்கள் ஒருசமயம் திருத்தணித் தலத்தில் கந்தரந்தாதிப் பாடல்களைப் பாராயணம் புரிகையில், இடையில் 59ஆம் திருப்பாடல் விடுபட்டு விடுகின்றது. அன்றிரவே தணிகை வேலவன் கனவில் எழுந்தருளி வந்து, 'எலும்பிச்சப்பழப் பாடலைப் பாட மறந்தனையோ' என்று நினைவூட்டியருளிய நிகழ்வு இவர்தம் தவச்சிறப்பினைப் பறைசாற்றும்.

இனி மேருமலையினும் மேம்பட்ட தவமுடைய நம் அருணகிரிப் பெருமானாரின் முற்பகுதி வாழ்க்கையைப் பற்றிய தணிகைமணி அவர்களின் விளக்கவுரையினை அறிந்துணர்ந்துத் தெளிவுறுவோம். 

*******************************************
சுவாமிகள் மிக்க நன்றியறிவு உள்ளவர். 'காமச் சேற்றில் கிடந்த தம்மை முருகர் கைதூக்கிக் கரை காட்டினரே' என்ற நன்றியறிவு இவர் பாடல்களில் நன்கு பொலிகின்றது. முருகனடியார்களுள் சிறந்த பலரும் 'அருணகிரியார் காம வலையிற் படவில்லை; அடியார்களின் நற்கதிக்காக - மாணிக்கவாசகர் முதலான பெரியோர்கள் பாடினவாறு, ஆசையிற் கொடிதான பெண்ணாசையை உலகோர் விலக்குவதற்காக உபசாரமாகப்  பெண்கள் வலையிற் பட்டேன் எனத் தாமும் கூறினரே ஒழிய வேறில்லை' என்பர். 

எனினும் அருணகிரியார் கூறும் மொழிகளைப் பார்க்கும் பொழுது - உதாரணமாக,

(1)
('வெருட்டி யாட்கொளும்') என்று துவங்கும் திருசிராப்பள்ளி திருப்புகழ்) 
மருட்டி வேட்கைசொல் மொழியினும் விழியினும்
     அவிழ்த்த பூக்கமழ் குழலினு(ம்) நிழலினு(ம்)
          மதிக்கொணாத் தளர்இடையினு(ம்) நடையினு(ம்)...அவமேயான்

மயக்கமாய்ப் பொருள் வரும்வகை க்ருஷிபணு
     தடத்து மோக்ஷமதருளிய பலமலர்
          மணத்த வார்க்கழல் கனவிலு(ம்) நனவிலு(ம்) ...... மறவேனே

(2)
('காமாத்திரமாகி' என்று துவங்கும் விராலிமலைத் திருப்புகழ்)
ஏமாப்பற மோக இயல் செய்து
     நீலோற்பல ஆசில் மலருட(ன்)
          நேராட்ட விநோதமிடும் விழி ...... மடவார்பால்

ஏகாப்பழி பூணு(ம்) மருளற
     நீதோற்றி முனாளும் அடிமையை
          ஈடேற்றுதலால்உன் வலிமையை ...... மறவேனே

(3)
('பாரவித முத்தப் படீர' என்று துவங்கும் கதிர்காமத் திருப்புகழ்)
காமுகன் அகப்பட்ட ஆசையை மறப்பித்த
     கால்களை மறக்கைக்கும் ...... வருமோதான்

(4)
('மின்னினில் நடுக்கமுற்ற' என்று துவங்கும் பொதுத் திருபுகழ்)
கண்ணழிவு வைத்த புத்தி ஷண்முக நினைக்க வைத்த
     கன்மவசம் எப்படிக்கு ...... மறவேனே

'அவர் மெய்மையே பேசும் பெருந்தகையார் ஆதலின் - அவர் தமது சுய சரித்திரத்தையே நாணாது கூறி 'இத்தகைய கீழோனுக்கும் மேலோனாகிய நீ அருள் புரிந்தனையே' என முருகன் கருணையையே வியந்து பாராட்டித் தமது நன்றியறிவை புலப்படுத்தியுள்ளார் - என்பது தெளிவாகத் தெரிகின்றது. 

இதனால் அருணகிரியாரது பெருமை மேலெடுத்துக் காட்டுமே ஒழிய ஒருசிறிதும் தாழ்வு படாது. ஏனெனில் 'அவர் முன்செய்த தபோபலம் எத்துணைச் சிறப்புற்றிருக்க வேண்டும்' என்பது வெள்ளிடை மலை போல விளங்குகின்றது. முருகவேளின் ஆட்கொள்ளும் கருணைத் திறமும் மிகச் சிறப்பாகத் துலங்குகின்றது. 

வரகவி மார்க்கசகாயத் தேவரும் திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழில் 'மாதர்இரு விழியாகும் அம்புக்கும் மதனவேள் வாளிக்கும் நடுவாகியே மாலாகும் அருணகிரி' எனக் கூறியுள்ளனர் அல்லவா?. 
*******************************************

அருணகிரிநாதர் அருளியுள்ள பாடல் தொகுப்புகள்:

அருணகிரியார் அருளியவை மொத்தம் 16,000 திருப்புகழ் திருப்பாடல்கள். எனினும் திருவருளால் நமக்கின்று கிடைக்கப் பெற்றுள்ளவையோ 1340 திருப்பாடல்களே (ஆதாரபூர்வமாக அறியப் பெற்றுள்ளவை 1326 திருப்பாடல்களே எனினும் பின்னாளில் 14 புதிய திருப்பாடல்களும் கிடைக்கப் பெற்றுள்ளன)

திருப்புகழோடு பின்வரும் பாடல் தொகுப்புகளையும் அருணை மாமுனிவர் அருளிச் செய்துள்ளார், 
1. கந்தர் அலங்காரம் (108 திருப்பாடல்கள்)
2. கந்தர் அந்தாதி (102 திருப்பாடல்கள்)
3. கந்தர் அனுபூதி (52 திருப்பாடல்கள்)
4. வேல் விருத்தம் (10 திருப்பாடல்கள்)
5. மயில் விருத்தம் (12 திருப்பாடல்கள்)
6. சேவல் விருத்தம் (12 திருப்பாடல்கள்)
7. திருவகுப்பு (25 திருப்பாடல்கள்)
8. திருஎழுகூற்றிருக்கை (1 திருப்பாடல்)

அருணகிரிநாதர் (சன்னிதி - சென்னை வடபழனி முருகன் திருக்கோயில்):





அருணகிரிநாதர் குருபூஜைத் திருநாள் (பௌர்ணமி திதியோடு கூடிய ஆனி மூலம்):

15ஆம் நூற்றாண்டில் தோன்றிய தனிப்பெரும் குருநாதர். திருவண்ணாமலையையே அவதாரத் தலமாகவும்; தடுத்தாட்கொள்ளப் பெற்ற தலமாகவும்; முத்தித் தலமாகவும் கொண்டு விளங்கும் தகைமையாளர். கந்தவேளின் திருக்கை வேலால் 'ஓம்' என்று நாவில் பொறிக்கப் பெற்ற, மேருமலையினும் மேம்பட்ட தவமுடைய அணுக்கத் தொண்டர். சைவப் பெருஞ்சமயத்தின் வழிநின்று முருக வழிபாட்டினை இன்னுயிரெனப் பேணியதோடு, சைவ வைணவ ஒற்றுமைக்கு தனித்துவமான வழியொன்றினை வகுத்தளித்த அருளாளர்.

அருணகிரிப் பெருமான் கந்தக் கடவுளின் திருவடிப் பேற்றினை பெற்றுய்ந்த திருநாள் 20ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரையில் அறியப்படாமலே இருந்து வந்தது. அதனை அறுமுகக் கடவுளின் திருவருளால் கண்டறிந்து சமய உலகிற்கு அறிவித்துப் பேருபகாரம் புரிந்தருளியவர் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளாவார். 

(தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளை அவர்கள் அருளியுள்ள அருணகிரிநாதர் பாராயணத் துதிகள்)
அந்தாதி இல்லா இறைவனுக்கு அந்தாதி அன்றுரைத்தும்
நந்தா வகுப்பலங்காரம் அவற்கே நனிபுனைந்தும்
முந்தாதரவில் அவன்புகழ் பூதியும் முற்றும் சொன்ன
எந்தாய் அருணகிரிநாதா என்னை நீ ஏன்றருளே!!
-
நெடியான் உகந்த மருகன் திருப்புகழ் நித்தமுமே 
படியார் படித்துப் பரகதி பற்றப் பரிந்தளித்த 
அடியான் அருணகிரிநாதன் அம்பொன் அடிமலர்க்கே 
அடியார் எவரோ அவரேஎம் ஆவிக்(கு) அருந்துணையே 

(தாயுமான சுவாமிகள் திருவாக்கில் அருனை மாமுனிவர்)
ஐயா அருணகிரி அப்பா உனைப்போல் 
மெய்யாக ஓர்சொல் விளம்பினர்யார்?
-
யான்தான் எனல்அறலே இன்பநிட்டை என்(று)அருணைக் 
கோன்தான் உரைத்தமொழி கொள்ளாயோ?
-
கந்தரநுபூதி பெற்றுக் கந்தர்அனுபூதி சொன்ன 
எந்தையருள் நாடியிருக்கு நாள் எந்நாளோ!

(தணிகைச் சந்நிதிமுறையின் திருவாக்கில் அருணை வள்ளல்)
கருப்புகழாம் பிறசமயக் கதைகேளா(து) அனுதினமுன் 
திருப்புகழை உரைப்போர்க்குச் சித்தியெட்டும் எளிதாமே 

(ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியுள்ள அருணகிரிநாதர் பாராயணத் துதி)
அருவம் ஒரு நான்காகி உருவம் ஒரு நான்காகி அவைஇரண்டும்
மறுவியுள உருவருவம் ஒன்றாகி முத்திறமும் வழுத்தவொண்ணாப் 
பெருவெளிக்கும் அப்பாலாய் உள்ள பொருள் ஈதெனவே பெரிதும் சேயோன் 
ஒருவனையே புகழ்ந்த அருள்அருணகிரி சேவடிப்போது உளத்துள் வைப்பாம்!!!

(திருமுருக வாரியார் சுவாமிகள் அருளியுள்ள அருணகிரிநாதர் பாராயணத் துதி):
விருப்புடன் உபய சரணமென் மலரை வேண்டுவார் வேண்டுவதளிக்கும்
பொருப்புகள் தோறும் நின்றருள் ஒருவன் புகழினை அகநெகப் புகன்று
கருப்புகுதாத கதிதனைக் காட்டும் கலையுணர் புலவர்கள் திலகம்
திருப்புகழ் அருணகிரி எமதடிகள் திருவடி குருவடிவாமே.

அருணகிரிநாதர் (ஆடும் பரிவேல் அணிசேவலென - ஒலிப்பதிவு)

(கந்தர் அனுபூதி - திருப்பாடல் 1)
ஆடும் பரிவேல் அணி சேவலெனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில் 
சாடும் தனியானை சகோதரனே!!!

(குறிப்பு: பொதுவில் அருளாளர்களின் குருபூஜைத் திருநாளுக்கு திருநட்சத்திரத்தை மட்டுமே கணக்கில் கொள்வது மரபு. இருப்பினும் நம் அருணகிரிப் பெருமானுக்கு பௌர்ணமித் திதியோடு கூடிய மூல நட்சத்திரத்தைக் குருபூஜைத் திருநாளாக ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அறிவித்து அருளியுள்ளார், அதனை நம் வாரியார் சுவாமிகளும் வழிமொழிந்துள்ளார்).